யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
“யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் [அதாவது, தீர்மானியுங்கள்].”—யோசு. 24:15.
1-3. (அ) யோசுவா நமக்கு எப்படி நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்? (ஆ) தீர்மானம் எடுக்க வேண்டிய சமயங்களில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
“தீர்மானியுங்கள்”—எவ்வளவு வலிமையான வார்த்தை! ஏதோவொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஒருவர் செய்கிற தீர்மானம் அவருடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடலாம். இதற்கு ஓர் உதாரணம்: சாலையில் ஒருவர் நடந்துகொண்டிருக்கிறார், திடீரென்று அந்தச் சாலை இரண்டாகப் பிரிகிறது. அப்போது, அவர் எந்தப் பாதையில் செல்லத் தீர்மானிப்பார்? போக வேண்டிய இடத்தைவிட்டு எங்கேயோ தூரமாகத் தன்னைக் கொண்டுசெல்கிற பாதையில் அல்ல, அந்த இடத்திற்கு வெகு அருகில் தன்னை அழைத்துச் செல்கிற பாதையில் செல்லவே அவர் தீர்மானிப்பார்.
2 வாழ்க்கையில் இப்படி முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டத்திலிருந்த ஏராளமானோரின் உதாரணங்கள் பைபிளில் உள்ளன: கோபத்தைக் காட்டுவதா அல்லது கட்டுப்படுத்துவதா என்று காயீன் தீர்மானிக்க வேண்டியிருந்தது. (ஆதி. 4:6, 7) யோசுவாவோ, உண்மைக் கடவுளைச் சேவிப்பதா பொய்க் கடவுளைச் சேவிப்பதா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. (யோசு. 24:15) யெகோவாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்ற குறிக்கோள் யோசுவாவுக்கு இருந்ததால், அதற்கு உதவுகிற தீர்மானத்தையே அவர் எடுத்தார். காயீனுக்கு அதுபோன்ற குறிக்கோள் எதுவும் இல்லாததால், அவன் எடுத்த தீர்மானம் யெகோவாவிடமிருந்து அவனைத் தூரமாக விலக்கிவிட்டது.
3 சிலசமயம், நாமும்கூட எந்தப் பாதையில் போவது, என்ன தீர்மானத்தை எடுப்பது என்று முடிவுசெய்ய வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நம் குறிக்கோளை, அதாவது யெகோவாவைவிட்டு நம்மைத் தூர விலக்குகிற காரியங்களைத் தவிர்த்து அவருக்கு மகிமை சேர்க்கிற காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற நம் குறிக்கோளை, மனதில் வைக்க வேண்டும். (எபிரெயர் 3:12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடமிருந்து நம்மைத் தூரமாக விலக்கிவிட எந்த ஏழு அம்சங்களை நாம் அனுமதிக்கக் கூடாதென்று இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் கலந்தாராய்வோம்.
வேலை
4. வேலை செய்து சம்பாதிப்பது ஏன் முக்கியம்?
4 தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. தன் குடும்பத்தாருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவனுக்கு மனதில்லை என்றால் அவன் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாக இருப்பான் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (2 தெ. 3:10; 1 தீ. 5:8) எனவே, வேலை செய்து சம்பாதிப்பது வாழ்க்கைக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது. ஆனால், அந்த வேலையே உங்களை யெகோவாவிடமிருந்து தூர விலக்கிவிடலாம்—நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்! எப்படி?
5. ஒரு வேலையை ஏற்றுக்கொள்வதற்குமுன் என்னென்ன விஷயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்?
