உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நம் அனைவருக்கும் ஆறுதல் தேவை
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 4
    • அட்டைப்பட கட்டுரை | ஆறுதல் தேடி எங்கே போவது?

      நம் அனைவருக்கும் ஆறுதல் தேவை

      ஒரு அம்மா தன் சின்ன பையனை ஆறுதல்படுத்துகிறார்

      நீங்கள் சின்ன பிள்ளையாக இருந்தபோது கீழே விழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒருவேளை கையிலோ காலிலோ கீறல் ஏற்பட்டிருக்கலாம். அப்போது உங்களுடைய அம்மா உங்களை ஆறுதல்படுத்தியது நினைவிருக்கிறதா? காயத்துக்கு மருந்து தடவி, பேன்டேஜ் போட்டிருப்பார்கள். அடிபட்டபோது நீங்கள் அழுதிருப்பீர்கள், ஆனால் அம்மா உங்களைக் கனிவுடன் கட்டியணைத்து அன்புடன் பேசியது உங்களுடைய இதயத்துக்கு இதமாக இருந்திருக்கும். அந்தச் சமயத்தில், உங்களுக்கு ஆறுதல் அருகிலேயே இருந்தது!

      ஆனால் நாம் வளர வளர... வாழ்க்கை சிக்கலாகிக்கொண்டே போகிறது. பிரச்சனைகள் பூதாகரமாக ஆகின்றன. ஆறுதல் கிடைப்பதே அபூர்வமாகிவிடுகிறது. பெரியவர்களுடைய பிரச்சனைகளை பேன்டேஜோ அம்மாவின் அரவணைப்போ தீர்க்க முடியாது. இப்போது, சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

      • என்றைக்காவது உங்களுடைய வேலை பறிபோயிருக்கிறதா? அதனால் நீங்கள் அப்படியே இடிந்துபோய்விட்டீர்களா? ஹூலியன் சொல்கிறார்... ‘என்னை வேலையவிட்டு தூக்குனப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. இனிமே, என் குடும்பத்தை எப்படித்தான் கவனிக்க போறேனோ... எனக்குத் தெரியல. இவ்ளோ வருஷமா மாடு மாதிரி உழைச்சேனே, கம்பெனி என்னை ஏன் தூக்கியெறிஞ்சுட்டாங்க?’

      • உங்களுடைய மணவாழ்வு முறிந்துபோய்விட்டதா? அதனால் உங்களுடைய வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? ரேக்கல் சொல்கிறார்... “ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி என்னோட புருஷன் என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு, என் நெஞ்சே வெடிச்ச மாதிரி இருந்துச்சு. அப்போ... என் உடம்பும் சரி, மனசும் சரி, வலியில துடிச்சிச்சு, என் வாழ்க்கைய நினைச்சு பயப்பட ஆரம்பிச்சிட்டேன்.”

      • தீராத வியாதியால் அவதிப்படுகிறீர்களா? குணமாகும் என்ற நம்பிக்கையே இல்லாமல் துவண்டுபோய்விட்டீர்களா? முன்னொரு காலத்தில் வாழ்ந்த யோபுவைப் போல உங்களுடைய வாழ்க்கையிலும் சூறாவளி வீசியிருக்கலாம். அந்த மனிதர் இப்படித்தான் புலம்பினார்: “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை.” (யோபு 7:16, NW) ஒருவேளை... சுமார் 80 வயதுடைய லூயிசைப் போல நீங்களும் உணரலாம், “சிலசமயத்துல... என்னைக்குத்தான் எனக்கு சாவு வருமோ-னு காத்துக்கிட்டு இருக்கேன்.”

      • பாசமுள்ளவரைப் பறிகொடுத்ததால் நீங்கள் ஆறுதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? ராபர்ட் சொல்கிறார்... “என்னோட மகன் பிளைன் ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு கேள்விப்பட்டப்போ அத என்னால நம்பவே முடியல. அந்த சமயத்துல எனக்கு ஏற்பட்ட வலி எப்படி இருந்துச்சுனா... ‘ஒரு நீளமான வாள் என் நெஞ்சுல ஊடுருவின மாதிரி இருந்துச்சு.’”—லூக்கா 2:35.

