உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயசங்கத்தின் முன், பின்பு பிலாத்துவிடம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 121

      நியாயசங்கத்தின் முன், பின்பு பிலாத்துவிடம்

      இரவு முடியும் தறுவாயில் இருக்கிறது. பேதுரு இயேசுவை மூன்றாவது முறையாக மறுதலித்திருக்கிறார், நியாய சங்க அங்கத்தினர்கள் அப்போது தான் தங்கள் போலி விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றிருக்கின்றனர். என்றபோதிலும், வெள்ளிக்கிழமை காலை விடிந்த உடனேயே, அவர்கள் மறுபடியும் கூடுகின்றனர், இம்முறை அவர்களுடைய ஆலோசனை சங்க மன்றத்தில் கூடுகின்றனர். கடந்த இரவு நடந்த விசாரணை, சட்டத்துக்கு ஒத்திருந்தது என்ற தோற்றத்தை கொடுப்பதே அநேகமாக அவர்களுடைய நோக்கம். இயேசு அவர்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட போது, இரவில் சொன்னது போலவே அவர்கள் சொல்கின்றனர்: “நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல்.”

      “நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்” என்று இயேசு பதிலளிக்கிறார். “நான் உங்களிடத்தில் வினவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள்.” என்றபோதிலும், இயேசு தாம் யார் என்பதை தைரியமாக குறிப்பிட்டுக் காட்டுகிறார்: “இது முதல் மனுஷகுமாரன் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார்.”

      “அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா?” என்று எல்லாரும் அறிய விரும்புகின்றனர்.

      “நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

      கொலை செய்வதற்கு தீவிரமாய் காத்திருக்கும் இந்த மனிதர்களுக்கு, இந்தப் பதில் போதுமானதாயிருக்கிறது. அவர்கள் இதை தேவ தூஷணமாக கருதுகின்றனர். “இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன?” என்று அவர்கள் கேட்கின்றனர். “நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே.” ஆகையால், அவர்கள் இயேசுவைக் கட்டி, கொண்டு போய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்படைக்கின்றனர்.

      இயேசுவைக் காட்டிக் கொடுத்தவனாகிய யூதாஸ் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறான். இயேசு மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாபப்படுகிறான். ஆகையால் அவன் அந்த 30 வெள்ளிக்காசை திரும்பக் கொடுப்பதற்கு பிரதான ஆசாரியரிடத்திற்கும், மூப்பரிடத்திற்கும் செல்கிறான். “குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ் செய்தேன்” என்று அவன் விளக்குகிறான்.

      “எங்களுக்கென்ன, அது உன் பாடு” என்று அவர்கள் இரக்கமின்றி பதிலளிக்கின்றனர். ஆகையால் யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப் போய், தன்னையே தூக்கிலிட்டுக் கொள்ள முயற்சி செய்கிறான். என்றபோதிலும், யூதாஸ் கயிற்றை கட்டிய கிளை முறிந்து, அவனுடைய உடல் கீழே இருக்கும் பாறைகளில் விழுகிறது, அங்கே அது வெடித்துச் சிதறுகிறது.

      வெள்ளிக்காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதைப் பற்றி பிரதான ஆசாரியர்கள் நிச்சயமாயில்லை. “இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று” அவர்கள் முடிவு செய்கின்றனர். ஆகையால், ஒன்றாகக் கூடி ஆலோசித்த பிறகு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குரிய குயவனுடைய நிலத்தை அந்தப் பணத்தைக் கொண்டு வாங்குகின்றனர். ஆகையால் அந்த நிலம் “இரத்த நிலம்” என்றழைக்கப்படுகிறது.

      தேசாதிபதியின் அரண்மனைக்கு இயேசு கொண்டு போகப்பட்ட போது இன்னும் விடியற்காலையாகவே இருக்கிறது. ஆனால் அவரோடு கூட சென்ற யூதர்கள் அரண்மனைக்குள் பிரவேசிக்க மறுக்கின்றனர், ஏனென்றால் புறஜாதியாரோடு அப்படிப்பட்ட நெருக்கமான கூட்டுறவு அவர்களைக் கறைப்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். ஆகையால் அவர்களோடு ஒத்துப் போவதற்கு பிலாத்து வெளியே வருகிறான்: “இந்த மனுஷன் மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று அவன் கேட்கிறான்.

      “இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்க மாட்டோம்” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர்.

      இதில் உட்பட்டுவிடுவதை தவிர்க்க விரும்புவதால் பிலாத்து இவ்வாறு பிரதிபலிக்கிறான்: “இவனை நீங்களே கொண்டு போய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள்.”

      தங்கள் கொலைசெய்யும் எண்ணத்தை வெளிக்காட்டி, யூதர்கள் இவ்வாறு உரிமைபாராட்டுகின்றனர்: “ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை.” உண்மையில், அவர்கள் பஸ்கா பண்டிகையின் போது இயேசுவை கொலை செய்வார்களேயானால், அது பொதுமக்கள் கிளர்ச்சி செய்யும்படி செய்யும், ஏனென்றால் அநேகர் இயேசுவை அதிக மதிப்புக்குரியவராக கருதுகின்றனர். ஆனால் ஓர் அரசியல் குற்றச்சாட்டின் பேரில் ரோமர்கள் அவரை கொலை செய்யும்படி அவர்கள் செய்தால் இது பொது மக்களுக்கு முன்பாக இருக்கும் உத்தரவாதத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.

      ஆகையால் அந்த மதத் தலைவர்கள், இதற்கு முன் நடந்த விசாரணையின் போது தேவதூஷணம் சொன்னதற்காக இயேசுவை கண்டனம் செய்ததை குறிப்பிடாமல், இப்போது வித்தியாசமான குற்றச் சாட்டுகளை பொய்யாகக் கட்டுகின்றனர். மூன்று-பகுதிகளாலான குற்றச்சாட்டை அவர்கள் சுமத்துகின்றனர்: “[1] இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், [2] ராயருக்கு வரி கொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, [3] ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம்.”

      இயேசு தம்மை ராஜாவாக உரிமைபாராட்டிக் கொள்ளும் குற்றச்சாட்டு தான் பிலாத்துவுக்கு கவலையாயிருக்கிறது. ஆகையால், அவன் அரண்மனைக்குள் மறுபடியும் பிரவேசித்து, இயேசுவை தன்னிடம் அழைத்து இவ்வாறு கேட்கிறான்: “நீ யூதருடைய ராஜாவா?” வேறு வார்த்தைகளில் சொன்னால், இராயனுக்கு எதிராக உன்னையே ராஜாவாக அறிவித்துக் கொள்வதன் மூலம் நீ சட்டத்தை மீறினாயா?

      அவரைப் பற்றி பிலாத்து ஏற்கெனவே எவ்வளவு கேள்விப்பட்டிருக்கிறான் என்பதை இயேசு அறிந்து கொள்ள விரும்புகிறார், ஆகையால் அவர் இவ்வாறு கேட்கிறார்: “நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக் குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ?”

      அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை பிலாத்து வெளிப்படையாகத் தெரிவித்து, உண்மைகளை அறிந்து கொள்ள விரும்புகிறான். அவன் பதிலளிக்கிறான்: “நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய்?”

