உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுர இதழ்களை வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு பதில் தெரியுமா என பாருங்களேன்:
• ரோமர் 5:3-5-ல் (NW) அப்போஸ்தலன் பவுல் நம்பிக்கையை ஏன் கடைசியில் குறிப்பிட்டார்?
உபத்திரவம், சகிப்புத்தன்மை, அங்கீகரிக்கப்பட்ட நிலை, நம்பிக்கை என கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் அநேக காரியங்களை பவுல் வரிசையாக குறிப்பிட்டார். ஆரம்பத்தில் ஒருவர் பைபிளிலிருந்து பெறும் ‘நம்பிக்கையை’ இது குறிப்பதில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல ஒரு கிறிஸ்தவர் பெறுகிற பலமான, ஆழமான, ஊடுருவும் நம்பிக்கையை இது குறிக்கிறது.—12/15, பக்கங்கள் 22-3.
• பூர்வ கிரீஸில் நடைபெற்ற போட்டி விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொள்வதில் இன்று ஏன் ஒரு கிறிஸ்தவர் ஆர்வம் காட்டலாம்?
அந்த விளையாட்டுகள் எப்படிப்பட்டவை, அவற்றில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்கள் யாவை என்பதைப் புரிந்துகொள்வது அநேக பைபிள் வசனங்களைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவலாம். அவற்றில் சில, ‘விதி முறைகளுக்குட்பட்டு விளையாடுதல்,’ ‘பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, இயேசுவை நோக்குதல்,’ ‘ஓட்டத்தை முடிப்பது’ கிரீடத்தை அல்லது பரிசைப் பெறுவது போன்றவற்றை குறிப்பிடுகின்றன. (2 தீமோத்தேயு 2:5, பொ.மொ.; 4:7, 8; எபிரெயர் 12:1, 2; 1 கொரிந்தியர் 9:24, 25; 1 பேதுரு 5:4)—1/1, பக்கங்கள் 28-30.
• ஜனவரி 1914-ல் நற்செய்தியை அறிவிக்க என்ன புதியதோர் முறை பின்பற்றப்பட்டது?
“ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” அப்போது வெளியிடப்பட்டது. இது நான்கு பாகங்களாக திரையிடும்படி உருவாக்கப்பட்டது. இதில் ஒரே சமயத்தில், இயங்கு படக்காட்சிகளையும், நூற்றுக்கணக்கான வண்ண புகைப்பட ஸ்லைடுகளையும் பார்க்கவும், அவற்றை விவரிக்கும் ஃபோனோக்ராஃப் ரெகார்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பேச்சுகளைக் கேட்கவும் முடிந்தது. இந்த டிராமாவின் 20 செட்டுகள் தயாரிக்கப்பட்டு, பைபிள் செய்தியை மக்களுக்குப் போதிக்க எங்கும் பயன்படுத்தப்பட்டன.—1/15, பக்கங்கள் 8-9.
• ஆளும் குழு எவ்வாறு சட்டப்பூர்வ நிறுவனத்திலிருந்து வித்தியாசப்படுகிறது?
சட்டப்பூர்வ நிறுவனத்தின் இயக்குநர்கள் அதன் அங்கத்தினர்களால் ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகையில், ஆளும் குழு எந்த மனிதனாலும் அல்ல ஆனால் இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆளும் குழுவின் அங்கத்தினராக இருக்க வேண்டிய தேவை இல்லை. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் சமீபத்திய வருடாந்தர கூட்டத்தில் இயக்குநர்களும் அதிகாரிகளுமாக சேவித்துக்கொண்டிருந்த ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் தங்கள் பதவியிலிருந்து தாங்களாகவே விலகினர். இந்த இடங்களை ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்கள் நிரப்பினர். (யோவான் 10:16) இவ்வாறு ஆளும் குழு ஆவிக்குரிய உணவை தயாரிப்பதற்கும் உலகளாவிய சகோதரத்துவத்தின் ஆவிக்குரிய தேவைகளை கவனிப்பதற்கும் அதிக நேரத்தை செலவழிக்கலாம்.—1/15, பக்கங்கள் 29, 31.
• சோர்வை எப்படி சமாளிப்பது என்பதற்கு என்ன இரண்டு பைபிள் உதாரணங்களை நாம் ஆராயலாம்?
