படிப்பு 22
வசனங்களைச் சரியாக பொருத்துதல்
மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது பைபிளிலிருந்து வசனங்களை வெறுமனே வாசித்தால் மட்டும் போதாது. அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய தோழனாகிய தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: ‘நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் [“சரியாக பயன்படுத்துகிறவனாயும்,” NW] உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.’—2 தீ. 2:15.
வசனங்களுக்கு நாம் தரும் விளக்கம் பைபிள் கற்பிக்கிறதற்கு இசைவாக இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. நமக்குப் பிடித்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நம்முடைய சொந்த கருத்துக்களை சேர்த்து சொல்வதற்குப் பதிலாக, வசனத்தின் சூழமைவை (context) கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் பேசுவதாக உரிமைபாராட்டிக் கொண்டு, ‘தாங்கள் யூகித்த தரிசனத்தையே’ சொன்ன தீர்க்கதரிசிகளை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா எச்சரித்தார். (எரே. 23:16) மனித தத்துவங்களால் கடவுளுடைய வார்த்தையை களங்கப்படுத்துவதற்கு எதிராக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை நாங்கள் தவிர்த்து விட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை [“கலப்படம் செய்வதில்லை,” NW].” அந்தக் காலத்தில் திராட்சரசம் விற்கும் நேர்மையற்ற வியாபாரிகள் அதிக பணம் சம்பாதிப்பதற்காக அதில் கலப்படம் செய்தார்கள். நாமோ கடவுளுடைய வார்த்தையில் மனித தத்துவங்களை சேர்த்து கலப்படம் செய்வதில்லை. “நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்” என பவுல் கூறினார்.—2 கொ. 2:17; 4:2; பொ.மொ.
சில சமயங்களில், ஒரு நியமத்தை வலியுறுத்திக் காட்டுவதற்கு ஒரு வசனத்தை நீங்கள் மேற்கோள் காட்டலாம். பல்வேறு சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு நல்வழி காட்டும் நியமங்கள் பைபிளில் ஏராளம் உள்ளன. (2 தீ. 3:16, 17) ஆனால் ஒரு வசனத்தை நீங்கள் பொருத்திக் காண்பிப்பது சரி என்பதையும், உங்களுடைய விருப்பத்திற்கு இசைவாக அதை தவறாக பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (சங். 91:11, 12; மத். 4:5, 6) வசனங்களைப் பொருத்துவது யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக, அவருடைய வார்த்தை முழுவதற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும்.
‘சத்திய வசனத்தை சரியாக பயன்படுத்துவது’ என்பது பைபிளின் உட்கருத்தைப் புரிந்துகொள்வதையும் உட்படுத்துகிறது. மற்றவர்களை அடிப்பதற்கு அது ஒரு “தடி” அல்ல. இயேசு கிறிஸ்துவை எதிர்த்த மத போதகர்கள் வேதவசனங்களிலிருந்து மேற்கோள் காண்பித்தனர், ஆனால் கடவுள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயங்களுக்கு—நீதி, இரக்கம், உண்மைத்தன்மை ஆகியவற்றை உட்படுத்துகிற விஷயங்களுக்கு—தங்களுடைய கண்களை மூடிக்கொண்டனர். (மத். 22:23, 24; 23:23, 24) கடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும்போது இயேசு தமது பிதாவின் குணங்களை பிரதிபலித்தார். இயேசுவுக்கு சத்தியத்தின் மீது வைராக்கியமும் மக்கள் மீது ஆழ்ந்த அன்பும் இருந்தது. நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.—மத். 11:28.
ஒரு வசனத்தை சரியாக பயன்படுத்துகிறோம் என்பதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? தவறாமல் பைபிள் வாசிப்பது உதவும். விசுவாச குடும்பத்தாருக்கு ஆவிக்குரிய உணவை வழங்க ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யினரை யெகோவா தந்திருப்பதற்கு நாம் போற்றுதல் காண்பிப்பதும் அவசியம். (மத். 24:45, NW) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் வாயிலாக கொடுக்கப்படும் அறிவுரையிலிருந்து பயன் பெறுவதற்கு, தனிப்பட்ட படிப்பும் சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு பங்குபெறுவதும் நமக்கு உதவி செய்யும்.
