அக அழகு
ஜியோட். அடர்த்தியான பாறைக்கல்லில் படிகப்பொருளை அல்லது கனிப்பொருளைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம். விநோதமான ஒரு வார்த்தை. இது “மண்கட்டிப் போன்ற” என்று பொருள்படும் ஜியோடீஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இது ஏறக்குறை உருண்டையான பள்ளமான, ஓர் அங்குலத்திலிருந்து ஓர் அடிக்கு மேலான விட்டத்தையுடைய ஒரு கல்லாகும். இங்கு காண்பிக்கப்பட்டிருப்பது ப்ரேஸிலிலுள்ளது. இது உருண்டை என்பதைவிட நீண்டு ஒடுங்கிக் காணப்படுகிறது. அதன் வெளிப்புறத் தோற்றம், கல் எந்த அளவோ அந்த அளவுக்கே இருக்கிறது.
ஆனால் அதை உடைத்துப் பாருங்கள்! உள்ளே பாருங்கள்! அடர்த்தியாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட ஒளிவீசுகின்ற கருஞ்சிவப்பு நிற படிகக்கற்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கட்டும்! படிகக்கல், படிவியலானப் பாறையின் வெற்றிடத்தைச் சுற்றி உருவாகிறது. அது வளருகையில் அதன் மேற்பரப்பில் வெடிப்புகள் ஏற்பட, கனிச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான நீர் அதன் ஊடாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கனிப்பொருட்களின் கரைசலின் மண்டி படிகையில், படிகக்கல் வெற்றிடத்தின் சுவரிலிருந்து உள்நோக்கி வளருகிறது. காலப்போக்கில், படிகக்கல், வரியிட்டு நிரப்பப்பட்ட பளிங்கு நமக்குக் கிடைக்கிறது. இங்கே காண்பிக்கப்பட்டிருப்பது செவ்வந்திக் கல் என்றழைக்கப்படும் கருஞ்சிவப்பு வகையான ஒரு பளிங்குப் போன்ற படிகக்கல்லை விளைவித்தது. அதன் வெளிப்புறத் தோற்றம் அவ்வளவு அழகாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அதன் அக அழகு திகைக்க வைக்கிறது!
படிகக்கல் போன்றிருக்கும் ஆட்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களல்லவா? அமைதியான கூச்சமான சுபாவமுள்ள, ஒருவேளை வெளியே எளிமையானத் தோற்றமுள்ளவர்கள். ஆனால் நீங்கள் அவர்களோடு பழக நேரம் எடுத்துக்கொண்டால், அவர்கள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள், ஒளிவீசும் உள் அழகை உங்களுக்குக் காண்பிக்கிறார்கள். அனலான தயவுள்ள ஆவி வெளிப்படுகிறது, மகிழச் செய்யும் ஓர் ஆளுமை வெளிப்படுகிறது. நீங்கள் ஒருபோதும் நினையாதிருந்த ஆழமான உணர்ச்சிகளை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள்.
அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்ன காரியத்தை நீங்கள் போற்ற ஆரம்பிக்கிறீர்கள்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல் அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடையப் பார்வையில் விலையேறப்பெற்றது.”—1 பேதுரு 3:3, 4.
மேலுமாக கடவுள் பார்க்கிற விதமாக நீங்கள் பார்ப்பதை பழகிக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்: “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ [யெகோவா, NW] இருதயத்தைப் பார்க்கிறார்.”—1 சாமுவேல் 16:7. (g89 1⁄22)