உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தோட்டத்தில் கடுந்துயரம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 117

      தோட்டத்தில் கடுந்துயரம்

      இயேசு ஜெபம்பண்ணி முடித்த போது, அவரும் அவருடைய 11 உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் யெகோவாவுக்கு துதி பாடல்களை பாடுகின்றனர். பின்பு அவர்கள் மேலறையிலிருந்து இறங்கி வந்து இரவின் குளிரில் இருட்டில் வெளியேறி கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து பெத்தானியாவை நோக்கி திரும்பிச் செல்கின்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர்கள் பிடித்தமான ஓர் இடத்தில் கெத்செமனே தோட்டத்தில் நிற்கின்றனர். இது ஒலிவ மலையின் மேல் அல்லது ஒலிவ மலைக்கு அருகாமையில் இருக்கிறது. இயேசு தம் அப்போஸ்தலர்களோடு இங்கு ஒலிவ மரங்களுக்கு நடுவில் அடிக்கடி கூடியிருக்கிறார்.

      அப்போஸ்தலர்களில் எட்டு பேரை விட்டுவிட்டு—ஒருவேளை தோட்டத்து வாசலின் அருகாமையில்—அவர் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்: “நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள்.” பின்பு அவர் மற்ற மூவரையும்—பேதுரு, யாக்கோபு, யோவான்—கூட்டிக்கொண்டு தோட்டத்துக்குள் இன்னும் உள்ளே செல்கிறார். இயேசு துக்கமடைந்து, வியாகுலப்படுகிறார். “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள்” என்று அவர் அவர்களிடம் சொல்கிறார்.

      சற்று முன்னே சென்று, இயேசு முகங்குப்புற விழுந்து ஊக்கமாக ஜெபிக்க ஆரம்பிக்கிறார்: “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்? அவர் ஏன் “மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறார்?” மரிப்பதற்கும் மீட்கும் பொருளை அளிப்பதற்கும் தான் எடுத்திருக்கும் தீர்மானத்திலிருந்து அவர் பின்வாங்கிப் போகிறாரா?

      இல்லவே இல்லை! மரணத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று இயேசு வேண்டிக்கொள்ளவில்லை. பலியாக மரிப்பதை தவிர்க்கும்படி ஒரு சமயம் பேதுரு தெரிவித்த எண்ணமும்கூட அவருக்கு வெறுப்பாயிருக்கிறது. மாறாக, அவர் சீக்கிரம் மரிக்கப்போகும் விதத்தைக் குறித்து—ஓர் இகழத்தக்க குற்றவாளியாக மரிப்பது அவருடைய பிதாவின் பெயருக்கு அவதூறு கொண்டு வரும் என்பதைக் குறித்து பயப்படுவதால்—அவர் கடுந்துயரத்தில் இருக்கிறார். இன்னும் சில மணிநேரங்களில் அவர் மிக மோசமான ஆளாக—கடவுளை பழிதூற்றியவராக கழுமரத்தில் அறையப்படப் போகிறார் என்பதை அவர் இப்போது உணருகிறார்! இதுதான் அவரை மிகுதியாக கலக்கமடையச் செய்கிறது.

      நீண்ட நேரம் ஜெபித்த பின்பு, இயேசு திரும்பி வந்து மூன்று அப்போஸ்தலர்களும் உறங்கிக் கொண்டிருக்கிறதை காண்கிறார். பேதுருவை நோக்கி அவர் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.” அதிக நேரமாகிவிட்டதையும், அவர்கள் அழுத்தத்தின் கீழ் இருந்ததையும் ஒப்புக்கொண்டு, அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.”