      ராபர்ட், லூயிஸ், ரேக்கல், ஹூலியன்... இவர்கள் எல்லாருக்கும், வேதனையான சூழ்நிலைகள் வந்தபோதிலும்கூட, ஆறுதல் கிடைத்தது. யார் நமக்கு நன்றாக ஆறுதல் தர முடியுமோ அவரால் அந்த ஆறுதல் கிடைத்தது, ஆம் அவர் வேறு யாருமல்ல, சர்வவல்லமையுள்ள கடவுள்தான். அவர் எப்படி ஆறுதல் தருகிறார்? உங்களுக்கும் அதேபோல் அவர் ஆறுதல் தருவாரா? (wp16-E No. 5)

  • கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார்
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 4
    • இயேசு குஷ்டரோகியை குணப்படுத்துவதற்கு முன்பு அவரை தொடுகிறார்

      அட்டைப்பட கட்டுரை | ஆறுதல் தேடி எங்கே போவது?

      கடவுள் எப்படி ஆறுதல் தருகிறார்

      ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள் எங்களுடைய எல்லா உபத்திரவங்களிலும் . . . எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்’ என்று யெகோவாவைa பற்றி அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) கடவுளுடைய உதவியைப் பெற முடியாதவர் யாருமே கிடையாது... நம் பரலோக தகப்பனால் ஆறுதல் தர முடியாத அளவுக்கு பயங்கரமான சோகம் எதுவுமே கிடையாது... என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.

      அதேசமயத்தில், கடவுள் தருகிற ஆறுதலைப் பெற வேண்டுமானால் நாமும் ஒன்றை செய்ய வேண்டும். டாக்டரைப் பார்க்க ‘அப்பாய்ண்ட்மெண்டே’ வாங்காமல் இருந்தால், அவரால் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? “முன்கூட்டியே பேசி வைத்துக்கொள்ளாமல் இரண்டு பேரால் சேர்ந்து நடக்க முடியுமா?” என்று ஆமோஸ் தீர்க்கதரிசி கேட்கிறார். (ஆமோஸ் 3:3, NW) அதனால், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று வேதவசனம் சொல்கிறது.—யாக்கோபு 4:8.

      கடவுள் நம்மிடம் நெருங்கி வருவார் என்று எப்படி நாம் உறுதியாக நம்ப முடியும்? முதலாவதாக, கடவுள் நமக்கு உதவி செய்ய விரும்புவதாக அடிக்கடி நம்மிடம் சொல்கிறார். (அடுத்த பக்கத்தில் இருக்கிற பெட்டியைப் பாருங்கள்.) இரண்டாவதாக, கடவுளிடமிருந்து ஆறுதலைப் பெற்றவர்களின் பதிவு நம்மிடம் இருக்கிறது; அவர்கள் நிஜமான ஆட்கள், கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல. அப்படிப்பட்டவர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள், இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்.

      இன்று கடவுளிடமிருந்து உதவியைப் பெற விரும்புகிற பலரைப் போலவே, அன்று தாவீது ராஜாவும் வாழ்க்கையில் துன்பங்களை எதிர்ப்பட்டபோது யெகோவாவிடம் உதவி கேட்டார். “உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்” என்று சொல்லி மன்றாடினார். கடவுள் அவருக்கு பதில் அளித்தாரா? ஆம், தாவீது சொன்னார்: “அவர் எனக்கு உதவி செய்தார், அதனால் என் இதயம் சந்தோஷப்படுகிறது.”—சங்கீதம் 28:2, 7, NW.