ஒரு உதாரணம், சாமுவேலின் தாய் அன்னாள். இஸ்ரவேலின் பிரதான ஆசாரியராக சேவித்த ஏலி அவளை தவறாக குற்றஞ்சாட்டியபோது இன்னும் அதிகமாய் அவள் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் அவள் வெளிப்படையாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் உண்மைகளை எடுத்துரைத்தாள். மேலும், ஏலியின்மீது அன்னாள் எந்த வன்மமும் வைக்கவில்லை. இரண்டாவது உதாரணம் மாற்கு. அப்போஸ்தலன் பவுல் மிஷனரி பயணத்தில் தன்னை அழைத்துச் செல்ல விரும்பாததை அறிந்து அவர் இடிந்து போயிருக்கலாம். ஆனால், தன்னுடைய சிலாக்கியம் பறிபோய்விட்டதே என அவர் சோர்ந்துவிடாமல் பர்னபாவுடன் சேர்ந்து பயணம் செய்வதன் மூலம் தொடர்ந்து ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபட்டு வந்தார்.—2/1, பக்கங்கள் 20-2.
• கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் புரோகிராம்களின் நகல்களை மற்றவர்களுக்கு தருவதிலோ, அல்லது மற்றவர்களிடமிருந்து பெறுவதிலோ ஏன் கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்?
பெரும்பாலான கம்ப்யூட்டர் புரோகிராம்களுக்கு (விளையாட்டுகள் உட்பட) லைசென்ஸ் உள்ளது. எனவே, இதைப் பயன்படுத்துபவர்/உரிமையாளர் ஒரேவொரு கம்ப்யூட்டரில் மட்டுமே இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த உரிமை இருக்கிறது. பொதுவாக, மற்றவர்களுக்காக நகல்கள் எடுப்பது காப்பிரைட் சட்டத்தை மீறுவதாகும்; அவற்றை இலவசமாக மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் சட்டமீறுதல்தான். சட்டத்திற்கு கீழ்ப்படிய விரும்பும் கிறிஸ்தவர்கள் ‘இராயனுடையதை இராயனுக்கு . . . செலுத்த’ வேண்டும். (மாற்கு 12:17)—2/15, பக்கங்கள் 28-9.
• சிரிலும் மெத்தோடியஸும் யார், பைபிளைப் படிப்பதற்கு அவர்கள் என்ன பங்களித்தனர்?
இந்த இரண்டு சகோதரர்களும் ஒன்பதாம் நூற்றாண்டில் கிரீஸிலுள்ள தெசலோனிகாவில் பிறந்தனர். ஸ்லாவிய மொழிகளுக்கு எழுத்து வடிவத்தை இவர்கள் உருவாக்கினர், பைபிளின் பெரும்பாலான பகுதியை ஸ்லவோனிய மொழியில் மொழிபெயர்த்தனர்.—3/1, பக்கங்கள் 28-9.
• ‘ஆவியின் சிந்தை’ என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன?—ரோமர் 8:6.
யெகோவாவின் செயல்படும் சக்தியால் கட்டுப்படுத்தப்படுவதை, அடக்கியாளப்படுவதை, தூண்டப்படுவதை அது அர்த்தப்படுத்துகிறது. நாம் பைபிளை வாசிப்பதன் மூலமும் படிப்பதன் மூலமும், இருதயப்பூர்வமாய் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், கடவுளுடைய ஆவிக்காக ஜெபிப்பதன் மூலமும் கடவுளுடைய ஆவி நம்மிடம் செயல்பட அனுமதிக்கலாம்.—3/15, பக்கங்கள் 15.
• நம்மை யாரோ தவறாக புரிந்துகொண்டதாய் நினைத்தால் என்ன செய்யலாம்?
விஷயங்களை அன்பாக பேசி தெளிவுபடுத்துவது முக்கியம். அதில் வெற்றியடையவில்லை என்றால் சோர்ந்து போக வேண்டாம். ‘இருதயங்களை நிறுத்துப்பார்க்கிற’ யெகோவாவிடம் புரிந்துகொள்ளுதலுக்காகவும் உதவிக்காகவும் மன்றாடுங்கள். (நீதிமொழிகள் 21:2; 1 சாமுவேல் 16:7, NW)—4/1, பக்கங்கள் 21-3.