      அரசபதவியை பற்றிய விவாதத்தை இயேசு எந்த விதத்திலும் காலம் கடத்தி ஏமாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இப்போது இயேசு கொடுக்கும் பதில் சந்தேகமின்றி பிலாத்துவை ஆச்சரியமடையச் செய்கிறது. லூக்கா 22:66–23:3; மத்தேயு 27:1–11; மாற்கு 15:1; யோவான் 18:28–35; அப்போஸ்தலர் 1:16–20.

      ▪ என்ன நோக்கத்துக்காக நியாயசங்கம் மறுபடியும் காலையில் ஒன்று கூடிவருகிறது?

      ▪ யூதாஸ் எவ்வாறு மரிக்கிறான்? 30 வெள்ளிக்காசைக் கொண்டு என்ன செய்யப்படுகிறது?

      ▪ தாங்களே அவரை கொல்வதற்கு பதிலாக ரோமர்கள் இயேசுவை கொலைசெய்யும்படி ஏன் யூதர்கள் விரும்புகின்றனர்?

      ▪ இயேசுவுக்கு விரோதமாக யூதர்கள் என்ன குற்றச்சாட்டுகள் சொல்கின்றனர்?

  • பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 122

      பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்

      இயேசு தாம் ராஜா என்று பிலாத்துவிடம் மறைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாதிருந்த போதிலும், தம் ராஜ்யம் ரோமாபுரிக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று அவர் விளக்குகிறார். “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று இயேசு சொல்கிறார். “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” தம் ராஜ்யம் பூமிக்குரிய ஊற்றுமூலத்திலிருந்து இல்லாவிட்டாலும்கூட தமக்கு ஒரு ராஜ்யம் இருக்கிறது என்பதை இயேசு மூன்று தடவைகள் ஒப்புக்கொள்கிறார்.

      என்றபோதிலும், பிலாத்து அவரை மேலும் வற்புறுத்தி கேட்கிறான்: “அப்படியானால் நீ ராஜாவோ?” அதாவது, உன்னுடைய ராஜ்யம் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதபோதிலும்கூட நீ ஒரு ராஜாவா?

      பிலாத்து சரியான முடிவுக்கு வந்திருக்கிறான் என்பதை இவ்வாறு பதிலளிப்பதன் மூலம் இயேசு பிலாத்துவுக்கு தெரிவிக்கிறார்: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.”

      ஆம், இயேசு பூமியில் வந்ததன் நோக்கம் “சத்தியத்துக்கு” சாட்சி கொடுப்பதற்காகவே, குறிப்பாக அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியம். அதற்காக அவருடைய ஜீவனை கொடுக்க வேண்டியிருந்தாலும் இயேசு அந்தச் சத்தியத்துக்கு உண்மையுள்ளவராக இருக்க தயாராயிருக்கிறார். பிலாத்து “சத்தியமாவது என்ன?” என்று கேட்டாலும், கூடுதலான விளக்கத்துக்காக அவன் காத்திருக்கவில்லை. நியாயத்தீர்ப்பு அளிப்பதற்கு அவன் போதுமானதை கேட்டிருக்கிறான்.

      அரண்மனைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்தாரிடம் பிலாத்து திரும்பி வருகிறான். தன் பக்கத்தில் இயேசுவை வைத்துக்கொண்டு, பிரதான ஆசாரியரிடமும், அவர்களோடிருந்தவர்களிடமும் அவன் இவ்வாறு சொல்கிறான்: “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை.”

      இந்தத் தீர்மானத்தால் கோபமடைந்து ஜனக்கூட்டத்தார் வற்புறுத்த ஆரம்பிக்கின்றனர்: “இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம் வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான்.”

      யூதர்களின் நியாயமற்றத்தன்மை பிலாத்துவை வியப்படையச் செய்ய வேண்டும். ஆகையால், பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில், பிலாத்து இயேசுவிடம் திரும்பி, இவ்வாறு கேட்கிறான்: “இவர்கள் உன் மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா?” பதிலளிப்பதற்கு இயேசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அந்த மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்ப்படுகையிலும் அவர் அமைதியாக இருப்பது பிலாத்துவை வியப்படையச் செய்கிறது.

      இயேசு ஒரு கலிலேயன் என்பதை அறிந்து, தனக்கு இருந்த உத்தரவாதத்திலிருந்து விடுபடுவதற்கு பிலாத்து ஒரு வழியை காண்கிறான். கலிலேயாவின் அதிபதியாகிய ஏரோது அந்திப்பா (மகா ஏரோதின் மகன்) பஸ்காவுக்காக எருசலேமில் இருக்கிறார், ஆகையால் பிலாத்து இயேசுவை அவனிடம் அனுப்புகிறான். முன்னர் ஏரோது அந்திப்பா யோவான் ஸ்நானனின் தலையை வெட்டும்படி செய்தான், அதற்கு பின்பு இயேசு செய்து கொண்டிருந்த அற்புதமான கிரியைகளைப் பற்றி அவன் கேள்விப்பட்ட போது, இயேசு உண்மையில் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்ட யோவான் என்று எண்ணி பயமடைந்தான்.

      இப்போது, ஏரோது இயேசுவை பார்ப்பதற்கு எதிர்பார்த்து அதிக சந்தோஷமடைகிறான். இது இயேசுவின் நலனின் பேரில் அக்கறை இருப்பதாலோ அல்லது அவருக்கு விரோதமான குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பதை கண்டுபிடிக்க அவன் உண்மையிலேயே முயற்சி செய்ய விரும்புவதாலோ அல்ல. மாறாக, இயேசு சில அற்புதங்கள் செய்வதைக் காண்பதற்கு அதிக ஆர்வமுள்ளவனாயிருக்கிறான்.

      என்றபோதிலும், இயேசு, ஏரோதின் ஆர்வத்தை திருப்தி செய்ய மறுத்துவிடுகிறார். உண்மையில், ஏரோது அவரை கேள்வி கேட்கையில், அவர் ஒரு வார்த்தைகூட சொல்வதில்லை. ஏமாற்றமடைந்து, ஏரோதும் அவருடைய போர்ச்சேவகரும் இயேசுவை கேலி செய்கின்றனர். ஒரு மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரை ஏளனம் செய்கின்றனர். பின்பு அவர்கள் அவரை பிலாத்துவிடம் மறுபடியும் அனுப்புகின்றனர். இதன் விளைவாக, முதலில் விரோதிகளாக இருந்த ஏரோதும் பிலாத்துவும் இப்போது நல்ல நண்பர்களாக ஆகின்றனர்.

      இயேசு திரும்பி வந்தபோது, பிலாத்து, பிரதான ஆசாரியர்களையும், யூத அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடி வரச் செய்து, இவ்வாறு சொல்கிறான்: “ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்த போது, இவன் மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்.”

      இவ்வாறு பிலாத்து இயேசுவை இரண்டு முறை குற்றமற்றவர் என்று அறிவித்தான். அவரை விடுதலை செய்வதற்கு அவன் ஆர்வமுள்ளவனாயிருக்கிறான், பொறாமையின் காரணமாக மட்டுமே ஆசாரியர்கள் அவரை ஒப்படைத்திருக்கின்றனர் என்பதை அவன் உணருகிறான். இயேசுவை விடுதலை செய்வதற்கு பிலாத்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கையில், அவ்வாறு செய்வதற்கு இன்னுமதிக பலமான தூண்டுதலைப் பெறுகிறான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி ஒரு செய்தி அனுப்புகிறாள்: “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் [தெய்வீக செயலினால் தோன்றிய] சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன்.”