      துக்கப்படுகிறவர்களுக்கு இயேசு ஆறுதல் அளிக்கிறார்

      இயேசுவின் மூலமாகவும் கடவுள் நமக்கு ஆறுதல் தருகிறார், அது அவருடைய விருப்பமும்கூட. இயேசுவுக்குக் கடவுள் கொடுத்த பல வேலைகளில் ஒன்று, ‘உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவது,’ ‘துக்கப்படுகிற எல்லாருக்கும் ஆறுதல் சொல்வது.’ (ஏசாயா 61:1, 2, NW) இயேசுவை பற்றி பைபிள் முன்பு சொன்னபடி, ‘உழைத்துக் களைத்துப் போனவர்கள் மீதும், பெருஞ்சுமை சுமக்கிறவர்கள் மீதும்’ அவர் விசேஷ அக்கறை காட்டினார்.—மத்தேயு 11:28-30.

      மக்களுக்கு ஞானமான அறிவுரை கொடுத்து... அவர்களை அன்புடன் நடத்தி... சில சமயங்களில் அவர்களுடைய வியாதியைக் குணப்படுத்தி... இயேசு ஆறுதல்படுத்தினார். ஒருநாள் தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து, “உங்களுக்கு மனமிருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லிக் கெஞ்சினான். இயேசு மனதுருகி, “எனக்கு மனமிருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். (மாற்கு 1:40, 41) அந்தத் தொழுநோயாளி குணமானார்.

      இன்று, நம் பக்கத்தில் இருந்து நம்மை ஆறுதல்படுத்துவதற்கு கடவுளுடைய மகன் பூமியில் இல்லை. இருந்தாலும், அவருடைய அப்பா யெகோவா, ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிறார். அதனால் கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு எப்போதும் உதவி செய்கிறார். (2 கொரிந்தியர் 1:3) மக்களை கடவுள் ஆறுதல்படுத்துவதற்கு பயன்படுத்துகிற நான்கு வழிகளை இப்போது பார்க்கலாம்.

      • பைபிள். “வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறும்படி, முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன.”—ரோமர் 15:4.

      • கடவுளுடைய சக்தி. இயேசு இறந்து கொஞ்ச காலத்துக்குப் பிறகு, எல்லா கிறிஸ்தவ சபைகளும் சமாதானத்தை அனுபவித்தன. எப்படி? “யெகோவாவுக்குப் பயந்து நடந்ததாலும், அவருடைய சக்தியின் மூலம் ஆறுதலைப் பெற்றதாலும் பெருகிக்கொண்டே இருந்தது.” (அப்போஸ்தலர் 9:31) கடவுளுடைய சக்தியைப் போல வலிமை வாய்ந்தது வேறு எதுவுமில்லை. யாராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அவரை ஆறுதல்படுத்துவதற்கு கடவுளால் தன் சக்தியைப் பயன்படுத்த முடியும்.

      • ஜெபம். “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்று பைபிள் அறிவுரை கொடுக்கிறது. அதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என்று சொல்கிறது.—பிலிப்பியர் 4:6, 7.

      • சக கிறிஸ்தவர்கள். உண்மையான நண்பர்கள் ஒரு பாதுகாப்பு வளையம் போல் இருந்து, நமக்கு ஆறுதல் தருகிறார்கள். அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய நண்பரை... ‘இக்கட்டுகள், உபத்திரவங்கள்’ மத்தியில் ‘எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறவர்’ என்று வர்ணித்தார்.—கொலோசெயர் 4:11; 1 தெசலோனிக்கேயர் 3:7.

      இரண்டு யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சபையை சேர்ந்த ஒரு கிறிஸ்தவருக்கு ஆறுதல் தருகிறார்கள்

      இதெல்லாம் நடைமுறையில் எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசிக்கலாம். முந்தின கட்டுரையில் நாம் பார்த்த நபர்கள் எப்படி பிரச்சினைகளைச் சமாளித்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவர்களுடைய அனுபவங்களை இப்போது சற்று கூர்ந்து ஆராயலாம். அப்போது, “ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல, நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்” என்று கடவுள் சொன்ன இதயத்துக்கு இதமளிக்கும் வாக்குறுதியை இன்றும் நிறைவேற்றுகிறார் என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.—ஏசாயா 66:13, NW. (wp16-E No. 5)

      a யெகோவா என்பது பைபிளில் கடவுளுடைய பெயர்.