      பின்பு இரண்டாவது முறையாக இயேசு செல்கிறார், “இந்தப் பாத்திரத்தை” அதாவது, அவருக்காக யெகோவாவின் நியமிக்கப்பட்ட பங்கு அல்லது சித்தத்தை கடவுள் அவரிடமிருந்து நீக்கிப்போடும்படியாக வேண்டிக்கொள்கிறார். அவர் திரும்பி வரும்போது, அவர்கள் மூவரும் மறுபடியும் உறங்கிக்கொண்டிருப்பதை அவர் காண்கிறார். அவர்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். இயேசு அவர்களிடம் பேசுகிற போது, என்ன பதில் சொல்ல வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

      இறுதியில், மூன்றாவது முறையாக இயேசு செல்கிறார், ஏறக்குறைய ஒரு கல் தொலைவு தூரம் சென்று முழங்காற்படியிட்டு பலத்த சப்தத்தோடும் கண்ணீரோடும் அவர் ஜெபிக்கிறார்: “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்.” ஒரு குற்றவாளியாக அவர் மரிப்பது அவருடைய பிதாவின் பேரில் கொண்டுவரப்போகும் நிந்தனையினால் இயேசு கடுமையான வேதனையை உணருகிறார். ஏன், ஒரு தேவதூஷணம் சொல்பவராக—கடவுளை பழிதூற்றும் ஒருவராக—குற்றம் சாட்டப்படுவது தாங்கிக் கொள்வதற்கு மிக அதிகமாயிருக்கிறது!

      இருந்தபோதிலும், இயேசு தொடர்ந்து ஜெபிக்கிறார்: “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” இயேசு கீழ்ப்படிதலோடு தம்முடைய சித்தத்தை கடவுளுடைய சித்தத்துக்கு கீழ்ப்படுத்துகிறார். அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, சில உற்சாகமூட்டும் வார்த்தைகளோடு அவரை பலப்படுத்துகிறார். தம் பிதாவின் அங்கீகார புன்முறுவலை அவர் கொண்டிருக்கிறார் என்று தேவதூதன் ஒருவேளை இயேசுவுக்குக் கூறுகிறார்.

      என்றபோதிலும், இயேசுவின் தோள்களின் மீது என்னே ஒரு சுமை இருக்கிறது! அவருடைய சொந்த நித்திய ஜீவனும், முழு மானிட இனத்தின் நித்திய ஜீவனும் தராசில் தொங்குகிறது. உணர்ச்சி சம்பந்தப்பட்ட அழுத்தம் மிகப் பெரியதாய் இருக்கிறது. ஆகையால் இயேசு தொடர்ந்து இன்னுமதிக ஊக்கமாக ஜெபிக்கிறார், அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் தரையில் விழுகின்றன. அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “இது ஓர் அரிய நிகழ்ச்சியாய் இருந்தபோதிலும், இரத்த வியர்வை . . . அதிக உயர்ந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட நிலைமைகளில் ஒருவேளை ஏற்படலாம்.”

      அதற்குப் பிறகு, இயேசு மூன்றாவது முறையாக தம் அப்போஸ்தலர்களிடம் திரும்பி வருகிறார், அவர்கள் மறுபடியும் உறங்கிக் கொண்டிருப்பதை காண்கிறார். அவர்கள் அதிக துக்கத்தால் சோர்வடைந்திருக்கின்றனர். ‘இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் நித்திரை பண்ணி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று அவர் ஆச்சரியப்படுகிறார். “போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக் கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்.”

      அவர் இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், யூதாஸ்காரியோத்தும் அவனோடு கூட திரளான ஜனங்களும் பந்தங்களையும், தீவட்டிகளையும், ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். மத்தேயு 26:30, 36–47; 16:21–23; மாற்கு: 14:26, 32–43; லூக்கா 22:39–47; யோவான் 18:1–3; எபிரெயர் 5:7.

      ▪ மேலறையை விட்டு புறப்பட்ட பிறகு, இயேசு அப்போஸ்தலர்களை எங்கே வழிநடத்திச் செல்கிறார்? அவர் அங்கே என்ன செய்கிறார்?

      ▪ இயேசு ஜெபித்துக் கொண்டிருக்கையில், அப்போஸ்தலர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்?

      ▪ இயேசு ஏன் கடுந்துயரத்தில் இருக்கிறார்? கடவுளிடம் அவர் என்ன வேண்டிக் கொள்கிறார்?