      என்றபோதிலும், இந்தக் குற்றமற்ற மனிதனை விடுதலை செய்ய வேண்டும் என்று தான் அறிந்திருக்கிறபோதிலும் பிலாத்து எவ்வாறு அவரை விடுதலை செய்ய முடியும்? யோவான் 18:36–38; லூக்கா 23:4–16; மத்தேயு 27:12–14, 18, 19; 14:1, 2; மாற்கு 15:2–5.

      ▪ தன் ராஜபதவியைப் பற்றிய கேள்விக்கு இயேசு எவ்வாறு பதிலளிக்கிறார்?

      ▪ தம் பூமிக்குரிய வாழ்க்கையில் இயேசு சாட்சி கொடுத்த “சத்தியம்” என்ன?

      ▪ பிலாத்துவின் நியாயத்தீர்ப்பு என்ன? ஜனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? பிலாத்து இயேசுவை என்ன செய்கிறான்?

      ▪ ஏரோது அந்திப்பா யார்? இயேசுவை காண்பதற்கு ஏன் அவன் அவ்வளவு சந்தோஷப்படுகிறான்? அவன் அவரை என்ன செய்கிறான்?

      ▪ பிலாத்து இயேசுவை விடுதலைசெய்வதற்கு ஏன் ஆர்வமுள்ளவனாயிருக்கிறான்?

  • “இதோ! அந்த மனிதன்!”
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 123

      “இதோ! அந்த மனிதன்!”

      இயேசுவின் நடத்தையினால் கவர்ச்சிக்கப்பட்டதாலும் அவருடைய குற்றமற்றத் தன்மையை கண்டுணர்வதாலும், அவரை விடுதலை செய்வதற்கு பிலாத்து மற்றொரு வழியை பின்தொடருகிறான். “பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே” என்று அவன் ஜனக்கூட்டத்திடம் சொல்கிறான்.

      பரபாஸ் என்ற பேர்போன கொலைகாரனும் சிறைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கிறான், ஆகையால் பிலாத்து கேட்கிறான்: “எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ?”

      அவர்களைத் தூண்டிவிட்ட பிரதான ஆசாரியர்களால் ஏவப்பட்டு, ஜனங்கள் பரபாசை விடுதலை செய்யவும், ஆனால் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்றும் கேட்கின்றனர். விடாப்பிடியாக பிலாத்து மறுபடியும் இவ்வாறு கேட்கிறான்: “இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டும்?”

      “பரபாஸ்” என்று அவர்கள் கூச்சலிடுகின்றனர்.

      “அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மனக்குழப்பத்தில் கேட்கிறான்.

      காது செவிடாகும் அளவுக்குப் பலத்த குரலில் அவர்கள் பதிலளிக்கின்றனர்: “அவனைச் சிலுவையில் [கழுமரத்தில், NW] அறைய வேண்டும்!” “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்!”

      ஒரு குற்றமற்ற மனிதனின் மரணத்தை அவர்கள் வற்புறுத்திக் கேட்கின்றனர் என்பதை அறிந்து பிலாத்து வாதாடுகிறான்: “ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்.”

      அவனுடைய முயற்சிகள் மத்தியிலும், தங்கள் மதத் தலைவர்களால் தூண்டப்பட்டு மூர்க்கமடைந்த ஜனக்கூட்டத்தார் தொடர்ந்து கூக்குரலிடுகின்றனர்: “அவனைச் சிலுவையில் அறையும்.” ஆசாரியர்களால் வெறியூட்டப்பட்ட ஜனக்கூட்டம் இரத்தம் விரும்புகிறது. ஐந்து நாட்களுக்கு முன்பு தான் இயேசுவை எருசலேமுக்குள் ராஜாவாக வரவேற்றவர்களில் சிலர் அந்தக் கூட்டத்தில் இருப்பதை நினைத்துப் பார்ப்பது ஆச்சரியமாயிருக்கிறது! இவ்வளவு சம்பவங்கள் நடந்த போதும் இயேசுவின் சீஷர்கள் அங்கு இருந்தாலும், அமைதலாகவும் மறைவாகவும் இருக்கின்றனர்.

      தன் வேண்டுகோள்களினால் ஒரு பிரயோஜனமுமில்லை என்பதையும், அதற்கு மாறாக பெருங்கூச்சல் தான் எழும்புகிறது என்பதையும் கண்ட பிலாத்து, தண்ணீரை எடுத்து, ஜனங்களுக்கு முன்பாக தன் கைகளைக் கழுவி, இவ்வாறு சொல்கிறான்: “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.” அப்போது ஜனங்கள் இவ்வாறு பதிலளிக்கின்றனர்: “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக.”

      ஆகையால், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இசைவாக எது சரி என்பதை அறிந்து செயல்படுவதற்கு மேலாக ஜனங்களை திருப்தி செய்ய வேண்டும் என்று விரும்பி பிலாத்து பரபாசை அவர்களுக்கு விடுதலை செய்கிறான். அவன் இயேசுவை கொண்டு போய் அவருடைய வஸ்திரங்களை கழற்றி வாரினால் அடிக்கும்படி செய்கிறான். இது சாதாரண சாட்டையடியாக இல்லை. ரோமர்களின் அடிக்கும் பழக்கத்தை அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகை இவ்வாறு விவரிக்கிறது:

      “சாதாரணமாக இதற்கு உபயோகிக்கப்படும் கருவி ஒரு சிறிய சாட்டை (கசை) பல்வேறு நீளங்களை உடைய அநேக ஒற்றையான அல்லது பின்னப்பட்ட தோல் வார், சிறிய இரும்பு கோலிகள் அல்லது ஆட்டு எலும்புகளின் கூர்மையான துண்டுகள் அதில் இடையிடையே கட்டப்பட்டிருந்தன. . . . ரோம போர்ச்சேவகர்கள் அந்த நபரின் பின்புறத்தை முழு பலத்தோடு திரும்பத் திரும்ப அடிக்கும் போது, இரும்பு கோலிகள் ஆழமான காயத்தை உண்டுபண்ணும், தோல்வார்களும் ஆட்டு எலும்புகளும் தோலையும், தோலின் கீழ் உள்ள இழைமங்களையும் அறுத்துவிடும். பின்பு, தொடர்ந்து சாட்டையினால் அடிக்கும் போது, கிழிக்கப்பட்ட காயங்கள் கீழே இருக்கும் தசைநார்களை கிழித்து, இரத்தம் கசியும் துடிக்கும் தசையாலான பட்டைகளை உண்டுபண்ணும்.”

      இந்தச் சித்தரவதையான அடிகளுக்குப் பிறகு, இயேசு தேசாதிபதியின் அரண்மனைக்கு கொண்டு போகப்படுகிறார், போர்ச்சேவகரின் கூட்டம் கூடிவரச் செய்யப்படுகிறது. அங்கே போர்ச்சேவகர்கள் முள்முடியைப் பின்னி, அதை அவர் தலையின் மேல் கீழிறங்கும்படி அமிழ்துவதன் மூலம் அவரை பழிதூற்றுகின்றனர். அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து அரச குடும்பத்தார் உடுத்திக் கொண்டதைப் போன்ற சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்துகின்றனர். பின்பு அவர்கள் கேலிசெய்யும் விதத்தில் அவரிடம் இவ்வாறு சொல்கின்றனர்: “யூதருடைய ராஜாவே, வாழ்க.” மேலும் அவர்கள் அவர் மேல் துப்பி, அவரை கன்னத்தில் அறைகின்றனர். அவருடைய கையிலிருந்த உறுதியான கோலை எடுத்து, அவர் தலையை அடிக்க உபயோகப்படுத்துகின்றனர், அவரை அவமானப்படுத்தும் “கிரீடத்தின்” கூரான முட்கள் அவருடைய மண்டை ஓட்டுக்குள் இன்னும் ஆழமாகத் தைக்கின்றன.

