முன்னதாகவே திட்டமிடுங்கள்!
1 நம் ஆவிக்குரிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக யெகோவாவின் அமைப்பு தேவராஜ்ய நடவடிக்கைகளை வரிசையாக திட்டமிட்டு அளித்து வருகிறது. பிரயாண கண்காணியின் சந்திப்புகள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றுடன் உள்ளூர் சபையும் விசேஷ நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறது. இவற்றுக்கான போற்றுதல் உணர்வு இருந்தால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்வோம். (மத். 5:3) ஆனால் சிலர் இப்படிப்பட்ட ஆவிக்குரிய ஏற்பாடுகளில் பலவற்றை தவறவிட்டு விடுகின்றனர். ஏனென்றால் அந்த நேரம்பார்த்து வேறு ஏதாவது செய்ய திட்டமிட்டு விடுகின்றனர். இதை தவிர்ப்பது எப்படி? வேறு வேலைகள் இந்த நடவடிக்கைகளை நெருக்கிப் போட்டுவிடாதவாறு, ‘மிக முக்கியமானவையாகிய’ தேவராஜ்ய நடவடிக்கைகளுக்கு நாம் முதலிடம் கொடுக்கிறோமா இல்லையா என்பதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது?—பிலி. 1:9.
2 முன்னதாகவே நன்கு திட்டமிட வேண்டும்: “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்” என்கிறது நீதிமொழிகள் 21:5. (பொது மொழிபெயர்ப்பு) ஆவிக்குரிய “செல்வம்” சேர வேண்டுமா? அதற்கென முன்னதாகவே கவனமாக திட்டமிட வேண்டும். நமக்கென்றே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேவராஜ்ய நடவடிக்கைகளை மனதில் வைத்து இதைச் செய்ய வேண்டும். ஆவிக்குரிய நடவடிக்கைகளில் தவறாமல் நாம் பங்குகொள்ளும்போது, அவை நமக்கு அநேக ஆசீர்வாதங்களை அள்ளிவழங்கும். ஆகவே இந்த நடவடிக்கைகளுக்கான நேரத்தில் நமது சொந்த வேலைகள் குறுக்கிடாதபடி கவனமாக திட்டமிட வேண்டும். அடுத்தடுத்து செய்ய வேண்டிய தேவராஜ்ய வேலையைப் பற்றி கொஞ்சமும் சிந்தியாமல் நாம் செய்ய விரும்பும் சொந்த வேலைகளைச் செய்தோம் என்றால், ஆவிக்குரிய “பற்றாக்குறை” வந்துவிடலாம்.
3 தவற விடாதீர்கள்! எதிர்காலத்துக்காக நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். விடுமுறையில் செல்வது, தொழில் சம்பந்தமாக செல்வது, உறவினர் வீட்டுக்குச் செல்வது போன்றவையும் இதில் அடங்கும். ஒன்றைச் செய்வதற்கு அல்லது வாக்குக் கொடுப்பதற்கு முன்பு, அடுத்ததாக என்ன ஆவிக்குரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதை உங்கள் அட்டவணையில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வட்டாரக் கண்காணியின் வருகை இருக்கலாம், அல்லது அசெம்பிளி ஏதாவது வரலாம். அந்த நேரம் பார்த்து நீங்கள் வேறு வேலை காரணமாக வெளியே செல்ல வேண்டி வந்தால் என்ன செய்வீர்கள்? இப்படிப்பட்ட ஆவிக்குரிய விருந்துகளை தவறவிடாமல் உங்கள் சொந்த வேலைகளை வேறு சமயத்தில் செய்வதற்கு எப்பாடு பட்டாவது மாற்றிக்கொள்ளுங்கள். வரவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றி வெகு முன்கூட்டியே நமக்கு அறிவிக்கப்படுகிறது. உள்ளூரில் எவை திட்டமிடப்பட்டுள்ளன என்பதை உங்கள் சபை மூப்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
4 நடக்கவிருக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை முன்னதாகவே கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். நாம் இவ்வாறு செய்வதன் மூலம், ‘தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி’ இருப்போம்.—பிலி. 1:10.