      ▪ இயேசுவின் வியர்வை இரத்தத் துளிகளாக ஆவது எதைக் குறிப்பிடுகிறது?

  • காட்டிக்கொடுக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 118

      காட்டிக்கொடுக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும்

      யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும், பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள், மேலும் மற்ற ஆட்களையும் கெத்செமனே தோட்டத்துக்குள் வழிநடத்திச் செல்கையில் அப்போது நேரம் நள்ளிரவையும் கடந்துவிட்டிருக்கிறது. இயேசுவை காட்டிக் கொடுப்பதற்கு 30 வெள்ளிக்காசுகள் யூதாசுக்கு கொடுப்பதாக ஆசாரியர்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றனர்.

      இதற்கு முன்பு யூதாஸ் பஸ்கா போஜனத்திலிருந்து அனுப்பிவிடப்பட்ட போது, அவன் பிரதான ஆசாரியர்களிடம் நேரே சென்றிருக்கிறான். இவர்கள் உடனடியாக தங்கள் சொந்த அலுவலர்களையும், போர்ச்சேவகரின் கூட்டத்தையும் ஒன்றாக கூடிவரச் செய்தனர். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பஸ்காவை கொண்டாடிய இடத்துக்கு அவர்களை யூதாஸ் முதலில் வழிநடத்திச் சென்றான். அவர்கள் அவ்விடத்தை விட்டு புறப்பட்டு விட்டனர் என்பதை கண்டுபிடித்த போது, ஆயுதங்களை தாங்கிய பெரிய கூட்டம் பந்தங்களையும், தீவட்டிகளையும் எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வெளியே கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து யூதாசை பின்பற்றி சென்றனர்.

      ஒலிவ மலையின் மேல் இக்கூட்டத்தை யூதாஸ் வழிநடத்திச் செல்கையில், இயேசுவை எங்கே கண்டுபிடிப்பது என்பதை தான் நிச்சயமாக அறிந்திருப்பதாக உணருகிறான். கடந்த வாரத்தின் போது, இயேசுவும், அப்போஸ்தலர்களும் பெத்தானியாவுக்கும் எருசலேமுக்கும் இடையே பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் சம்பாஷிப்பதற்கும் அடிக்கடி கெத்செமனே தோட்டத்துக்குச் சென்றனர். ஆனால் இப்போது இயேசு ஒலிவ மரங்களுக்கு நடுவே இருட்டில் மறைந்திருந்ததால், போர்ச்சேவகர்கள் அவரை எவ்வாறு அடையாளம் கண்டுபிடிக்க முடியும்? இதற்கு முன்பு அவர்கள் அவரை ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆகையால் யூதாஸ் ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறான்: “நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டு போங்கள்.”

      யூதாஸ் அந்தப் பெரிய கூட்டத்தை தோட்டத்துக்குள் வழிநடத்திச் செல்கிறான், இயேசுவை அவருடைய அப்போஸ்தலர்களோடு காண்கிறான், நேரே அவரிடம் செல்கிறான்: “ரபீ, வாழ்க” என்று சொல்லி அவரை மிகவும் பாசத்தோடு முத்தம் செய்கிறான்.

      “சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய்?” என்று இயேசு கேட்கிறார். பின்பு, தம் சொந்த கேள்விக்கு பதிலளிப்பவராய் அவர் இவ்வாறு சொல்கிறார்: “யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?” தம்மைக் காட்டிக் கொடுப்பவனிடம் இன்னும் பேசவேண்டிய அவசியமில்லை! எரிந்துகொண்டிருக்கும் பந்தங்கள், தீவட்டிகளின் வெளிச்சத்துக்குள் இயேசு சென்று இவ்வாறு கேட்கிறார்: “யாரைத் தேடுகிறீர்கள்?”

      “நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம்” என்று பதில் வருகிறது.

      அவர்கள் எல்லாருக்கும் முன்பாக தைரியமாக நின்று “நான் தான்” என்று இயேசு பதிலளிக்கிறார். அவருடைய தைரியத்தால் வியப்படைந்து, என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமல், அந்த மனிதர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுகிறார்கள்.