      கடவுள் நம்மை ஆறுதல்படுத்த விரும்புகிறார்!

      • “யெகோவாவே, நீங்கள்தான் எனக்கு உதவி செய்கிறவர், எனக்கு ஆறுதல் தருகிறவர்.”—சங்கீதம் 86:17, NW.

      • “‘என் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்’ என்று உங்கள் கடவுள் சொல்கிறார்.”—ஏசாயா 40:1, NW.

      • “யெகோவா சொல்வது இதுதான்: . . . ‘ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல, நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்.’”—ஏசாயா 66:12, 13, NW.

      • ‘துக்கப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.’—மத்தேயு 5:4.

      • “[கடவுள்] உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

  • கஷ்ட காலங்களில் ஆறுதல்
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 4
    • அட்டைப்பட கட்டுரை | ஆறுதல் தேடி எங்கே போவது?

      கஷ்ட காலங்களில் ஆறுதல்

      கஷ்டங்கள் பல விதங்களில் வருகின்றன. எல்லா விதமான கஷ்டங்களை பற்றியும் இங்கே நாம் விவரிக்க முடியாது, அதனால் ஏற்கெனவே பார்த்த நான்கு பேருடைய உதாரணங்களைச் சற்று கூர்ந்து ஆராயலாம். வித்தியாசமான பிரச்சனைகளைச் சந்தித்த இவர்களுக்கு எப்படி கடவுளிடமிருந்து உண்மையான ஆறுதல் கிடைத்தது என்பதை கவனியுங்கள்.

      வேலை பறிபோகும்போது...

      ஜோனத்தான் ஜன்னல்களை சுத்தம் செய்கிறார்

      “எந்த வேலையா இருந்தாலும் அத ஏத்துக்க கத்துக்கிட்டேன், தேவையில்லாத செலவுகளையும் குறைச்சுக்கிட்டேன்.”—ஜோனத்தான்

      ஜான்a சொல்கிறார்... “எனக்கும் என் மனைவிக்கும் ஒரே சமயத்துல வேலை போயிடுச்சு. குடும்பத்துல இருக்கிற மத்தவங்க கொடுத்த பணத்த வெச்சுக்கிட்டு... கிடைச்ச சின்ன சின்ன வேலைகள செஞ்சிக்கிட்டு... இரண்டு வருஷமா காலத்த ஓட்டுனோம். அதனால என் வீட்டுக்காரி பிரிசில்லாவுக்கு மன உளச்சல் வந்திடுச்சு. நான் ஒன்னுத்துக்கும் லாயிக்கு இல்லாதவனா இருந்தேன்.

      நாங்க எப்படி சமாளிச்சோம்? பிரிசில்லா எப்பவும் மத்தேயு 6:34-ல் இயேசு சொன்ன வார்த்தைகள ஞாபகப்படுத்தி பார்த்துக்குவா. நாளைக்காக நாம கவலைப்பட கூடாதுன்னு இயேசு சொல்லியிருந்தார். ஏன்னா, நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அவ கடவுள்கிட்ட மனம்விட்டு ஜெபம் செஞ்சா, தொடர்ந்து வாழ்றதுக்கு தேவையான சக்தி அவளுக்கு கிடைச்சுச்சு. என் விஷயத்துல பார்த்தீங்கனா சங்கீதம் 55:22 ஆறுதலா இருந்துச்சு. சங்கீதக்காரனைப் போல யெகோவாமேல என் பாரத்த போட்டுட்டேன், அவர்தான் என்னை தாங்கினாரு. இப்ப எனக்கு ஒரு வேலை கிடைச்சிருந்தாலும், மத்தேயு 6:20-22-ல இயேசு சொன்ன மாதிரி எங்க வாழ்க்கைய எளிமையா வெச்சிருக்கிறோம். எல்லாத்துக்கும்மேல, கடவுள்கிட்ட இன்னும் அதிகமா நெருங்கி வந்திருக்கிறோம். எங்க ரெண்டுபேருக்கு இடையில இருக்கிற நெருக்கம்கூட இன்னும் அதிகமாயிருக்கு.”