5 நீங்கள் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாழும் நாட்டில் வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதனால், எந்த வேலை கிடைத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளத் தூண்டப்படுகிறீர்கள். ஆனால், அந்த வேலை பைபிள் நியமங்களுக்கு விரோதமாக இருக்குமென்றால், என்ன செய்வீர்கள்? அந்த வேலையோ அதற்கான பயண நேரமோ ஆன்மீகக் காரியங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தாருக்காகவும் செலவிடுகிற நேரத்தை எடுத்துக்கொள்ளுமென்றால், என்ன செய்வீர்கள்? ‘வேலையே இல்லாதிருப்பதைவிட ஏதோவொரு வேலை பார்ப்பது பரவாயில்லை’ என்று முடிவுசெய்து அந்த வேலையை ஏற்றுக்கொள்வீர்களா? நினைவில் வையுங்கள், தவறான தீர்மானத்தை எடுப்பது யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடும். (எபி. 2:1) நீங்கள் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தாலும் சரி, தற்போது பார்க்கும் வேலையைத் தொடருவதா வேண்டாமா எனச் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் எவ்வாறு ஞானமான தீர்மானங்களை எடுக்கலாம்?
6, 7. (அ) ஒருவர் எந்த இரண்டு குறிக்கோள்களுடன் வேலை செய்யலாம்? (ஆ) எந்தக் குறிக்கோள் யெகோவாவிடம் உங்களை நெருங்கிவரச் செய்யும், ஏன்?
6 முன்பு குறிப்பிட்டபடி, உங்கள் குறிக்கோளை மனதில் தெளிவாக வையுங்கள். ‘என்ன குறிக்கோளுடன் வேலை செய்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய உதவியாக இருக்குமென்ற குறிக்கோளுடன் வேலை செய்கிறீர்களென்றால் உங்கள் முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். (மத். 6:33) வேலை இழந்து தவிக்கிறீர்களென்றால் அல்லது தொழிலில் எதிர்பாரா நஷ்டம் ஏற்பட்டுக் கஷ்டப்படுகிறீர்களென்றால், யெகோவா நிச்சயம் உதவிக்கரம் நீட்டுவார். (ஏசா. 59:1) ஆம், ‘தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்க அவர் அறிந்திருக்கிறார்.’—2 பே. 2:9.
7 மறுபட்சத்தில், பணக்காரராக வேண்டுமென்ற குறிக்கோளுடன் மட்டுமே வேலை செய்கிறீர்களென்றால்? அந்தக் குறிக்கோளில் ஒருவேளை நீங்கள் வெற்றி பெறலாம். அப்படியே வெற்றி பெற்றாலும் அது உங்களை ஏதோவொரு ஆபத்தில் சிக்க வைத்துவிடும். (1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) பணங்காசுக்கும் வேலைக்கும் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது யெகோவாவிடமிருந்து உங்களை வெகு தூரம் விலக்கிவிடும்.
8, 9. வேலை சம்பந்தமாக என்ன மனப்பான்மை பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்? விளக்குங்கள்.
8 நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், உங்களுடைய முன்னுதாரணம் பிள்ளைகள்மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் எதற்கு முதலிடம் கொடுப்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்கிறார்கள்? உங்களுடைய வேலைக்கா அல்லது யெகோவாவோடு உங்களுக்குள்ள பந்தத்திற்கா? பணம், பதவி, அந்தஸ்துக்கு நீங்கள் முதலிடம் கொடுப்பதை அவர்கள் பார்க்கிறார்களென்றால், விபரீதமான அதே பாதையில் அவர்களும் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள், உங்கள்மேல் வைத்திருக்கும் மதிப்புமரியாதையை இழந்துவிடுவார்கள். ஒரு கிறிஸ்தவ இளைஞர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் அப்பா வேலை, வேலை என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறார். எங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் ஆரம்பத்தில் அவர் அப்படி ஓடியோடி உழைத்தார். ஆனால், சமீப வருடங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது அநாவசியமான, ஆடம்பரமான பொருள்களை வாங்கிவருவதற்காக ஓடியோடி உழைக்கிறார். விளைவு? பணக்கார குடும்பம் என்று நாங்கள் பெயர் வாங்கியிருக்கிறோமே தவிர பக்திவைராக்கியமான குடும்பம் என்று பெயர் வாங்கவில்லை. என் அப்பா எனக்குப் பணங்காசு கொடுக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை, யெகோவாவின் சேவையில் அவர் எனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.”