      “நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்” என்று இயேசு அமைதியாக தொடர்ந்து சொல்கிறார். சிறிது நேரத்துக்கு முன்பு மேலறையில் இருக்கையில், அவர் தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களை காத்துக்கொண்டதாகவும், “கேட்டின் மகன் தவிர” அவர்களில் ஒருவனையும் இழந்து போகவில்லையென்றும் இயேசு தம் பிதாவிடம் ஜெபத்தில் சொல்லியிருந்தார். ஆகையால், அவருடைய வார்த்தை நிறைவேற்றமடைவதற்காக, அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை போகவிடும்படியாக கேட்கிறார்.

      போர்ச்சேவகர்கள் தங்கள் சுயநிலையை மறுபடியும் அடைந்து, எழுந்து நின்று, இயேசுவை கட்ட ஆரம்பித்த போது, என்ன நடக்கப் போகிறது என்பதை அப்போஸ்தலர்கள் கண்டுணர்கின்றனர். “ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். இயேசு பதிலளிப்பதற்கு முன்பே பேதுரு, அப்போஸ்தலர்கள் கொண்டு வந்திருக்கும் இரண்டு பட்டயங்களில் ஒன்றை எடுத்து, பிரதான ஆசாரியனின் அடிமையாகிய மல்குஸ் என்பவனை தாக்குகிறான். பேதுருவின் வீச்சு அடிமையின் தலையை தவறுகிறது, ஆனால் அவனுடைய வலது காதை வெட்டுகிறது.

      இயேசு குறுக்கிட்டு “இம்மட்டில் நிறுத்துங்கள்” என்று சொல்கிறார். மல்குஸ்-ன் காதைத் தொட்டு அவர் காயத்தை குணமாக்குகிறார். பின்பு அவர் ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறார். பேதுருவை நோக்கி இவ்வாறு கட்டளையிடுகிறார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டரென்று நினைக்கிறாயா?”

      கைது செய்யப்படுவதற்கு இயேசு மனமுள்ளவராய் இருக்கிறார், அதை அவர் இவ்வாறு விளக்குகிறார்: “இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?” பின்பு மேலும் சொல்கிறார்: “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” அவருக்கான கடவுளுடைய சித்தத்தோடு அவர் முற்றிலும் இசைவாய் இருக்கிறார்!

      அடுத்து இயேசு கூட்டத்தாரை நோக்கி இவ்வாறு சொல்கிறார்: “கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்க வந்தீர்களா?” என்று அவர் கேட்கிறார். “நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது.”

      அப்போது போர்ச்சேவகர் கூட்டமும், போர்ச் சேவகருக்குத் தலைவனும், யூதருடைய அலுவலர்களும் இயேசுவைப் பிடித்து அவரைக் கட்டுகின்றனர். இதைப் பார்த்த போது, அப்போஸ்தலர்கள் இயேசுவை விட்டு ஓடிப்போகிறார்கள். என்றபோதிலும், ஓர் இளம் மனிதன்—அது ஒருவேளை சீஷனாகிய மாற்குவாக இருக்கலாம்—ஜனக்கூட்டத்தார் நடுவே இருக்கிறான். இயேசு பஸ்காவை கொண்டாடின வீட்டில் அவன் ஒருவேளை இருந்திருக்கலாம், அதற்கு பிறகு அங்கிருந்து ஜனக்கூட்டத்தாரை பின்தொடர்ந்து வந்திருக்கிறான். இப்போது, அவன் அடையாளங் கண்டுகொள்ளப்படுகிறான், அவனை பிடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அவன் தன் வஸ்திரத்தை போட்டு விட்டு ஓடிப்போகிறான். மத்தேயு 26:47–56; மாற்கு 14:43–52; லூக்கா 22:47–53; யோவான் 17:12; 18:3–12.

      ▪ இயேசுவை கெத்செமனே தோட்டத்தில் காணமுடியும் என்று யூதாஸ் ஏன் நிச்சயமாக உணருகிறான்?

