நாம் ஏன் கஷ்டப்படுகிறோம், வயதாகி சாகிறோம்?
கடவுள் தன்னுடைய பிள்ளைகளாகத்தான் நம்மைப் பார்க்கிறார். அதனால், நாம் கஷ்டப்பட வேண்டுமென்று அவர் நினைப்பதில்லை. ஆனாலும், நமக்கு நிறைய கஷ்டங்கள் வருகின்றன. அதற்குக் காரணம் என்ன?
முதல் பெற்றோரால் கஷ்டப்படுகிறோம்
“ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, . . . மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோமர் 5:12.
நம் முதல் பெற்றோரான ஆதாம்-ஏவாளை உடலிலும் உள்ளத்திலும் எந்தக் குறையும் இல்லாமல் கடவுள் படைத்தார். அவர்களுக்கு ஏதேன் தோட்டத்தை ஒரு அழகான வீடாகக் கொடுத்தார். அந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் சாப்பிடலாம், ஒரேவொரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று கடவுள் அவர்களிடம் சொன்னார். ஆனாலும், அவர்கள் அந்த மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிட்டார்கள். அதுதான் அவர்கள் செய்த பெரிய தவறு. (ஆதியாகமம் 2:15-17; 3:1-19) அவர்கள் இப்படிக் கீழ்ப்படியாமல் போனதால், ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களைக் கடவுள் துரத்திவிட்டார். அதனால், அவர்களுடைய வாழ்க்கை கஷ்டமாகிவிட்டது. கொஞ்சக் காலத்தில், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையும் கஷ்டமாகிவிட்டது. அவர்கள் எல்லாருமே வயதாகி, இறந்துபோனார்கள். (ஆதியாகமம் 3:23; 5:5) நாம் ஆதாம்-ஏவாளுடைய வாரிசுகளாக இருப்பதால்தான் நமக்கும் நோய் வருகிறது, வயதாகிறது, கடைசியில் மரணமும் வருகிறது.
பொல்லாத தேவதூதர்களாலும் கஷ்டப்படுகிறோம்
“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.”—1 யோவான் 5:19.
இந்த ‘பொல்லாதவன்’ சாத்தான் என்று அழைக்கப்படுகிறான். தேவதூதர்களில் ஒருவனாக இருந்த அவன், பின்பு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்துவிட்டான். (யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9) சில காலத்துக்குப் பிறகு, மற்ற சில தேவதூதர்களும் சாத்தானோடு சேர்ந்துவிட்டார்கள். அவர்களைத்தான் பேய்கள் என்று வேதம் சொல்கிறது. இந்தப் பொல்லாத தேவதூதர்கள் தங்களுடைய சக்தியைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்கிறார்கள். கெட்டது செய்ய நிறைய மக்களைத் தூண்டுகிறார்கள். (சங்கீதம் 106:35-38; 1 தீமோத்தேயு 4:1) மக்களைக் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கவிடுவதில் சாத்தானுக்கும் பேய்களுக்கும் அவ்வளவு சந்தோஷம்!
சிலசமயங்களில் நம் கஷ்டங்களுக்கு நாமே காரணமாகிவிடுகிறோம்
“ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.
தவறு செய்யும் இயல்பு நமக்கு இருப்பதாலும், இந்த உலகத்தில் சாத்தானுடைய செல்வாக்கு இருப்பதாலும் நாம் எல்லாருமே பலவிதங்களில் கஷ்டப்படுகிறோம். ஆனால், சிலசமயங்களில் நம் கஷ்டங்களுக்கு நாமே காரணமாகிவிடுகிறோம். எப்படி? தவறான காரியங்கள் செய்யும்போது, அல்லது யோசிக்காமல் முடிவு எடுக்கும்போது, மோசமான விளைவுகளைத்தான் பெரும்பாலும் அறுவடை செய்கிறோம். ஆனால், நல்ல விஷயங்கள் செய்யும்போது நல்ல பலன்களை அறுவடை செய்கிறோம். உதாரணத்துக்கு, கணவராகவும் அப்பாவாகவும் இருக்கிற ஒருவர் ரொம்ப நேர்மையானவராக, கடினமாக உழைக்கிறவராக, குடும்பத்தில் அன்பு காட்டுகிறவராக இருந்தால் அவருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், அவருடைய குடும்பமும் சந்தோஷமாக இருக்கும். ஆனால், ஒருவர் சூதாடுகிறவராக, குடிகாரராக, சோம்பேறியாக இருந்தால் அவரும் அவருடைய குடும்பமும் சாப்பாட்டுக்கே திண்டாட வேண்டிய நிலைமை வந்துவிடும். அதனால், கடவுள் சொல்வதைக் கேட்டு நடப்பது ரொம்ப முக்கியம். நாம் ‘மிகுந்த சமாதானத்துடன்’ வாழ்ந்து, அதாவது நிம்மதியாக வாழ்ந்து, நிறைய நல்ல பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.—சங்கீதம் 119:165.
“கடைசி நாட்களில்” வாழ்வதால் கஷ்டப்படுறோம்
“கடைசி நாட்களில், . . . மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, . . . சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக . . . இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-5.
வேதத்தில் இப்படி ஏற்கெனவே சொல்லியிருப்பது போலதான் இன்று மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் இந்த உலகத்தின் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதற்கு இப்படிப்பட்ட குணங்களும் ஒரு ஆதாரமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, நம் காலத்தில் போர்களும், பஞ்சங்களும், பெரிய நிலநடுக்கங்களும், நோய்களும் வரும் என்றும் வேதத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:10, 11) இவற்றால்கூட கஷ்டங்களும் சாவும் அதிகமாகின்றன.