9 பெற்றோர்களே, உங்கள் வேலைக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, யெகோவாவிடமிருந்து தூரமாக விலகிச் சென்றுவிடாதீர்கள். ஆன்மீக ஆஸ்தியே மிகப் பெரிய ஆஸ்தி என்பதை உங்களுடைய முன்மாதிரியின் மூலம் பிள்ளைகளுக்குக் காட்டுங்கள்.—மத். 5:3.
10. வேலை விஷயத்தில் இளைஞர்கள் எதையெல்லாம் கவனத்தில் வைத்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்?
10 இளைஞர்களே, எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதென யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், எதன் அடிப்படையில் அதைத் தீர்மானிப்பீர்கள்? ஏற்கெனவே கலந்தாலோசித்தபடி, வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்னவென்பது மனதில் தெளிவாக இருக்க வேண்டும். அந்த வேலையும் அதற்கான பயிற்சியும் யெகோவாவின் சேவையில் முழுமையாக ஈடுபட உங்களுக்கு உதவுமா அல்லது யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடுமா? (2 தீ. 4:10) வங்கிக் கணக்கில் அல்லது பங்குச் சந்தையில் பணம் அதிகரிக்க அதிகரிக்க ஆனந்தப்படுகிற, குறையக் குறைய துக்கப்படுகிற ஆட்களைப் பின்பற்றுவது உங்கள் குறிக்கோளா? அல்லது, “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை” என்று உறுதியாய்ச் சொன்ன தாவீதைப் பின்பற்றுவது உங்கள் குறிக்கோளா? (சங். 37:25) நினைவில் வையுங்கள்: ஒரு பாதை யெகோவாவிடமிருந்து உங்களைத் தூரமாக விலக்கிவிடும், மற்றொரு பாதை மிகச் சிறந்த வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்லும். (நீதிமொழிகள் 10:22-ஐயும் மல்கியா 3:10-ஐயும் வாசியுங்கள்.) நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பீர்கள்?a
பொழுதுபோக்கு
11. பொழுதுபோக்கு குறித்து பைபிள் என்ன சொல்கிறது, ஆனால் நாம் எதைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்?
11 குஷியாக இருப்பதையும் பொழுதுபோக்கில் ஈடுபடுவதையும் பைபிள் எதிர்ப்பதில்லை, நேரத்தை வீணடிக்கிற காரியங்கள் என அவற்றைக் கண்டனம் செய்வதுமில்லை. ‘உடற்பயிற்சி ஓரளவு நன்மை தரும்’ என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். (1 தீ. 4:8) “நகைக்க ஒரு காலமுண்டு,” “நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்றுகூட பைபிள் சொல்கிறது; நன்றாக ஓய்வெடுப்பதையும் அது ஊக்குவிக்கிறது. (பிர. 3:4; 4:6, NW) என்றாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிடாதபடி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்படி? எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபட தீர்மானிக்கிறீர்கள், எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தரமான பொழுதுபோக்கில், சமநிலையோடு ஈடுபடுவது புத்துணர்ச்சி அளிக்கும்
12. எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபடுவதென்ற விஷயத்தில் நீங்கள் எதையெல்லாம் மனதில் வைக்க வேண்டும்?