      இவ்வாறு மோசமாக நடத்தப்பட்டதை இயேசு குறிப்பிடத்தக்க கண்ணியத்தோடும் பலத்தோடும் எதிர்ப்பட்டது பிலாத்துவை அவ்வளவாக கவர்ந்ததனால், அவரை விடுதலை செய்வதற்கு மற்றொரு முறை முயற்சி செய்ய அவன் உந்தப்படுகிறான்: “நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டு வருகிறேன்” என்று அவன் ஜனங்களிடம் சொல்கிறான். சித்திரவதை செய்யப்பட்ட இயேசுவின் நிலைமையை பார்த்தால் அவர்களுடைய இருதயங்கள் மென்மையாகும் என்று அவன் கற்பனை செய்து கொள்கிறான். முட்கிரீடத்தையும் சிவப்பங்கியையும் தரித்தவராக, இரத்தம் வழியும் வேதனையுள்ள முகத்துடன் இயேசு இரக்கமற்ற மக்கட்கூட்டத்துக்கு முன் நிற்கையில், பிலாத்து இவ்வாறு அறிவிக்கிறான்: “இதோ, அந்த மனுஷன்.”

      கடுமையாக நடத்தப்பட்டு காயமடைந்தவராக இருந்த போதிலும், முழு சரித்திரத்திலேயும் அதிக முதன்மை வாய்ந்தவர், எக்காலத்தில் வாழ்ந்தவருள் உண்மையிலேயே மிகப் பெரிய மனிதர் இங்கே நிற்கிறார்! ஆம், பிலாத்துவும்கூட ஒத்துக் கொள்ள வேண்டியிருந்த மேன்மையை வெளிப்படுத்தும் ஓர் அமைதியான கண்ணியத்தையும் சாந்தத்தையும் இயேசு காட்டுகிறார். ஏனெனில் பிலாத்துவின் வார்த்தைகளில் மரியாதையும் பரிதாபமும் கலந்து தொனிக்கின்றன. யோவான் 18:39–19:5; மத்தேயு 27:15–17, 20–30; மாற்கு 15:6–19; லூக்கா 23:18–25.

      ▪ என்ன விதத்தில் இயேசுவை விடுதலை செய்வதற்கு பிலாத்து முயற்சி செய்கிறான்?

      ▪ பிலாத்து எவ்வாறு தன் உத்தரவாதத்திலிருந்து விடுபட முயற்சி செய்கிறான்?

      ▪ சாட்டையினால் அடிக்கப்படுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?

      ▪ சாட்டையினால் அடிக்கப்பட்ட பிறகு, இயேசு எவ்வாறு கேலி செய்யப்படுகிறார்?

      ▪ இயேசுவை விடுதலை செய்வதற்கு பிலாத்து என்ன கூடுதலான முயற்சி செய்கிறான்?

  • ஒப்படைக்கப்பட்டு கொண்டுபோகப்படுகிறார்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 124

      ஒப்படைக்கப்பட்டு கொண்டுபோகப்படுகிறார்

      சித்திரவதை செய்யப்பட்ட இயேசுவின் அமைதலான கண்ணியத்தால் உந்தப்பட்ட பிலாத்து மறுபடியும் அவரை விடுதலை செய்வதற்கு முயற்சி செய்கிறான், அப்போது பிரதான ஆசாரியர்கள் இன்னுமதிக கோபமடைகின்றனர். அவர்களுடைய பொல்லாத நோக்கத்தை எதுவும் குறுக்கிட அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் உறுதியாயிருக்கின்றனர். ஆகையால் அவர்கள் தங்கள் கூப்பாட்டை மீண்டும் ஆரம்பிக்கின்றனர்: “சிலுவையில் [கழுமரத்தில், NW] அறையும்! சிலுவையில் அறையும்!”

      “நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்” என்று பிலாத்து பதிலளிக்கிறான். (அவர்களுடைய ஆரம்ப உரிமைபாராட்டுதல்களுக்கு முரணாக, போதுமான அளவு வினைமையாயிருக்கும் மத சம்பந்தமான குற்றங்களுக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு யூதர்களுக்கு ஒருவேளை அதிகாரமிருக்கலாம்.) அடுத்து, ஐந்தாவது முறையாக பிலாத்து இயேசுவை குற்றமற்றவர் என்று அறிவிக்கிறான்: “நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.”

      தங்களுடைய அரசியல் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் விளைவுகளை உண்டாக்க தவறினதைக் கண்ட யூதர்கள், அநேக மணிநேரங்களுக்கு முன்பு நியாயசங்கத்துக்கு முன்பாக இயேசுவின் விசாரணையின் போது உபயோகித்த தேவதூஷணம் என்ற மதசம்பந்தமான குற்றச்சாட்டின் பேரில் திரும்புகின்றனர்: “எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாக வேண்டும்.”

      இந்தக் குற்றச்சாட்டு பிலாத்துவுக்கு புதிதாய் இருக்கிறது, இது அவனை இன்னும் அதிக பயமடையச் செய்கிறது. அவனுடைய மனைவியின் சொப்பனமும் இயேசுவின் ஆள்தன்மையின் குறிப்பிடத்தக்க பலமும் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி இயேசு ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதை அவன் இதற்குள் உணருகிறான். ஆனால் “தேவனுடைய குமாரன்?” இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவர் என்பதை பிலாத்து அறிந்திருக்கிறான். என்றபோதிலும், அவர் இதற்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடுமோ? அவரை மறுபடியும் அரண்மனைக்குள் கொண்டு சென்று, பிலாத்து இவ்வாறு கேட்கிறான்: “நீ எங்கேயிருந்து வந்தவன்?”

      இயேசு மெளனமாக இருக்கிறார். தாம் ஒரு ராஜா என்றும், ஆனால் தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமாயில்லை என்றும் அவர் முதலில் பிலாத்துவிடம் சொல்லியிருக்கிறார். இப்போது எந்தக் கூடுதலான விளக்கமும் ஒரு பிரயோஜனமான நோக்கத்தை சேவிக்காது. இயேசு பதிலளிக்க மறுப்பதால் பிலாத்துவின் பெருமை புண்படுகிறது, அவன் இயேசுவின் மேல் கோபங்கொண்டு பின்வரும் வார்த்தைகளைச் சொல்கிறான்: “நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும், உனக்குத் தெரியாதா?”

      “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது” என்று இயேசு மரியாதையோடு பதிலளிக்கிறார். பூமிக்குரிய அலுவல்களை நிர்வகிப்பதற்கு மானிட ஆட்சியாளர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அவர் குறிப்பிடுகிறார். “ஆனபடியினாலே, என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்று இயேசு கூடுதலாக சொல்கிறார். உண்மையிலேயே, இயேசுவை அநியாயமாக நடத்துவதற்கு பிரதான ஆசாரியனாகிய காய்பா அவனுடைய கூட்டாளிகள் யூதாஸ் காரியோத்து ஆகியோர் பிலாத்துவை விட அதிக பாரமான உத்தரவாதத்தை உடையவர்களாயிருக்கின்றனர்.