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நன்கு உபயோகிக்க கற்றுக்கொண்டால், ஊழியத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான வசனங்களை உங்களால் சரியாக பொருத்திக் காட்ட முடியும். பழக்கமில்லாத ஒரு வசனத்தை உபயோகிக்க திட்டமிட்டால், சத்திய வார்த்தையை சரியாக பயன்படுத்துவதற்கு மனத்தாழ்மையுடன் ஆராய்ச்சி செய்யுங்கள்.—நீதி. 11:2.
தெளிவாக பொருத்திக் காட்டுங்கள். மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது, பொருளுக்கும் பயன்படுத்தும் வசனத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்டு பின்பு ஒரு வசனத்திற்கு கவனத்தைத் திருப்பினால், அந்தக் கேள்விக்கு அந்த வசனம் எப்படி பதிலளிக்கிறது என்பதை செவிசாய்ப்பவர் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் ஏதாவதொரு கூற்றுக்கு ஆதாரமாக அந்த வசனத்தைப் பயன்படுத்தினால், அந்தக் கூற்றை அந்த வசனம் எப்படி நிரூபிக்கிறது என்பதை மாணாக்கர் தெளிவாக புரிந்துகொள்கிறாரா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுவாக, வசனத்தை வெறுமனே வாசிப்பது—அழுத்தம் கொடுத்து வாசிப்பதும்கூட—போதாது. ஒரு சராசரி நபர் பைபிளோடு பழக்கப்படாதவராக இருக்கிறார் என்பதையும் வசனத்தை வாசித்த மாத்திரத்திலேயே அதன் கருத்தை கிரகித்துக்கொள்ள மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த வசனத்தில் நீங்கள் விவாதிக்கும் விஷயத்தோடு நேரடியாக பொருந்துகிற பாகத்திற்கு கவனத்தைத் திருப்புங்கள்.
இதற்கு பொதுவாக முக்கிய வார்த்தைகளை, விவாதிக்கப்படும் குறிப்புக்கு நேரடியாக தொடர்புடைய வார்த்தைகளை நீங்கள் தனிப்படுத்திக் காட்ட வேண்டும். கருத்தாழமிக்க வார்த்தைகளை மீண்டும் சொல்வதே மிகவும் எளிய வழி. நீங்கள் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தால், முக்கிய வார்த்தைகளை கண்டுகொள்ள உதவும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம். ஒரு தொகுதியினரிடம் பேசும்போது, நேர்ப்பதங்களை (synonyms) பயன்படுத்துவதன் மூலமோ அல்லது அந்தக் கருத்தை மீண்டும் சொல்வதன் மூலமோ பேச்சாளர்கள் சிலர் தங்களுடைய நோக்கத்தை அடைய விரும்புகிறார்கள். என்றபோதிலும், நீங்கள் இப்படி செய்யும்போது, விவாதிக்கப்படும் குறிப்புக்கும் வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை சபையார் விட்டுவிடாதவாறு கவனமாயிருங்கள்.
முக்கிய வார்த்தைகளை தனிப்படுத்திக் காட்டுவதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல அஸ்திவாரத்தை போடுகிறீர்கள். இப்பொழுது அதன்மீது நியாயவிவாதத்தை கட்டுங்கள். நீங்கள் ஒரு வசனத்தைப் பயன்படுத்துவதற்குரிய காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்டி அதை அறிமுகப்படுத்தினீர்களா? அப்படியானால், எதை எதிர்பார்க்கும்படி சபையாரை தூண்டினீர்களோ அதற்கும் நீங்கள் சிறப்பித்துக் காட்டிய வார்த்தைகளுக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுங்கள். அந்தத் தொடர்பு என்ன என்பதை தெளிவாக கூறுங்கள். இதுபோன்ற தெளிவான ஓர் அறிமுகத்தை அந்த வசனத்திற்கு நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும்கூட, பிற்பாடு அந்த வசனத்தை ஓரளவுக்காவது தெளிவுபடுத்துவது அவசியம்.
சிக்கலான கேள்வி என தாங்கள் நினைத்த ஒன்றை பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்; அதாவது, “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா”? என்றார்கள். ஆதியாகமம் 2:24-ஐ அடிப்படையாக வைத்து இயேசு பதிலளித்தார். அதில் ஒரு பாகத்திற்கு மட்டுமே கவனத்தை ஒருமுகப்படுத்தி, பின்பு தேவையான பொருத்தத்தை செய்தார் என்பதை கவனியுங்கள். கணவனும் மனைவியும் “ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்” என்பதை சுட்டிக்காட்டி, இயேசு இவ்வாறு கூறி முடித்தார்: “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத். 19:3-6.