      ஜோனத்தான் சொல்கிறார்... “நாங்க வெச்சு நடத்திட்டு இருந்த சின்ன வியாபாரம் நொடிஞ்சுபோச்சு. எதிர்காலத்த நினைச்சு நான் ரொம்ப பயந்துபோயிட்டேன். பொருளாதார நெருக்கடி வந்ததுனால, இருபது வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சது எல்லாம் வீணாபோயிடுச்சு. எனக்கும் என் மனைவிக்கும் பண விஷயத்துல வாக்குவாதம் வர ஆரம்பிச்சிடுச்சி. கிரெடிட் கார்ட வெச்சிருந்தும்கூட எங்களால ஒன்னுமே வாங்க முடியல. ஏன்னா பேங்க் அதை நிராகரிச்சிடுவாங்களோ அப்படிங்கிற பயத்துல கிரெடிட் கார்ட பயன்படுத்துல.

      “கடவுளோட வார்த்தையும் அவரோட சக்தியும்தான் சரியான தீர்மானங்கள் எடுக்கறதுக்கு உதவியா இருந்துச்சு. எந்த வேலையா இருந்தாலும் அத ஏத்துக்க கத்துக்கிட்டேன், தேவையில்லாத செலவுகளையும் குறைச்சுக்கிட்டேன். நாங்க யெகோவாவின் சாட்சிகளா இருந்ததுனால, மத்த சாட்சிகள்கிட்ட இருந்தும்கூட உதவி கிடைச்சது. அவுங்க எங்க சுய மரியாதைய இழந்துடாம இருக்க உதவி செஞ்சாங்க, இக்கட்டான சூழ்நிலைமையில உதவிக்கரம் நீட்டினாங்க.”

      மணவாழ்வு முறிந்துபோகும்போது...

      ரேக்கல் சொல்கிறார்... “எங்க வீட்டுக்காரர் எங்கள அம்போன்னு விட்டுட்டு போனப்போ, எனக்கு வேதனையா இருந்துச்சு... கோபம் கோபமா வந்துச்சு. பயங்கரமான கவலை என்னை ஒரே அழுத்தா அழுத்துற மாதிரி இருந்துச்சு. ஆனா கடவுள்கிட்ட நெருங்கி போனேன், அவர் எனக்கு ஆறுதல் கொடுத்தார். தினமும் அவர்கிட்ட ஜெபம் செஞ்சப்ப கடவுள் எனக்கு மனநிம்மதிய தந்தார். உடைஞ்சுபோன என் இதயத்த அவர் ஒட்ட வெச்சா மாதிரி இருந்துச்சு.

      கடவுளோட வார்த்தையான பைபிள படிச்சதுனால என் கோபத்தையும் மனக்கசப்பையும் ஒழிச்சுக்கட்ட முடிஞ்சுது. ‘தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்’ என்று ரோமர் 12:21-ல பவுல் சொன்ன வார்த்தைகள என் மனசுல வெச்சுக்கிட்டேன்.

      ரேக்கல், ஒரு பெண்ணுக்கு பைபிள் வசனத்தை காட்டுகிறார்

      “‘கிடைக்காது என்று விட்டுவிடுவதற்கு’ ஒரு நேரம் இருக்கிறது . . . இப்ப எனக்கு வாழ்க்கையில புதுப் புது லட்சியங்கள் இருக்கு.”—ரேக்கல்

      தொடர்ந்து சந்தோஷமா வாழ்றதுக்கு தேவையான ஆலோசனைய நண்பர் ஒருத்தர் கொடுத்தார். பிரசங்கி 3:6-ஐ (NW) எடுத்து காட்டி, ‘கிடைக்காது என்று விட்டுவிடுவதற்கு’ ஒரு நேரம் இருக்கிறது என்று அன்புடன் சொன்னார். அதை ஏத்துக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் அதுதான் எனக்கு தேவையான அறிவுரை. இப்ப எனக்கு வாழ்க்கையில புதுப் புது லட்சியங்கள் இருக்கு.”