      இயேசுவால் இன்னுமதிகமாக கவர்ச்சிக்கப்பட்டு, இயேசு ஒருவேளை தெய்வீக ஆரம்பத்தைக் கொண்டிருக்கலாம் என்று பயமடைந்து, அவரை விடுதலை செய்வதற்கு பிலாத்து தன் முயற்சிகளை மீண்டும் தொடங்குகிறான். என்றபோதிலும், யூதர்கள் பிலாத்துவை எதிர்த்து தடுக்கின்றனர். அவர்கள் தங்கள் அரசியல் குற்றச்சாட்டை மறுபடியும் சொல்லி தந்திரமாக பயமுறுத்துகின்றனர்: “இவனை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி.”

      அதிக கடினமான பாதிப்புகளின் மத்தியிலும் பிலாத்து இயேசுவை மறுபடியும் வெளியே கொண்டு வருகிறான். “இதோ, உங்கள் ராஜா!” என்று அவன் மறுபடியும் அவர்களை இணங்க வைக்க முயற்சி செய்கிறான்.

      “இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும்!”

      “உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா?” என்று பிலாத்து நம்பிக்கையிழந்த நிலையில் கேட்கிறான்.

      ரோமர்களின் ஆட்சியின் கீழ் யூதர்கள் எரிச்சல் அடைந்திருந்தனர். உண்மையிலேயே அவர்கள் ரோம ஆதிக்கத்தை இழிவாகக் கருதுகின்றனர்! என்றபோதிலும், பிரதான ஆசாரியர்கள் மாய்மாலமாய் இவ்வாறு சொல்கின்றனர்: “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை.”

      தன் அரசியல் ஸ்தானம், நற்பெயர் ஆகியவற்றுக்காகப் பயந்து, பிலாத்து இறுதியில் யூதர்களின் கடுமைதணியாத வேண்டுகோளுக்கு இணங்கிவிடுகிறான். அவன் இயேசுவை ஒப்படைத்துவிடுகிறான். போர்ச்சேவகர் சிவப்பான மேலங்கியை கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்துகின்றனர். இயேசு கொல்லப்படுவதற்கு கொண்டு போகப்படுகையில், அவர் தம் சொந்த வாதனை மரத்தை சுமக்கும்படி செய்கின்றனர்.

      இதற்குள் வெள்ளிக்கிழமை, நிசான் 14 காலையின் நடுப்பகுதியாகிறது; ஒருவேளை அது மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்கலாம். இயேசு வியாழக்கிழமை காலையிலிருந்து இளைப்பாறவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக கடும்வேதனையூட்டும் அனுபவங்களை அவர் அனுபவித்திருக்கிறார். எனவே, கழுமரத்தின் பாரத்தினால் அவருடைய பலம் சீக்கிரத்தில் குன்றிப்போகிறது. ஆகையால் அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆப்பிரிக்காவில் உள்ள சிரேனே ஊரானாகிய சீமோன் அவருக்காக அவருடைய மரத்தை சுமக்கும்படி வற்புறுத்தப்பட்டான். அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கையில் பெண்கள் உட்பட அநேக ஜனங்கள் துக்கத்தால் தங்களை அடித்துக் கொண்டு இயேசுவுக்காக புலம்பி அழுகின்றனர்.

      அந்தப் பெண்களை திரும்பிப் பார்த்து, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைப்பெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். . . . பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள்?”

      யூத தேசத்து மரத்தை இயேசு குறிப்பிடுகிறார், இயேசுவின் பிரசன்னத்தாலும், அவரை நம்பும் மீதியானோர் இருப்பதாலும், அந்த மரத்துக்கு இன்னும் ஈரம் இருக்கிறது. ஆனால் இவைகளை அத்தேசத்திலிருந்து எடுத்து விட்டால், ஆவிக்குரிய விதத்தில் மரித்துப் போன மரம் மட்டுமே, ஆம், ஒரு வாடிப்போன வதங்கிய தேசிய அமைப்பு மட்டுமே மீதம் இருக்கும். ரோம சேனைகள் கடவுளின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவர்களாக சேவித்து யூத தேசத்தை பாழாக்கும் போது ஓலமிட்டு அழுவதற்கு எப்பேர்ப்பட்ட காரணம் இருக்கும்! யோவான் 19:6–17; 18:31; லூக்கா 23:24–31; மத்தேயு 27:31, 32; மாற்கு 15:20, 21.

      ▪ மதத்தலைவர்கள் தங்களுடைய அரசியல் குற்றச்சாட்டுகள் விளைவுகளை உண்டாக்க தவறிய போது, இயேசுவுக்கு விரோதமாக என்ன குற்றச்சாட்டு செய்கின்றனர்?

      ▪ பிலாத்து ஏன் அதிக பயமடைகிறான்?

      ▪ இயேசுவுக்கு நேரிடும் காரியங்களுக்காக பெரும் பாவம் யார் மீது சுமரும்?

      ▪ இறுதியில், ஆசாரியர்கள் பிலாத்து இயேசுவை கொலைசெய்வதற்கு ஒப்புகொடுக்குமாறு எவ்வாறு செய்கின்றனர்?

      ▪ அவருக்காக அழுதுகொண்டிருக்கும் பெண்களிடம் இயேசு என்ன சொல்கிறார்? மரத்தை “பச்சை” என்றும் பின்னர் “பட்ட” என்றும் குறிப்பிடுவதன் மூலம் அவர் எதை அர்த்தப்படுத்துகிறார்?

  • கழுமரத்தில் வாதனை
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 125

      கழுமரத்தில் வாதனை

      இயேசுவோடுகூட இரண்டு கள்ளர்கள் கொலை செய்யப்படுவதற்கு கொண்டு போகப்படுகின்றனர். நகரத்துக்கு அருகாமையில் கபாலஸ்தலம் அல்லது கொல்கொதா என்றழைக்கப்படும் இடத்தில் ஊர்வலம் ஒரு நிறுத்தத்துக்கு வருகிறது.

      கைதிகளின் வஸ்திரங்கள் கழற்றப்படுகின்றன. வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம் கொடுக்கப்படுகிறது. எருசலேமின் பெண்களால் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது, மரத்தில் அறையப்பட்டவர்களுக்கு இந்த வலியை தணிக்கும் மருந்து கலவையை கொடுப்பதற்கு ரோமர்கள் மறுப்பதில்லை. என்றபோதிலும், இயேசு அதை ருசிபார்த்தபோது, அவர் குடிப்பதற்கு மறுக்கிறார். ஏன்? அவருடைய விசுவாசத்திற்கு உச்சக்கட்டமான இந்தப் பரீட்சையின் போது தம்முடைய எல்லா மன வல்லமைகளையும் முழுவதுமாக தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவர் விரும்புகிறார்.

