எண்ணாகமம்
34 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+
3 உங்களுடைய தெற்கு எல்லை, ஏதோம் தேசத்தை ஒட்டியுள்ள சீன் வனாந்தரம் தொடங்கி கிழக்கே உப்புக் கடலின்* கடைசி வரைக்கும் போகும்.+ 4 அங்கிருந்து அது திசைதிரும்பி, அக்கராபீம் மேட்டுக்குத்+ தெற்குப் பக்கமாகச் சுற்றி, சீன் பகுதியைத் தாண்டி, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்குப் பக்கத்தை அடையும். அங்கிருந்து ஆத்சார்-ஆதார்+ பகுதிக்குப் போய் அஸ்மோன் பகுதியை அடையும். 5 பின்பு, அஸ்மோனில் திசைதிரும்பி எகிப்தின் பள்ளத்தாக்குக்கு* போய், கடைசியாக கடலில்* முடிவடையும்.+
6 உங்களுடைய மேற்கு எல்லை, பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதியும்தான். இதுதான் உங்களுடைய மேற்கு எல்லை.+
7 உங்களுடைய வடக்கு எல்லை, பெருங்கடல் தொடங்கி ஓர் என்ற மலைவரை போகும். 8 பின்பு, அது அந்த ஓர் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரையிலும் சேதாத் வரையிலும் போகும்.+ 9 அதன்பின், சிப்ரோன் வரையில் போய், கடைசியாக ஆத்சார்-ஏனானில்+ முடிவடையும். இதுதான் உங்களுடைய வடக்கு எல்லை.
10 உங்களுடைய கிழக்கு எல்லை, ஆத்சார்-ஏனான் தொடங்கி சேப்பாம் வரையில் போகும். 11 அதன்பின், சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கே உள்ள ரிப்லா வரையில் போகும். பின்பு, கீழே போய் கின்னரேத் கடலின்*+ கிழக்குப் பக்கத்தைத் தாண்டிப் போகும். 12 அதன்பின், யோர்தானுக்குப் போய், கடைசியில் உப்புக் கடலில் முடிவடையும்.+ இதுதான் உங்கள் தேசமும்+ அதன் எல்லைகளும்’” என்றார்.
13 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக்கொள்ள வேண்டிய+ தேசம் இதுதான். ஒன்பதரை கோத்திரங்களுக்கு இதைப் பிரித்துக் கொடுக்கும்படி யெகோவா கட்டளை தந்திருக்கிறார். 14 ரூபன் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும், காத் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் ஏற்கெனவே பங்கை வாங்கிக்கொண்டார்கள். அவர்களோடு மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்.+ 15 யோர்தானுக்கு இந்தப் பக்கத்திலே எரிகோவின் கிழக்கில், இந்த இரண்டரை கோத்திரத்தார் ஏற்கெனவே தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்”+ என்றார்.
16 பின்பு யெகோவா மோசேயிடம், 17 “குருவாகிய எலெயாசாரும்,+ நூனின் மகனாகிய யோசுவாவும்+ அந்தத் தேசத்தை உங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள். 18 நிலத்தைப் பங்குபோடுவதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ 19 நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் இவர்கள்தான்: யூதா கோத்திரத்திலிருந்து,+ எப்புன்னேயின் மகன் காலேப்.+ 20 சிமியோன் கோத்திரத்திலிருந்து,+ அம்மியூத்தின் மகன் ஷெமுவேல். 21 பென்யமீன் கோத்திரத்திலிருந்து,+ கிஸ்லோனின் மகன் எலிதாத். 22 தாண் கோத்திரத்திலிருந்து,+ யொக்லியின் மகனும் தலைவருமான புக்கி. 23 யோசேப்பின் மகனாகிய+ மனாசேயின் கோத்திரத்திலிருந்து,+ எபோத்தின் மகனும் தலைவருமான அன்னியேல். 24 யோசேப்பின் மகனாகிய எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து,+ சிப்தானின் மகனும் தலைவருமான கேமுவேல். 25 செபுலோன் கோத்திரத்திலிருந்து,+ பர்னாக்கின் மகனும் தலைவருமான எலிசாப்பான். 26 இசக்கார் கோத்திரத்திலிருந்து,+ ஆஸானின் மகனும் தலைவருமான பல்த்தியேல். 27 ஆசேர் கோத்திரத்திலிருந்து,+ செலோமியின் மகனும் தலைவருமான அகியூத். 28 நப்தலி கோத்திரத்திலிருந்து,+ அம்மியூத்தின் மகனும் தலைவருமான பெதாக்கேல்” என்றார். 29 இவர்கள்தான் கானான் தேசத்தை இஸ்ரவேலர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தார்.+