கடைசி இராப் போஜனம்—அது என்ன?
“கடைசி இராப் போஜனம்” என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் உங்கள் மனதுக்கு வருவது என்ன? இத்தாலியில் மிலான் என்ற இடத்தில் லியானார்டோ டா வின்ஸி (1452-1519) என்பவர் வரைந்த மிகப் பிரபலமான சுவரோவியமே அநேகரின் மனதுக்கு வரும். பல நூற்றாண்டுகளாக, ஓவியர்கள், எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு கடைசி இராப் போஜனம் என்ற இந்தத் தலைப்பு மிகவும் பிடித்தமானதாக இருந்திருக்கிறது.
ஆனால் இராப் போஜனம் என்பது என்ன? 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறவர்களுக்கு அதன் முக்கியத்துவம்தான் என்ன? இது கர்த்தருடைய இராப் போஜனம் என்றும்கூட அழைக்கப்படுகிறது; தம் தியாக மரணத்துக்கு முந்தின மாலையில் உண்மையுள்ள சீஷர்களோடு இயேசு கிறிஸ்து சாப்பிட்ட உணவுதான் இந்த இராப் போஜனம் என என்ஸைக்ளோப்பீடியாக்களும் அகராதிகளும் கூறுகின்றன. இதுவே இயேசு தமது சீஷர்களோடு கடைசியாக சாப்பிட்ட இரவு போஜனம், ஆகவே இது கடைசி இராப் போஜனம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இதை தொடங்கி வைத்தபடியால் கர்த்தருடைய இராப் போஜனம் என அழைப்பதும் பொருத்தமானது.
உயர்ந்த கொள்கைகள் என நினைத்தவற்றிற்காக வரலாறு முழுவதிலும் அநேகர் உயிர்நீத்திருக்கிறார்கள். இவர்களில் சிலரது மரணத்தால் கொஞ்ச பேர் குறுகிய காலத்திற்கு பயனடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் தியாக மரணங்கள் எவ்வளவுதான் பாராட்டத்தக்கதாக இருந்திருந்தாலும், இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தின் முக்கியத்துவத்தோடு ஒப்பிட அவை ஒன்றுமேயில்லை. அதோடு, மனிதவர்க்கத்தின் கொந்தளிப்பான வரலாற்றில் வேறு எந்த மரணமும் உலகளவில் இத்தனை பரவலான தாக்கத்தை உண்டாக்கவும் முடியாது. ஏன்?
இந்தக் கேள்விக்கு விடையளிக்கவும் இராப் போஜனம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை கண்டுபிடிக்கவும் அடுத்துவரும் கட்டுரையை வாசிக்கும்படி உங்களை அழைக்கிறோம்.