12 முதலாவதாக, எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபடுவதென்ற விஷயத்திற்கு வருவோம். இன்று உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்குகள் நிறையவே இருக்கின்றன என்பது உண்மைதான். என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை வன்முறை, ஆவியுலகத்தொடர்பு, பாலியல் ஒழுக்கக்கேடு போன்ற கடவுள் வெறுக்கிற காரியங்களையே சிறப்பித்துக் காட்டுகின்றன. எனவே, எவ்விதமான பொழுதுபோக்கில் ஈடுபடுகிறீர்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டும். உங்கள்மீது அது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? வன்முறையை, போட்டா போட்டியை, நாட்டுப்பற்றை உங்களுக்குள் தூண்டிவிடுகிறதா? (நீதி. 3:31) உங்கள் காசையெல்லாம் கரைத்துவிடுகிறதா? மற்றவர்களுக்கு இடறலாக இருக்கிறதா? (ரோ. 14:21) அதில் ஈடுபடும்போது எப்படிப்பட்ட ஆட்களோடு பழக வேண்டியிருக்கிறது? (நீதி. 13:20) தவறு செய்யத் தூண்டும் ஆசைகளை உங்கள் உள்ளத்தில் விதைக்கிறதா?—யாக். 1:14, 15.
13, 14. எவ்வளவு நேரம் பொழுதுபோக்கில் செலவிடுவதென்ற விஷயத்தில், நீங்கள் எதையெல்லாம் மனதில் வைக்க வேண்டும்?
13 அடுத்ததாக, எவ்வளவு நேரம் பொழுதுபோக்கில் செலவிடுகிறீர்கள் என்ற விஷயத்திற்கு வருவோம். ‘ஆன்மீகக் காரியங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுமளவுக்குப் பொழுதுபோக்கு காரியங்களில் ஈடுபடுகிறேனா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பொழுதுபோக்கில் அளவுக்குமீறி நேரம் செலவிட்டால், மீதமுள்ள நேரம் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்காது. உண்மையில், சமநிலையோடு பொழுதுபோக்கு காரியங்களில் ஈடுபடுகிறவர்கள் அதை அதிகமாக அனுபவித்து மகிழ்வார்கள். ஏன்? ஏனென்றால், ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ முதலிடம் தந்த திருப்தியில், குற்றவுணர்ச்சி இல்லாமல் தங்கள் ஓய்வுநேரத்தைக் கழிப்பார்கள்.—பிலிப்பியர் 1:10, 11-ஐ வாசியுங்கள்.
14 பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நேரம் செலவிடுவது குஷியாக இருந்தாலும், யெகோவாவிடமிருந்து அது உங்களைத் தூர விலக்கிவிடலாம். கிம் என்ற 20 வயது சகோதரியின் அனுபவப் பாடம் அது. அவள் சொல்கிறாள்: “முன்பெல்லாம் நான் ஒரு பார்ட்டியைக்கூட விட்டு வைக்க மாட்டேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரே அமர்க்களமாக இருக்கும். ஆனால், இப்போது மிக முக்கியமான காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டேன். உதாரணத்திற்கு, பயனியரான நான் வெளி ஊழியத்திற்காகத் தினமும் காலை 6:00 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டியிருப்பதால், இரவு ஒன்று இரண்டு மணிவரை கும்மாளமடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாகப் பொழுதைக் கழிப்பது தவறில்லை என்றாலும், கடவுளுடைய சேவையிலிருந்து அது நம்மைப் பெருமளவில் திசைதிருப்பிவிடலாம். மற்ற காரியங்களைப் போலவே பொழுதுபோக்கு அம்சத்திலும் சமநிலையோடு இருக்கப் பழகிக்கொண்டேன்.”
15. புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்கை அனுபவிக்க பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
15 தங்களுடைய மற்றும் தங்கள் பிள்ளைகளுடைய பொருளாதார, ஆன்மீக, உணர்ச்சி தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களுமே மோசமானவை என்று முடிவுசெய்து பிள்ளைகளுடைய குஷியைக் கெடுத்துவிடாதீர்கள். அதேசமயத்தில், அவர்கள் தீய செல்வாக்கிற்குள் வீழ்ந்துவிடாதபடி உஷாராகவும் இருங்கள். (1 கொ. 5:6) முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் உங்கள் குடும்பத்தாருக்கு அதிக புத்துணர்ச்சி அளிக்கிற பொழுதுபோக்கை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.b இவ்வாறு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்கிற பாதையில் செல்லவே தீர்மானம் எடுப்பீர்கள்.