ஒரு வசனத்தை தெளிவாக பொருத்திக் காட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டும்? உங்களுடைய சபையாரைப் பொறுத்தும் விவாதிக்கப்படும் குறிப்பின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும் இதை தீர்மானிக்க வேண்டும். எளிமையாகவும் நேரடியாகவும் பேசுவதை உங்களுடைய குறிக்கோளாக வைத்திருங்கள்.
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுங்கள். தெசலோனிக்கேயாவில் அப்போஸ்தலன் பவுல் ஊழியம் செய்கையில், “வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து” பேசியதாக அப்போஸ்தலர் 17:2, 3 நமக்கு கூறுகிறது. இது, யெகோவாவின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு திறமை. உதாரணமாக, இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றிய உண்மைகளை பவுல் விவரித்தார், இவை எபிரெய வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்தன என்பதை காண்பித்தார், பின்பு “நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து” என சொல்வதன் மூலம் வலிமைமிக்க முடிவுரையை வழங்கினார்.
எபிரெயருக்கு எழுதியபோது, பவுல் அடிக்கடி எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காண்பித்தார். ஒரு குறிப்பை வலியுறுத்துவதற்கு அல்லது தெளிவாக்குவதற்கு ஒரு வார்த்தையையோ சிறிய சொற்றொடரையோ தனிப்படுத்தி பிற்பாடு அதன் முக்கியத்துவத்தைக் காட்டினார். (எபி. 12:26, 27) எபிரெயர் 3-ம் அதிகாரத்திலுள்ள விவரப்பதிவில், சங்கீதம் 95:7-11-லிருந்து பவுல் மேற்கோள் காட்டினார். பின்பு அதிலுள்ள மூன்று பாகங்களை விரிவாக்கியதை கவனியுங்கள்: (1) இருதயம் (எபி. 3:8-12), (2) “இன்று” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் (எபி. 3:7, 13-15; 4:6-11), (3) “என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லை” என்ற கூற்றின் அர்த்தம் (எபி. 3:11, 18, 19; 4:1-11). ஒவ்வொரு வசனத்தைப் பொருத்தும்போதும் இந்த முன்மாதிரியைப் பின்பற்ற முயலுங்கள்.
லூக்கா 10:25-27-ல் காணப்படும் பதிவில், இயேசு திறம்பட்ட முறையில் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசியதை கவனியுங்கள். நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சிபெற்ற ஒருவன் அவரிடத்தில் இவ்வாறு கேட்டான்: “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும்”? இந்த விஷயத்தின் பேரில் முதலில் அவனுடைய கருத்தை இயேசு கேட்டார், அதன் பின்பு கடவுளுடைய வார்த்தை சொல்வதை செய்வதன் முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்தினார். அந்த மனிதன் அக்குறிப்பை கவனிக்கத் தவறியது தெளிவாக தெரிந்தபோது, அந்த வசனத்திலிருந்து ஒரேவொரு வார்த்தையை—‘அயலான்’ என்ற வார்த்தையை—பற்றியே இயேசு விரிவாக பேசினார். வெறுமனே அந்த வார்த்தையை விளக்குவதற்குப் பதிலாக, அந்த மனிதனே சரியான முடிவுக்கு வர ஓர் உவமையை பயன்படுத்தினார்.
கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, நேரடியான, சந்தேகத்திற்கு இடமற்ற பதிலை தருகிற வசனங்களை இயேசு வெறுமனே மேற்கோள் காண்பிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவற்றை சரியாக பகுத்துணர்ந்து, அதன்பின் கேட்கப்பட்ட கேள்விக்குப் பொருத்திக் காட்டினார்.
சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை எதிர்த்து கேள்வி கேட்டபோது, யாத்திராகமம் 3:6-ல் காணப்படும் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கே இயேசு கவனத்தை ஒருமுகப்படுத்தினார். ஆனால் அவர் அந்த வசனத்தை மேற்கோள் காட்டியதோடு விட்டுவிடவில்லை. உயிர்த்தெழுதல் கடவுளுடைய நோக்கத்தின் பாகம் என்பதை தெளிவாக காண்பிப்பதற்கு அதன் பேரில் நியாயங்காட்டிப் பேசினார்.—மாற். 12:24-27.
நீங்கள் திறமை வாய்ந்த போதகராவதற்கு, வேதவசனங்களிலிருந்து திருத்தமாகவும் திறம்படவும் நியாயங்காட்டிப் பேசுவதில் வல்லவர்களாவது இன்றியமையாதது.