      ▪ இயேசு எவ்வாறு தம் அப்போஸ்தலர்களின் பேரில் அக்கறையை வெளிப்படுத்துகிறார்?

      ▪ இயேசுவை பாதுகாக்க பேதுரு என்ன நடவடிக்கை எடுக்கிறான்? ஆனால் இயேசு அதைக்குறித்து பேதுருவிடம் என்ன சொல்கிறார்?

      ▪ அவருக்காக கடவுள் வைத்திருக்கும் சித்தத்தோடு தாம் முழுவதும் இணக்கமாய் இருப்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

      ▪ அப்போஸ்தலர்கள் இயேசுவை விட்டுச்சென்ற போது, யார் அங்கு இன்னும் தங்கியிருப்பது? அவனுக்கு என்ன நேரிடுகிறது?

  • அன்னாவிடம் கொண்டு போகப்படுகிறார், பின்னர் காய்பாவிடம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 119

      அன்னாவிடம் கொண்டு போகப்படுகிறார், பின்னர் காய்பாவிடம்

      இயேசு பொது குற்றவாளியாக கட்டப்பட்டு, செல்வாக்குமிக்க முன்னாள் பிரதான ஆசாரியனாகிய அன்னா என்பவனிடம் வழிநடத்தப்படுகிறார். இயேசு 12 வயது சிறுவனாக இருந்த போது ஆலயத்தில் இருந்த போதகர்களை ஆச்சரியமடையச் செய்த போது, அன்னா பிரதான ஆசாரியனாக இருந்தான். அன்னாவின் அநேக குமாரர்கள் பின்பு பிரதான ஆசாரியராக சேவித்தனர், தற்போது அவனுடைய மருமகனாகிய காய்பா அந்த ஸ்தானத்தை வகிக்கிறான்.

      இயேசு முதலில் அன்னாவின் வீட்டுக்கு கொண்டு போகப்படுகிறார், ஏனென்றால் அந்தப் பிரதான ஆசாரியன் யூத மத வாழ்க்கையில் நீண்ட காலமாக முக்கியத்துவம் வாய்ந்தவனாக இருக்கிறான். இடையே அன்னாவைப் பார்ப்பதற்கு கொண்டு செல்லப்படுவது, பிரதான ஆசாரியனாகிய காய்பா 71 அங்கத்தினர்கள் அடங்கிய யூத உயர்நீதி மன்றமாகிய நியாயசங்கத்தை ஒன்று கூட்டுவதற்கும் பொய் சாட்சிகளை கூட்டிச் சேர்ப்பதற்கும் நேரத்தை அனுமதிக்கிறது.

      பிரதான ஆசாரியனாகிய அன்னா இப்போது இயேசுவை அவருடைய சீஷர்களைப் பற்றியும், அவருடைய போதகத்தைப் பற்றியும் கேள்வி கேட்கிறான். இயேசு அதற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்: “நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே.”

      அப்போது இயேசுவின் அருகில் நின்று கொண்டிருந்த சேவகரில் ஒருவன் அவரை முகத்தில் அறைந்து, இவ்வாறு சொல்கிறான்: “பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது?”

      “நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று இயேசு பதிலளிக்கிறார். இந்தப் பரிமாற்றத்துக்குப் பிறகு, அன்னா காய்பாவினிடத்திற்கு இயேசுவை கட்டுண்டவராக அனுப்புகிறான்.

      அதற்குள் எல்லா பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும், வேதபாரகரும், ஆம், முழு நியாயசங்கமும் ஒன்றுகூட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் ஒன்றுகூடும் இடம் காய்பாவின் வீடாயிருக்கிறது. ஒரு பஸ்கா இரவன்று இப்படிப்பட்ட விசாரணையை நடத்துவது யூத சட்டத்துக்கு விரோதமானது என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் இது அந்த மதத்தலைவர்களை அவர்களுடைய பொல்லாத நோக்கத்திலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை.