குடும்ப பந்தம்
16, 17. அநேக பெற்றோர்கள் என்ன துயரமான சூழ்நிலையை எதிர்ப்பட்டிருக்கிறார்கள், யெகோவா அவர்களுடைய வேதனையை அறிந்திருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
16 பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள பந்தம் அந்தளவு வலிமைமிக்கதாக இருப்பதால்தான் யெகோவா தம் மக்கள்மீது வைத்திருக்கும் அன்பை விளக்க அதை உதாரணமாகப் பயன்படுத்தினார். (ஏசா. 49:15) எனவே, பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய குடும்ப அங்கத்தினர் ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது சொல்ல முடியாத வேதனை ஏற்படுவது இயல்புதான். தன்னுடைய மகள் சபைநீக்கம் செய்யப்பட்டபோது ஒரு சகோதரி எவ்வாறு உணர்ந்தார்? “அப்படியே நொறுங்கிப்போய்விட்டேன். ‘அவள் ஏன் யெகோவாவைவிட்டு விலகிப்போனாள்?’ என்ற கேள்வி என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. குற்றவுணர்ச்சியில் தவித்தேன், என்மீதே பழிபோட்டுக்கொண்டேன்” என்று அவர் சொல்கிறார்.
17 உங்கள் வலியையும் வேதனையையும் யெகோவா அறிந்திருக்கிறார். முதல் மனிதனும், ஜலப்பிரளயத்திற்குமுன் வாழ்ந்த பெரும்பாலான மனிதர்களும் கலகம் செய்தது அவருடைய “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதி. 6:5, 6) குடும்ப அங்கத்தினர் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது ஏற்படுகிற வலியும் வேதனையும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். என்றாலும், அப்படிச் சபைநீக்கம் செய்யப்பட்டவர் எடுத்த தவறான தீர்மானம் யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க அனுமதிப்பது ஞானமானதல்ல. அப்படியானால், குடும்பத்திலுள்ள ஒருவர் யெகோவாவைவிட்டு விலகிச்செல்லும்போது ஏற்படுகிற பெரும் துயரத்தை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்?
18. பிள்ளை யெகோவாவைவிட்டு விலகிச்செல்லும்போது பெற்றோர் ஏன் தங்கள்மீதே பழிபோட்டுக்கொள்ளக் கூடாது?
18 உங்கள்மீதே பழிபோட்டுக்கொள்ளாதீர்கள். தீர்மானமெடுக்கும் உரிமையை மனிதர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். ஆகவே, ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் “தன்தன் பாரத்தை,” அதாவது தங்கள் பொறுப்பை, சுமக்க வேண்டும். (கலா. 6:5) எனவே, பாவம் செய்த நபரிடம்தான் யெகோவா கணக்குக் கேட்பார்—உங்களிடம் அல்ல! (எசே. 18:20) மற்றவர்கள்மீதும் பழிபோடாதீர்கள். கண்டித்துத் திருத்த யெகோவா செய்துள்ள ஏற்பாட்டுக்கு மதிப்புக் காட்டுங்கள். பிசாசை எதிர்த்து நில்லுங்கள்—சபையின் பாதுகாவலர்களான மேய்ப்பர்களை அல்ல!—1 பே. 5:8, 9.
உங்கள் நேசத்திற்குரிய ஒருவர் யெகோவாவிடம் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்ப்பது தவறே இல்லை
19, 20. (அ) சபைநீக்கம் செய்யப்பட்ட பிள்ளைகளையுடைய பெற்றோர்கள் தங்கள் துக்கத்தைச் சமாளிக்க என்னவெல்லாம் செய்யலாம்? (ஆ) அத்தகைய பெற்றோர்கள் எதை நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள்?
