வாசகர் கேட்கும் கேள்விகள்
சீக்கிரத்தில் யெகோவா எந்த “எண்ணத்தை” தேசங்களின் இதயத்தில் வைப்பார்?
மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்தைப் பற்றி, வெளிப்படுத்துதல் 17:16, 17 இப்படிச் சொல்கிறது: “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும், அந்த விபச்சாரிமீது வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும். பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும். ஏனென்றால், கடவுள் தன்னுடைய எண்ணத்தை அவர்களுடைய இதயங்களில் வைத்தார்; . . . அவர்கள் அந்த ஒரே எண்ணத்தோடு தங்களுடைய அரசாங்கத்தை மூர்க்க மிருகத்திடம் ஒப்படைப்பதற்காக அப்படிச் செய்தார்.” பொய் மதங்களை அழிப்பதற்கான “எண்ணத்தை” தேசங்களின் இதயத்தில் யெகோவா வைப்பார் என்று நம் பிரசுரங்களில் முன்பு சொல்லியிருந்தோம்.
ஆனால், இதில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. “தங்களுடைய அரசாங்கத்தை மூர்க்க மிருகத்திடம்” ஒப்படைப்பதற்கான ‘எண்ணத்தைத்தான்’ யெகோவா தேசங்களுடைய இதயத்தில் வைப்பார். இது எப்படி நடக்கும் என்று நன்றாகப் புரிந்துகொள்ள கீழே இருக்கிற கேள்விகளையும் பதில்களையும் பார்க்கலாம்.
இந்தத் தீர்க்கதரிசனத்தில் வரும் முக்கியமான விஷயங்கள் எதைக் குறிக்கின்றன? அந்த “விபச்சாரி,” “மகா பாபிலோன்” என்றும் அழைக்கப்படுகிறாள். அவள், பொய் மத உலகப் பேரரசைக் குறிக்கிறாள். “கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம்,” ஐ.நா. சபையைக் குறிக்கிறது. இந்த அமைப்பு, உலகத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. முதல்முதலில் 1919-ல் உருவாக்கப்பட்டபோது, அது சர்வதேச சங்கம் என்று அழைக்கப்பட்டது. (வெளி. 17:3-5) ‘பத்துக் கொம்புகள்,’ மூர்க்க மிருகத்துக்கு ஆதரவு கொடுக்கும் எல்லா அரசாங்கங்களையும் குறிக்கின்றன.
விபச்சாரிக்கும் கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அந்த விபச்சாரி, மூர்க்க மிருகத்தின் ‘மேல் உட்கார்ந்துகொண்டு’ இருக்கிறாள். அந்த மிருகத்துக்கு அவளுடைய ஆதரவைக் கொடுக்கிறாள். அதைக் கட்டுப்படுத்துவதற்குக்கூட முயற்சி பண்ணுகிறாள்.
விபச்சாரிக்கு என்ன நடக்கும்? மூர்க்க மிருகமும், அதற்கு ஆதரவு கொடுக்கும் பத்துக் கொம்புகளும், ‘அந்த விபச்சாரிமீது வெறுப்படையும்.’ வெறுப்பைக் காட்டுவதற்காக அவளுடைய சொத்தையெல்லாம் சூறையாடும்; அவளுடைய அக்கிரமங்களையெல்லாம் வெட்டவெளிச்சமாக்கும். யெகோவாவின் நியாயத்தீர்ப்பை அவை நிறைவேற்றும்; அதாவது, அவளை முழுமையாக அழித்துவிடும். (வெளி. 17:1; 18:8) பொய் மத அமைப்புகளுக்கு அதுதான் முடிவாக இருக்கும். ஆனால், அது நடப்பதற்கு முன்பு, மனித சரித்திரத்தில் அதுவரைக்கும் நடக்காத ஒரு விஷயத்தை யெகோவா தேசங்களைச் செய்ய வைப்பார்.
தேசங்களை யெகோவா என்ன செய்ய வைப்பார்? யெகோவா அந்தப் பத்துக் கொம்புகளின் இதயத்தில் “தன்னுடைய எண்ணத்தை” வைப்பார். அதாவது, பத்துக் கொம்புகள், ‘தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மூர்க்க மிருகத்துக்கு [ஐ.நா. சபைக்கு] கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை வைப்பார். (வெளி. 17:13) அது சாதாரண விஷயம் கிடையாது! மனித அரசாங்கங்கள் தாங்களாகவே முடிவு செய்து மூர்க்க மிருகத்துக்குத் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் கொடுக்குமா? இல்லை. தீர்க்கதரிசனம் காட்டுகிற மாதிரி, கடவுள்தான் அரசாங்கங்களைத் தூண்டிவிட்டு அப்படிச் செய்ய வைப்பார். (நீதி. 21:1; ஏசாயா 44:28-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) அரசாங்கங்கள் தங்களுடைய அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்குமா? இல்லை. இது திடீரென்று, சட்டென்று நடக்கும்! அதிகாரம் கிடைத்த பிறகு மூர்க்க மிருகம், பொய் மதங்கள்மேல் யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும். அதை முழுமையாக அழித்துப்போட்டுவிடும்!
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்? உலக அரசாங்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஐ.நா. சபைக்கு தங்கள் ஆதரவைக் கொடுப்பதுபோல் செய்திகள் வரும் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. திடுதிப்பென்று தேசங்களுடைய இதயத்தில், தங்கள் அதிகாரத்தை மூர்க்க மிருகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை யெகோவா வைப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம். அது நடக்கும்போது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதுவரைக்கும் நாம் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.” (1 தெ. 5:6) ஏனென்றால் சீக்கிரத்தில் திடீர் மாற்றங்கள் நடக்கப்போகின்றன!