      இயேசு இப்போது கழுமரத்தின் மேல் கிடத்தப்பட்டு அவருடைய கைகள் அவருடைய தலைக்கு மேலாக வைக்கப்படுகின்றன. அடுத்து போர்ச்சேவகர்கள் அவருடைய கைகளுக்குள்ளும், அவருடைய கால்களுக்குள்ளும் பெரிய ஆணிகளை அடிக்கின்றனர். அந்த ஆணிகள் அவருடைய மாம்சத்துக்குள்ளும் தசைநார்களுக்குள்ளும் குத்தி ஊடுருவிச் செல்கையில் அவர் வலியால் துடிக்கிறார். கழுமரம் செங்குத்தாக உயர்த்தப்படும் போது, உடலின் பாரம் நக புண்களில் கிழிப்பதால் வலி கடும் வேதனையை தருகிறது. என்றபோதிலும், பயமுறுத்துவதற்குப் பதிலாக, இயேசு ரோம போர்ச்சேவகருக்காக ஜெபிக்கிறார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”

      பிலாத்து கழுமரத்தின் மேல் ஓர் அறிவிப்புக்குறியை எழுதி வைத்திருக்கிறான். அது இவ்வாறு வாசிக்கிறது: “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா.” இயேசுவுக்கு மரியாதை கொடுப்பதனால் மட்டும் இதை எழுதாமல், இயேசுவுக்கு மரணதண்டனையை யூத ஆசாரியர்கள் தன்னை அச்சுறுத்தி பெற்றுக்கொண்டதற்காக தன் வெறுப்பைக் காட்டவும் இதை எழுதுகிறான். எல்லாரும் அந்த அறிவிப்புக்குறியை வாசிப்பதற்காக பிலாத்து—எபிரெயு, அதிகாரப்பூர்வமான மொழியான லத்தீன், சாதாரண கிரேக்கு—ஆகிய மூன்று மொழிகளில் அதை எழுதி வைக்கிறான்.

      காய்பாவும் அன்னாவும் உட்பட பிரதான ஆசாரியர்கள் கலக்கமடைகின்றனர். இந்த நேரடியான அறிவிப்பு அவர்களுடைய வெற்றிக்களிப்பு நேரத்தை கெடுத்து விடுகிறது. ஆகையால் அவர்கள் எதிர்க்கின்றனர்: “யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும்.” ஆசாரியர்களிடம் அடகு வைக்கப்பட்டவரைப் போல் சேவித்ததினால் சினமடைந்து, பிலாத்து வெறுப்புடன் இவ்வாறு உறுதியாக கூறுகிறான்: “நான் எழுதினது எழுதினதே.”

      கொலைசெய்யப்படும் இடத்தில் ஆசாரியர்கள் ஒரு பெரிய ஜனக்கூட்டத்தோடு இப்போது கூடுகின்றனர், ஆசாரியர்கள் அறிவிப்புக்குறியின் அத்தாட்சியை மறுத்து வாதாடுகின்றனர். நியாயசங்க விசாரணைகளின் போது இதற்கு முன்பு கொடுத்த அதே பொய் அத்தாட்சியை அவர்கள் திரும்பவும் சொல்கின்றனர். ஆகையால், அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் பழிதூற்ற ஆரம்பிப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை, தங்கள் தலைகளை ஏளனமாகத் துலுக்கி இவ்வாறு சொல்கின்றனர்: “தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து [கழுமரத்திலிருந்து, NW] இறங்கி வா.”

      “மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை” என்று பிரதான ஆசாரியர்களும் அவர்களுடைய நெருங்கிய மத நண்பர்களும் உடன் சேர்ந்து சொல்கின்றனர். “இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்.”

      இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின் கீழ் போர்ச்சேவகரும்கூட இயேசுவை கேலி செய்கின்றனர். அவர்கள் அவருக்கு ஏளனமாக காடியைக் கொடுக்கின்றனர், அவருடைய வறண்ட உதடுகளுக்கு சற்று கீழே அதை பிடித்துக்கொண்டு, “நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள்” என்று அவர்கள் பரியாசம் பண்ணுகின்றனர். கள்ளர்களும்கூட—இயேசுவின் வலது பக்கத்தில் அறையப்பட்டிருப்பவனும், இடது பக்கத்தில் இருக்கும் மற்றொருவனும்—அவரை கேலி செய்கின்றனர். அதை நினைத்துப் பாருங்கள்! எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், ஆம், எல்லா காரியங்களையும் சிருஷ்டிப்பதில் யெகோவா தேவனோடு பங்கு கொண்ட ஒருவர், இந்த எல்லா பழிதூற்றுதல்களையும் மனஉறுதியுடன் சகிக்கிறார்!

      போர்ச்சேவகர்கள் இயேசுவின் மேல் வஸ்திரங்களை எடுத்து அவைகளை நான்கு பாகங்களாகப் பிரிக்கின்றனர். இவைகள் யாருடையதாகும் என்பதைக் காண அவர்கள் சீட்டுப் போடுகின்றனர். தையலில்லாமல் இருந்த அங்கி உயர்ந்த ரகமானதாயிருக்கிறது. ஆகையால் போர்ச்சேவகர் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொள்கின்றனர்: “இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக் குறித்துச் சீட்டுப் போடுவோம்.” ஆக அவர்கள் அறியாமலேயே பின்வரும் வசனத்தை நிறைவேற்றுகின்றனர்: “என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் மேல் சீட்டுப் போட்டார்கள்.”

      சிறிது நேரத்துக்குப் பிறகு, இயேசு உண்மையிலேயே ஒரு ராஜாவாக இருக்க வேண்டும் என்பதை கள்ளர்களில் ஒருவன் உணர ஆரம்பிக்கிறான். ஆகையால், தன் கூட்டாளியை கண்டித்து இவ்வாறு சொல்கிறான்: “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே.” அடுத்து அவன் இயேசுவை நோக்கி வேண்டுகோள் செய்கிறான்: “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.”

      “இன்று நான் உனக்கு மெய்யாகவே சொல்லுகிறேன், நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு பதிலளிக்கிறார். இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்யும் போது இந்த மனந்திரும்பிய கள்ளனை உயிர்த்தெழுப்பி பூமியில் பரதீஸில் வாழும்படி ஜீவனுக்குக் கொண்டு வரும் போது இந்த வாக்கு நிறைவேற்றமடையும். அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் இப்பரதீஸைப் பண்படுத்தும் சிலாக்கியத்தைக் கொண்டிருப்பர். மத்தேயு 27:33–44; மாற்கு 15:22–32; லூக்கா 23:27, 32–43, NW; யோவான் 19:17–24.

      ▪ வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தைக் குடிப்பதற்கு இயேசு ஏன் மறுக்கிறார்?

      ▪ இயேசுவின் கழுமரத்தில் ஏன் ஓர் அடையாளக்குறி பதிக்கப்படுகிறது? பிலாத்துவுக்கும் பிரதான ஆசாரியர்களுக்குமிடையே அது என்ன வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளச் செய்கிறது?

      ▪ கழுமரத்தில் இருக்கையில் என்ன கூடுதலான பழிதூற்றுதலை இயேசு பெற்றுக்கொள்கிறார்? அதை எது தூண்டுகிறது?

      ▪ இயேசுவின் வஸ்திரங்களோடு என்ன செய்யப்பட்டது என்பதில் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

      ▪ கள்ளர்களில் ஒருவன் என்ன மாற்றம் செய்கிறான்? அவனுடைய வேண்டுகோளை இயேசு எவ்வாறு நிறைவேற்றுவார்?

