படிப்பு 7
முக்கிய கருத்துக்களை வலியுறுத்துதல்
திறமையாக வாசிப்பவர், தனித்தனி வாக்கியங்களையும் அந்தப் பாராவையும் மட்டுமே கவனத்தில் வைப்பதில்லை. அவர் வாசிக்கும்போது, முழு கட்டுரையிலும் உள்ள முக்கிய கருத்துக்களை மனதில் வைக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் வலியுறுத்துகிறார்.
இந்தப் படிகளை பின்பற்றவில்லை என்றால், பேச்சில் முக்கிய கருத்துக்கள் எவையென்றே தெரியாது; எதுவும் தனித்து நிற்காது. பேச்சின் முடிவில், குறிப்பிடத்தக்க கருத்து என எதுவும் நினைவில் இருக்காது.
முக்கிய கருத்துக்களை வலியுறுத்துவதற்கு போதிய கவனம் செலுத்துவது, பைபிள் வாசிப்பை பெரிதும் மேம்படுத்தும். அவ்வாறு வலியுறுத்துவது, பைபிள் படிப்பு நடத்தும்போது அல்லது சபைக் கூட்டத்தின்போது பாராக்களை வாசிக்கையில் அதிக அர்த்தத்தை சேர்க்கும். விசேஷமாக, நம் மாநாடுகளில் சிலசமயம் கொடுக்கப்படும் வாசிப்புமுறை பேச்சுக்களுக்கு இது மிக முக்கியம்.
எப்படி செய்வது. பள்ளியில், பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிக்கும்படி நீங்கள் நியமிக்கப்படலாம். அப்போது எதை வலியுறுத்த வேண்டும்? நீங்கள் வாசிக்கப்போகும் பகுதி ஏதோவொரு மையக் கருத்தின் அல்லது முக்கிய சம்பவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தால், அதை சிறப்பித்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் வாசிக்கப் போவது கவிதையோ உரைநடையோ, நீதிமொழியோ கதையோ அதை நன்றாக வாசித்தால் சபையார் நன்மை அடைவார்கள். (2 தீ. 3:16, 17) இதற்கு, நீங்கள் வாசிக்கப்போகும் பகுதியையும் கேட்போரையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
பைபிள் படிப்பு நடத்தும்போது அல்லது சபைக் கூட்டத்தின்போது ஒரு பிரசுரத்திலிருந்து சத்தமாக வாசிக்க வேண்டுமென்றால், நீங்கள் வலியுறுத்த வேண்டிய முக்கிய கருத்துக்கள் யாவை? கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை முக்கிய கருத்துக்களாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாசிக்கும் பகுதிக்குரிய உபதலைப்போடு சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் வலியுறுத்துங்கள்.
சபையில் பேச்சுக்களை கொடுக்கும்போது ஒரு வார்த்தை விடாமல் அனைத்தையும் எழுதி வைத்து வாசிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என சிபாரிசு செய்கிறோம். இருந்தாலும் சில மாநாடுகளில் வாசிப்புமுறை பேச்சுக்களுக்காக, மான்யுஸ்க்ரிப்ட் தாள்கள் கொடுக்கப்படுகின்றன; எல்லா மாநாடுகளிலும் ஒரே கருத்துக்கள் ஒரே விதமாக அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவ்வாறு கொடுக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட மான்யுஸ்க்ரிப்டுகளில் முக்கிய கருத்துக்களை வலியுறுத்துவதற்கு, பேச்சாளர் முதலாவதாக தகவலை கவனமாக பகுத்தறிய வேண்டும். முக்கிய குறிப்புகள் எவை? இவற்றை அவர் அடையாளம் காண வேண்டும். அவருக்கு சுவாரஸ்யமாக இருக்கும் கருத்துக்கள் மட்டுமே முக்கிய குறிப்புகள் ஆகிவிடாது. பேச்சிற்கு அடிப்படையாக அமைந்துள்ள முக்கிய எண்ணங்களே அவை. சிலசமயங்களில் ஒரு விவரணையை அல்லது நியாயவிவாதத்தை அறிமுகப்படுத்தும் முன்பு ஒரு முக்கிய கருத்து சுருக்கமாக குறிப்பிடப்படும். வலிமையான கூற்றோ, ஆதரிக்கும் அத்தாட்சியை அளித்த பிறகு பெரும்பாலும் குறிப்பிடப்படும். இந்த முக்கிய குறிப்புகளை அடையாளம் கண்டுகொண்ட பிறகு பேச்சாளர் அவற்றை தன் மான்யுஸ்க்ரிப்டில் குறித்துக்கொள்ள வேண்டும். பொதுவாக வெகுசில முக்கிய குறிப்புகளே இருக்கும், பெரும்பாலும் நான்கைந்துக்கு மேல் இருக்காது. அடுத்ததாக, கேட்போர் அவற்றை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளும் விதத்தில் வாசிக்க அவர் பழக வேண்டும். இவையே பேச்சின் சிறப்பான கருத்துக்கள். சரியான அழுத்தத்தோடு தகவல் அளிக்கப்படும்போது, இந்த முக்கிய கருத்துக்கள் ஞாபகத்தில் நிற்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவே பேச்சாளரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
கேட்போர் முக்கிய குறிப்புகளை அடையாளம் கண்டுகொள்ள உதவும்படி பேச்சாளர் அவற்றை வலியுறுத்துவதற்கு அநேக வழிகள் உண்டு. மிகுந்த உற்சாகம், வேகத்தில் மாற்றம், உணர்ச்சியில் ஆழம், பொருத்தமான சைகைகள் போன்ற பலவற்றை அவர் பயன்படுத்தலாம்.