      பல வாரங்களுக்கு முன்பு, இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பிய போது, அவர் மரிக்க வேண்டும் என்று நியாயசங்கம் அவர்களுக்குள்ளே ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு, புதன்கிழமையன்று, மத அதிகாரிகள் இயேசுவை தந்திரமாய் பிடித்து கொலை செய்ய வேண்டும் என்று ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். அவருடைய விசாரணைக்கு முன்பே அவர் உண்மையில் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள்!

      இயேசுவுக்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்குவதற்கு பொய் சாட்சி கொடுக்கக்கூடிய சாட்சிகளை கண்டுபிடிப்பதற்கு இப்போது முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. என்றபோதிலும், தங்கள் அத்தாட்சியில் இணக்கமாயிருக்கும் ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. இறுதியில், இரண்டு பேர் முன்வந்து உறுதியாகக் கூறுகின்றனர்: “கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப் போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்.”

      “இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா?” என்று காய்பா கேட்கிறான். ஆனால் இயேசு பேசாமலிக்கிறார். நியாயசங்கம் வெட்கப்பட வேண்டிய விதத்தில் இந்தப் பொய் குற்றச்சாட்டிலும்கூட சாட்சிகள் தங்கள் கதைகளை இணக்கமாய் சொல்ல முடியவில்லை. ஆகையால் பிரதான ஆசாரியன் ஒரு வித்தியாசமான சூழ்ச்சிமுறையை முயற்சி செய்கிறான்.

      கடவுளுடைய குமாரனாக உரிமை பாராட்டிக் கொள்ளும் எவரையும் பற்றி யூதர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதை காய்பா அறிந்திருக்கிறான். இதற்கு முன் இரண்டு சமயங்களில் இயேசுவை மரணத்துக்கு தகுதியாயிருக்கும் ஒரு தேவதூஷணம் சொல்பவராக சிந்தியாமல் துணிச்சலாக முடிவு செய்தனர். ஒரு சமயம் அவர் தாம் கடவுளுக்கு சமமாக இருப்பதாக உரிமை பாராட்டிக் கொள்கிறார் என்று அவர்கள் தவறாக கற்பனை செய்து கொண்டு அவ்வாறு கூறினர். காய்பா இப்போது தந்திரமாக வற்புறுத்தி கேட்கிறான்: “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்.”

      யூதர்கள் என்ன நினைத்தாலும் சரி, இயேசு உண்மையில் கடவுளுடைய குமாரன். பேசாமலிருந்தால் தாம் கிறிஸ்து என்பதை மறுதலிப்பதாக புரிந்து கொள்வார்கள். ஆகையால் இயேசு தைரியமாக பதிலளிக்கிறார்: “நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

      அப்போது, காய்பா நாடக பாணியில் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு சொல்கிறான்: “இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது?”

      “மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்” என்று நியாயசங்கம் அறிவிக்கிறது. பின்பு அவர்கள் அவரை கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர், அவருக்கு விரோதமாக அநேக காரியங்களைச் சொல்லி தூஷிக்கின்றனர். அவரை கன்னத்தில் அறைந்து, அதில் துப்புகின்றனர். மற்றவர்கள் அவருடைய முகம் முழுவதையும் மூடிவிட்டு, தங்கள் கைமுட்டியால் அவரை அடித்து ஏளனமாக இவ்வாறு சொல்கின்றனர்: “கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும்.” இந்த முறைகேடான பழிதூற்றுதல் இரவுநேர விசாரணையின் போது நடக்கிறது. மத்தேயு 26:57–68; 26:3, 4; மாற்கு 14:53–65; லூக்கா 22:54, 63–65; யோவான் 18:13–24; 11:45–53; 10:31–39; 5:16–18.

      ▪ இயேசு முதலில் எங்கே கொண்டு போகப்படுகிறார்? அங்கே அவருக்கு என்ன நடக்கிறது?

      ▪ அடுத்து இயேசு எங்கே கொண்டு போகப்படுகிறார்? என்ன நோக்கத்துக்காக?