  • “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 126

      “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”

      இயேசு கழுமரத்தில் அறையப்பட்டு இன்னும் அதிக நேரம் ஆகவில்லை, அப்போது நண்பகல் நேரத்தில் ஓர் அசாதாரண மூன்று மணி நேர இருள் ஏற்படுகிறது. அதற்கு காரணம் சூரிய கிரகணமாக இருக்க முடியாது. ஏனென்றால் இவைகள் அமாவாசையின் போது மட்டும் தான் நிகழும். ஆனால் இப்போது பஸ்கா சமயத்தில் சந்திரன் முழுநிறைவாக இருக்கிறது. மேலும், சூரிய கிரகணங்கள் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்திருக்கும். ஆகையால் அந்த இருள் தெய்வீக வல்லமையால் ஏற்பட்டிருக்கிறது! இது இயேசுவை கேலி செய்பவர்கள் கேலியை நிறுத்தும்படி செய்கிறது, அவர்கள் பழித்துரைப்பதை விட்டுவிடும்படியாகவும் செய்கிறது.

      ஒரு கள்ளன் தன் கூட்டாளியை கண்டித்து இயேசு தன்னை நினைவுகூரும்படி கேட்டுக்கொண்டதற்கு முன்பு இந்த முன்பின் எதிர்பாராத இயல்நிகழ்ச்சி நடந்திருந்தால், அவனுடைய மனந்திரும்புலுக்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும். இயேசுவின் தாய், அவளுடைய சகோதரி சலோமே, மகதலேனா மரியாள், அப்போஸ்தலனாகிய சின்ன யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகிய நான்கு பெண்களும் அந்த இருட்டின் போது கழுமரத்திற்கு அருகே செல்கின்றனர். இயேசுவின் பிரியமான அப்போஸ்தலனாகிய யோவான் அவர்களோடு அங்கு இருக்கிறான்.

      தான் பாலூட்டி சீராட்டி பேணி வளர்த்த மகன் வேதனையில் அங்கு தொங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் இயேசுவின் தாயின் இருதயம் எவ்வாறு ‘ஊடுருவக் குத்தப்படுகிறது!’ என்றபோதிலும் இயேசு தம் சொந்த வலியை பாராமல் தம் தாயின் நலனை எண்ணிப்பார்க்கிறார். பெரும் முயற்சியோடு அவர் யோவானை நோக்கி தலையசைத்து தன் தாயிடம் இவ்வாறு சொல்கிறார்: “ஸ்திரீயே, அதோ, உன் மகன்!” பின்பு மரியாளை நோக்கி தலையசைத்து அவர் யோவானிடம் இவ்வாறு சொல்கிறார்: “அதோ, உன் தாய்!”

      இயேசு தாம் விசேஷமாக நேசித்த அப்போஸ்தலனிடம் இப்போது விதவையாயிருக்கும் தம் தாயை கவனித்துக்கொள்ளுமாறு இவ்வாறு ஒப்படைக்கிறார். மரியாளின் மற்ற குமாரர்கள் இன்னும் அவரில் விசுவாசம் காண்பிக்காததால் அவர் இதைச் செய்கிறார். இவ்வாறு அவர் தன் தாயின் சரீரப்பிரகாரமான தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அவளுடைய ஆவிக்குரிய தேவைகளுக்கும் ஏற்பாடு செய்வதில் ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்.

      பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “தாகமாயிருக்கிறேன்.” அவருடைய உத்தமத்தன்மையை உச்ச வரம்பு வரை பரீட்சிப்பதற்காக தம்மிடமிருந்து பாதுகாப்பைத் தம் தகப்பன் விலக்கிக்கொண்டதைப் போல் இயேசு உணருகிறார். ஆகையால் அவர் மிகுந்த சத்தமிட்டு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூப்பிடுகிறார். இதைக் கேட்ட போது, அருகில் நின்று கொண்டிருந்த சிலர், “இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான்” என்று ஆச்சரியப்படுகின்றனர். உடனடியாக அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி அவருக்குக் குடிக்க கொடுக்கிறான். ஆனால் மற்றவர்கள் இவ்வாறு சொல்கின்றனர்: “பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம்.”

      இயேசு காடியைப் பெற்றுக்கொண்ட போது, அவர் “முடிந்தது” என்று மகா சத்தமாய்க் கூப்பிடுகிறார். ஆம், அவருடைய தகப்பன் அவரை பூமிக்கு அனுப்பி செய்து முடிக்கச் சொன்ன எல்லா காரியங்களையும் அவர் செய்து முடித்திருக்கிறார். இறுதியில் அவர் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்கிறார். இயேசு இவ்வாறு ஜீவசக்தியை கடவுளிடம் ஒப்படைக்கிறார், கடவுள் அதை மறுபடியும் அவரிடம் ஒப்படைப்பார் என்ற நம்பிக்கையுடன். பின்பு அவர் தலையைச் சாய்த்து மரிக்கிறார்.

      இயேசு தம்முடைய ஜீவனை விட்ட கணமே, ஒரு கடுமையான பூமியதிர்ச்சி ஏற்படுகிறது, கன்மலைகள் பிளக்கின்றன. அந்த அதிர்ச்சி அவ்வளவு வல்லமையுள்ளதாக இருந்ததால் எருசலேமுக்கு வெளியே இருக்கும் ஞாபகார்த்த கல்லறைகள் உடைந்து திறக்கப்பட்டு அதிலிருந்து பிணங்கள் வெளியே எறியப்படுகின்றன. அவ்வழியே சென்றுகொண்டிருப்பவர்கள் வெளியே கிடந்த அந்தச் செத்த உடல்களைக் கண்டு, நகரத்துக்குள் சென்று அதைக் குறித்து அறிவிக்கின்றனர்.

      மேலும், இயேசு மரித்த கணமே தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகா பரிசுத்த ஸ்தலத்தை பிரிக்கும் பெரிய திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிகிறது. இந்த அழகிய வேலைப்பாடுள்ள திரைச்சீலை 18 மீட்டர் உயரமாயும், அதிக கனமாயும் இருக்கிறது! இந்த வியப்பூட்டும் அற்புதம், தம் குமாரனை கொலை செய்தவர்களுக்கு எதிராக கடவுளுடைய கோபாக்கினையை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பரலோகத்துக்குத் தானே செல்லும் வழி இப்போது இயேசுவின் மரணத்தால் சாத்தியமாகிறது என்பதையும் தெரிவிக்கிறது.

      ஜனங்கள் பூமியதிர்ச்சியை உணரும் போதும், நடக்கும் காரியங்களைப் பார்க்கும் போதும் அதிக பயமடைகின்றனர். கொலை செய்வதற்கு அதிகாரமுடைய நூற்றுக்கு அதிபதி கடவுளுக்கு மகிமை செலுத்துகிறான். “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்று அவன் அறிவிக்கிறான். பிலாத்துவுக்கு முன்பு இயேசுவின் விசாரணையின் போது தெய்வீக மகன் என்ற உரிமைபாராட்டு கலந்தாலோசிக்கப்பட்ட போது அவன் ஒருவேளை அங்கு இருந்திருக்கலாம். இயேசு கடவுளுடைய குமாரன் என்றும், ஆம், அவர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்றும் இப்போது அவன் நம்புகிறான்.

      இப்படிப்பட்ட அற்புதமான சம்பவங்களால் மற்றவர்களும்கூட ஆட்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் தங்கள் ஆழ்ந்த துயரத்தையும் வெட்கத்தையும் தெரிவிக்கும் வகையில் தங்கள் மார்புகளை அடித்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். இப்படிப்பட்ட பெரும்விளைவுகளையுடைய சம்பவங்களால் மிகவும் உந்தப்பட்ட இயேசுவின் அநேக பெண் சீஷர்கள் இந்தக் காட்சியை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய யோவானும்கூட அங்கு இருக்கிறான். மத்தேயு 27:45–56; மாற்கு 15:33–41; லூக்கா 23:44–49; 2:34, 35; யோவான் 19:25–30.