19 அத்தகைய சூழலில் யெகோவாமீது மனக்கசப்பை வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், அவரைவிட்டு தூரமாக விலகிச் சென்றுவிடுவீர்கள். பந்தபாசம் உட்பட எல்லாவற்றையுமே யெகோவாவுக்கு அடுத்தபடியாகத்தான் நீங்கள் வைக்கிறீர்கள் என்பதை சபைநீக்கம் செய்யப்பட்ட உங்கள் குடும்ப அங்கத்தினர் கண்கூடாகப் பார்க்க வேண்டும். எனவே, கடவுளோடு உங்களுக்குள்ள பந்தத்தை வலுப்படுத்திக்கொள்ள எல்லா முயற்சியும் எடுங்கள். கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்து உங்களைப் பிரித்து வைத்துக்கொள்ளாதீர்கள். (நீதி. 18:1) யெகோவாவிடம் ஜெபத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். (சங். 62:7, 8) ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு சபைநீக்கம் செய்யப்பட்ட குடும்ப அங்கத்தினரோடு தொடர்புகொள்வதற்கு, உதாரணமாக ஃபோனில் அல்லது ஈ-மெயிலில் தொடர்புகொள்வதற்குக்கூட, முயற்சி செய்யாதீர்கள். (1 கொ. 5:11) ஆன்மீகக் காரியங்களில் ஊக்கமாய் ஈடுபடுங்கள். (1 கொ. 15:58) மேற்குறிப்பிடப்பட்ட சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “எனக்குத் தெரியும், யெகோவாவின் சேவையில் நான் மும்முரமாக ஈடுபட வேண்டும்; ஆன்மீக ரீதியில் என்னைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், என் மகள் யெகோவாவிடம் திரும்பி வரும்போது, அவளுக்கு என்னால் உதவ முடியும்.”
20 அன்பு “எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 13:4, 7) உங்கள் நேசத்திற்குரிய நபர் யெகோவாவிடம் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்ப்பது தவறே இல்லை. பாவம் செய்த எத்தனையோ பேர் ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் அமைப்புக்குத் திரும்பி வருகிறார்கள். அவர்களை யெகோவா வேண்டாவெறுப்போடு அல்ல, முழுமனதோடு ‘மன்னிக்கிறார்.’—சங். 86:5.
ஞானமான தீர்மானங்களை எடுங்கள்
21, 22. சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில், உங்கள் தீர்மானம் என்ன?
21 சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா மனிதர்களுக்குத் தந்திருக்கிறார். (உபாகமம் 30:19, 20-ஐ வாசியுங்கள்.) ஆனால், அந்தச் சுதந்திரத்தோடு முக்கியமான ஒரு பொறுப்பும் சேர்ந்து வருகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் எந்தப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன்? வேலையோ, பொழுதுபோக்கோ, குடும்ப பந்தமோ யெகோவாவிடமிருந்து என்னைத் தூர விலக்கிவிட நான் அனுமதித்திருக்கிறேனா?’
22 யெகோவா தம் மக்கள்மீது எப்போதுமே அன்பைப் பொழிவார். தவறான பாதையில் செல்ல நாமாகத் தீர்மானித்தால் மட்டுமே அவருடைய அன்பிலிருந்து விலகிச் சென்றுவிடுவோம். (ரோ. 8:38, 39) அப்படியொன்று நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்கிவிட எதையும், யாரையும் அனுமதிக்காதிருக்கத் தீர்மானமாய் இருங்கள். இதே தீர்மானத்தோடு நீங்கள் இருக்க வேண்டிய மற்ற நான்கு அம்சங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
a வேலை சம்பந்தமான தீர்மானங்களை எடுக்க உதவும் கூடுதல் தகவலை விழித்தெழு!, ஜூலை 2006 தேதியிட்ட பத்திரிகையில் பக்கங்கள் 23-25-லுள்ள “இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
b மேலுமான ஆலோசனைகளுக்கு, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராக இருங்கள்’ என்ற புத்தகத்தில் “தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க...” என்ற தலைப்பிலுள்ள ஆறாம் அதிகாரத்தைப் பார்க்கவும்.