      ▪ இயேசு மரணத்துக்கு தகுதியானவர் என்பதை காய்பா எவ்வாறு நியாயசங்கம் அறிவிக்குமாறு செய்கிறான்?

      ▪ விசாரணையின் போது என்ன பழிதூற்றும் முறைகேடான நடத்தை நடக்கிறது?

  • முற்றத்தில் மறுப்புகள்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 120

      முற்றத்தில் மறுப்புகள்

      கெத்செமனே தோட்டத்தில் இயேசுவை கைவிட்டு விட்ட பின்பு, பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களோடுகூட பயத்தில் ஓடுகையில் இடையே நிற்கின்றனர். அன்னாவின் வீட்டுக்கு இயேசு கொண்டுபோகப்படும் போது அவர்கள் அவரோடே செல்கின்றனர். அன்னா பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடம் அவரை அனுப்பும் போது, பேதுருவும் யோவானும் தூரத்தில் அவருக்குப் பின் செல்கின்றனர். தங்கள் சொந்த ஜீவன்களுக்கான பயமும் தங்கள் எஜமானுக்கு என்ன நேரிடுமோ என்பதைப் பற்றி ஆழ்ந்த அக்கறையாலும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

      பரந்த இடமுடைய காய்பாவின் வீட்டுக்கு வந்து சேருகையில், யோவான் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால் முற்றத்துக்குள் அவனால் செல்ல முடிந்தது. ஆனால் பேதுரு வெளியே வாசலருகே நிற்கிறான். ஆனால் விரைவில் யோவான் திரும்பி வந்து வாசல்காக்கிற ஒரு வேலைக்காரியிடம் பேசுகிறான், பேதுரு உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறான்.

      இப்போது குளிராக இருப்பதனால் வீட்டு வேலைக்காரர்களும், பிரதான ஆசாரியரின் அலுவலர்களும் கரி நெருப்புண்டாக்குகின்றனர். இயேசுவின் விசாரணையின் முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது குளிர்க்காய்வதற்காக பேதுரு அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். அங்கு, பேதுருவை உள்ளே அனுப்பிய வாசல்காக்கிறவள் பிரகாசமான நெருப்பின் வெளிச்சத்தில் அவனை நன்றாக பார்க்கிறாள். “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய்!” என்று அவள் உரத்த குரலில் சொல்கிறாள்.

      அடையாளங்கண்டுபிடிக்கப்பட்டதால் நிலைகுலைந்து, பேதுரு எல்லாருக்கும் முன்பாக இயேசுவை அறிந்திருப்பதை மறுதலிக்கிறான். “நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது” என்று அவன் சொல்கிறான்.

      அப்போது பேதுரு வாசல் மண்டபத்துக்கு அருகே செல்கிறான். அங்கு, வேறொருத்தியும் அவனை கவனித்து, அங்கே நின்று கொண்டிருந்தவர்களிடம்: “இவனும் நசரேயனாகிய இயேசுவோடே கூட இருந்தான்.” என்று சொல்கிறாள். “அந்த மனுஷனை நான் அறியேன்” என்று ஆணையிட்டு பேதுரு மீண்டும் ஒருமுறை மறுதலிக்கிறான்.

      பேதுரு முற்றத்திலேயே இருக்கிறான், கூடுமானவரை மறைவாக இருக்க முயற்சி செய்கிறான். இந்தச் சமயத்தில் விடியற்காலை இருட்டில் சேவல் கூவுகிறதை கேட்டு ஒருவேளை அதிர்ச்சியடைகிறான். இதற்கிடையில் இயேசுவின் விசாரணை முற்றத்துக்கு மேலே வீட்டின் ஒரு பகுதியில் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அத்தாட்சி கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பலவிதமான சாட்சிகள் போகிறதையும் வருகிறதையும் கீழே காத்துக் கொண்டிருக்கும் பேதுருவும் மற்றவர்களும் சந்தேகமின்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

      இயேசுவின் ஒரு கூட்டாளியாக பேதுரு அடையாளங் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது. இப்போது சுற்றி நின்றுகொண்டிருப்பவர்களில் அநேகர் அவரிடம் வந்து இவ்வாறு சொல்கின்றனர்: “மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது.” அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் மல்குஸ் என்பவனின் உறவினனாக இருக்கிறான். மல்குஸ்-ன் காதை பேதுரு வெட்டினான். “நான் உன்னை அவனுடனே கூடத் தோட்டத்திலே காணவில்லையா?” என்று அவன் சொல்கிறான்.