      ▪ மூன்று மணிநேரம் இருள் ஏற்படுவதற்கு சூரிய கிரகணம் ஏன் காரணமாக இருக்க முடியாது?

      ▪ தம்முடைய மரணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பு, வயதான பெற்றோர்களை உடையவர்களுக்கு இயேசு என்ன சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்?

      ▪ மரிப்பதற்கு முன்பு இயேசு கூறிய நான்கு கூற்றுகள் யாவை?

      ▪ பூமியதிர்ச்சி எதை விளைவிக்கிறது? ஆலய திரைச்சீலை இரண்டாக கிழிந்ததன் முக்கியத்துவம் என்ன?

      ▪ கொலை செய்யப்படும் இடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் நூற்றுக்கு அதிபதி அற்புதங்களினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறான்?

  • வெள்ளிக்கிழமை புதைக்கப்படுகிறார்—ஞாயிற்றுக்கிழமை ஒரு காலியான கல்லறை
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
    • அதிகாரம் 127

      வெள்ளிக்கிழமை புதைக்கப்படுகிறார்—ஞாயிற்றுக்கிழமை ஒரு காலியான கல்லறை

      இப்போது வெள்ளிக்கிழமை பிற்பகலின் பிற்பகுதி, நிசான் 15-ன் ஓய்வு நாள் சூரிய அஸ்தமனத்தின் போது ஆரம்பமாகும். இயேசுவின் மரித்த உடல் கழுமரத்தில் வலுவற்று தொங்குகிறது, ஆனால் அவர் பக்கத்தில் இருந்த இரண்டு கள்ளர்களும் இன்னும் உயிரோடிருக்கின்றனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆயத்தம் என்றழைக்கப்படுகிறது, ஏனென்றால் ஓய்வுநாளுக்குப் பிறகு காத்திருக்க முடியாத அவசரமான வேலைகள், மேலும் உணவு தயாரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதற்காக இது ஒதுக்கப்படுகிறது.

      விரைவில் ஆரம்பிக்கப் போகும் ஓய்வுநாள் ஒழுங்காக அனுசரிக்கப்படும் ஓய்வுநாள் மட்டுமல்ல (வாரத்தின் ஏழாம் நாள்) ஆனால் ஓர் இரட்டை ஓய்வுநாள் அல்லது “பெரிய” ஓய்வுநாளாகவும் இருக்கிறது. இது இவ்வாறு அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஏழு-நாள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் முதல் நாளாகிய நிசான் 15, (வாரத்தின் எந்த நாளில் அது வந்தாலும் சரி, அது எப்போதும் ஓர் ஓய்வுநாளாயிருக்கிறது) ஒழுங்கான ஓய்வுநாள் வரும் அதே நாளில் வருகிறது.

      கடவுளுடைய சட்டத்தின்படி, கழுமரத்தின் மேல் உடல்கள் ஓர் இரவு முழுவதும் தொங்கியிருக்கும்படி விடக்கூடாது. ஆகையால் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களின் கால்களை முறிப்பதன் மூலம் அவர்களுடைய மரணத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று யூதர்கள் பிலாத்துவை கேட்கின்றனர். ஆகையால், போர்ச்சேவகர்கள் இரண்டு கள்ளர்களின் கால்களை முறிக்கின்றனர். ஆனால் இயேசு மரித்தவர் போல் தோன்றியதால் அவருடைய கால்கள் முறிக்கப்படவில்லை. இது பின்வரும் வேதவசனத்தை நிறைவேற்றுகிறது: “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.”

      என்றபோதிலும், இயேசு உண்மையிலேயே மரித்துவிட்டாரா என்ற சந்தேகத்தை நீக்குவற்கு போர்ச்சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்துகிறான். அந்த ஈட்டி அவருடைய இருதயம் இருக்கும் பாகத்தை குத்துகிறது, உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வருகிறது. இதை கண்கூடாகக் கண்ட அப்போஸ்தலனாகிய யோவான், இது மற்றொரு வேதவசனத்தை நிறைவேற்றுகிறது என்று அறிக்கையிடுகிறான்: “தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள்.”

      அரிமத்தியா என்ற பட்டணத்தில் இருந்து வந்தவனும், நியாயசங்கத்தின் ஒரு மதிப்புவாய்ந்த அங்கத்தினராகவும் இருக்கும் யோசேப்பும் கொலை நடந்த இடத்தில் இருக்கிறான். இயேசுவுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தண்டனைக்கு ஆதரவாக வாக்களிக்க அவன் மறுத்து விட்டான். யோசேப்பு உண்மையில் இயேசுவின் ஒரு சீஷனாக இருக்கிறான், என்றாலும் தன்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் காண்பிக்க அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். இருந்தபோதிலும், இப்போது அவன் தைரியத்துடன் பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்கிறான். பொறுப்பில் இருக்கும் நூற்றுக்கு அதிபதியை பிலாத்து வரவழைக்கிறான், இயேசு மரித்து விட்டார் என்று அந்த அதிகாரி உறுதி செய்த பின்பு பிலாத்து அந்தப் பிணத்தை ஒப்படைக்கிறான்.

      அடக்கம் செய்வதற்கு தயாரிப்பதற்காக யோசேப்பு உடலை எடுத்துக் கொண்டு போய் சுத்தமான மெல்லிய துணியினால் அதைச் சுற்றுகிறான். மற்றொரு நியாயசங்கத்து அங்கத்தினனான நிக்கொதேமு இவனுக்கு உதவி செய்கிறான். நிக்கொதேமுவும் கூட தன் ஸ்தானத்தை இழந்துவிடும் பயத்தில் இயேசுவில் தன் விசுவாசத்தைக் காண்பிக்க தவறி விடுகிறான். ஆனால் இப்போது அவன் நூறு ராத்தல் (33 கிலோகிராம்) வெள்ளைப் போளமும் கரிய போளமும் அடங்கிய ஓர் உருளையைக் கொண்டு வருகிறான். இந்த நறுமணப் பொருட்கள் அடங்கிய கட்டுகளினால் இயேசுவின் உடல் சுற்றி வைக்கப்படுகிறது, அடக்கம் செய்வதற்கு உடல்களைத் தயாரிக்கும் யூதர்கள் கொண்டிருக்கும் அதே பழக்கத்தின்படி இது செய்யப்படுகிறது.

      பின்பு அருகில் இருக்கும் தோட்டத்தில் உள்ள பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் யோசேப்பின் புதிய ஞாபகார்த்த கல்லறையில் உடல் வைக்கப்படுகிறது. இறுதியில், கல்லறைக்கு எதிரே ஒரு பெரிய கல் உருட்டி வைக்கப்படுகிறது. ஓய்வுநாளுக்கு முன்பு அடக்கத்தை நிறைவேற்றுவதற்கு உடல் அவசரமாக தயாரிக்கப்படுகிறது. ஆகையால், தயாரிப்பு செய்வதில் உதவி செய்துகொண்டிருந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபின் தாயாகிய மரியாளும் இன்னுமதிகமான நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் கொண்டு வருவதற்கு வீட்டுக்கு விரைந்து செல்கின்றனர். ஓய்வுநாளுக்குப் பிறகு, இயேசுவின் உடலை நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பதற்கு இன்னுமதிகமாக தயாரிக்க அவர்கள் திட்டமிடுகின்றனர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்