      “அந்த மனுஷனை அறியேன்” என்று பேதுரு ஆவேசத்தோடே உறுதியாகக் கூறுகிறான். அந்த விஷயத்தைக் குறித்து தான் உண்மையை சொல்லவில்லையென்றால் தன்மீது தானே தீமையை வரவழைத்துக் கொள்வதைப் போல் சபித்து, சத்தியம் பண்ணுவதன் மூலம் அவர்கள் எல்லாரும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர் என்று அவர்களை நம்ப வைப்பதற்கு முயற்சி செய்கிறான்.

      மூன்றாவது முறையாக பேதுரு மறுதலிக்கும் போது, ஒரு சேவல் கூவுகிறது. அந்தச் சமயத்தில் இயேசு வெளியே வந்து முற்றத்துக்கு மேல் இருக்கும் மாடி முன்முகப்புக்கு வந்து திரும்பி பேதுருவை நோக்கிப் பார்க்கிறார். சில மணிநேரங்களுக்கு முன்பு மேலறையில் இயேசு சொன்னதை பேதுரு உடனே நினைவுகூருகிறான்: “சேவல் இரண்டு தரம் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்.” தன்னுடைய பாவத்தின் பாரத்தால் நெருக்கப்பட்டு, பேதுரு வெளியே சென்று மனங்கசந்து அழுகிறான்.

      இது எவ்வாறு நடக்கக்கூடும்? தன் ஆவிக்குரிய பலத்தைக் குறித்து அவ்வளவு நிச்சயமாக இருந்த பேதுரு எவ்வாறு தன் எஜமானை மூன்று முறை அடுத்து அடுத்து மறுதலிக்க முடியும்? சந்தேகமின்றி சூழ்நிலைமைகள் விழிப்பற்ற நிலையில் பேதுருவை திடுக்கிடச் செய்கின்றன. உண்மை திரித்துக் கூறப்படுகிறது, இயேசு ஓர் இழிவான குற்றவாளியாக காண்பிக்கப்படுகிறார். சரியானதை தவறானது போலவும் குற்றமற்றவரை குற்றமுள்ளவராகவும் தோன்றச் செய்கின்றனர். ஆகையால் அந்தச் சமயத்தில் இருந்த அழுத்தங்களினால் பேதுரு சமநிலையை இழந்துவிடுகிறான். திடீரென அவனுடைய உண்மைத்தவறாமையின் சரியான உணர்வு குலைந்துவிடுகிறது; மனித பயத்தால் அவன் செயலிழந்துவிடுகிறான். நமக்கு அது ஒருபோதும் ஏற்படாதிருப்பதாக! மத்தேயு 26:57, 58, 69–75; மாற்கு 14:30, 53, 54, 66–72; லூக்கா 22:54–62; யோவான் 18:15–18, 25–27.

      ▪ பேதுருவும் யோவானும் பிரதான ஆசாரியனின் முற்றத்துக்குள் எவ்வாறு பிரவேசிக்க முடிகிறது?

      ▪ பேதுருவும் யோவானும் முற்றத்தில் இருக்கையில், வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

      ▪ ஒரு சேவல் எத்தனை தடவை கூவுகிறது? கிறிஸ்துவை அறிந்திருப்பதை பேதுரு எத்தனை தடவைகள் மறுதலிக்கிறான்?

      ▪ பேதுரு சபித்து, சத்தியம் பண்ணுகிறதன் அர்த்தமென்ன?

      ▪ இயேசுவை தான் அறிந்திருப்பதை மறுதலிக்கும்படி பேதுருவை செய்வித்தது எது?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்