      எலிசபெத் சொல்கிறார்... “உங்க மணவாழ்க்கை முறிஞ்சிபோன சமயத்துல, உங்களுக்கு ஆதரவு தேவைப்படும். ஒவ்வொரு நாளும் என்னோட ஃப்ரெண்ட்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. அவங்க என்னோட சேர்ந்து அழுதாங்க, என்னை ஆறுதல்படுத்தினாங்க, எனக்கு யாருமில்லை-ங்கிற எண்ணம் ஏற்படாம... என்னை நேசிக்கறதுக்கு ஒரு நபர் இருக்கிறாங்க என்ற உணர்வ கொடுத்தாங்க. என் மனசுல இருக்கிற காயங்கள குணப்படுத்துறதுக்காக யெகோவாதான் அவங்கள பயன்படுத்தி இருக்கறார்னு புரிஞ்சிக்கிட்டேன்.”

      வியாதியோ வயோதிபமோ ஏற்படும்போது...

      கடவுளிடம் சக்தி கேட்டு லூயிஸ் ஜெபம் செய்கிறார்

      “ஜெபம் செஞ்ச பிறகு, கடவுள் தர்ற சக்தி எனக்கு நல்ல தெம்பு கொடுக்குது.”—லூயிஸ்

      ஆரம்ப கட்டுரையில் பார்த்த லூயிஸ் இதய நோயினால் பயங்கரமாக கஷ்டப்படுகிறார், அவர் இரண்டு தடவை செத்து பிழைத்தார். இப்போது அவருக்கு தினமும் 16 மணிநேரம் செயற்கையான முறையில் ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. லூயிஸ் சொல்கிறார்... “நான் எப்பவுமே யெகோவாகிட்ட ஜெபம் செய்றேன். ஜெபம் செஞ்ச பிறகு, கடவுள் தர்ற சக்தி எனக்கு நல்ல தெம்பு கொடுக்குது. நான் தொடர்ந்து வாழ்றதுக்கு தேவையான தைரியம் ஜெபத்தின் மூலமா எனக்கு கிடைக்குது. ஏன்னா அவர்மேல நான் நம்பிக்கை வெச்சிருக்கேன், அவர் என்னை அக்கறையா கவனிச்சிக்கிறார்னு எனக்கு நல்லா தெரியும்.”

      80 வயதை தாண்டிய பேட்ரா என்ற பெண்மணி சொல்கிறார்... “நிறைய செய்யனும்னு எனக்கு ஆசை, ஆனா என்னால ஒன்னுமே செய்ய முடியல. என்னோட பெலமெல்லாம் குறைஞ்சுகிட்டே வர்றத பார்க்குறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நான் அப்படியே சோர்ந்து போயிடுறேன், மருந்தே கதின்னு இருக்க வேண்டியதா இருக்கு. ‘முடியுமானால் அந்த கஷ்டத்த நீக்கிடுங்கனு’ கடவுள்கிட்ட இயேசு ஜெபம் செஞ்சார். கஷ்டம் வர்றப்போ, இயேசு ஜெபம் செஞ்ச விதத்தை நான் அடிக்கடி நினைச்சு பார்க்கிறேன். இயேசுவுக்கு யெகோவா பலத்த கொடுத்தாரு, அதேமாதிரி எனக்கும் அவர் பலத்த கொடுக்கிறார். ஜெபம்தான் எனக்கு தினமும் மருந்து மாதிரி. கடவுள்கிட்ட ஜெபம் செஞ்சதுக்கு அப்புறம் என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.”—மத்தேயு 26:39.

      கிட்டதட்ட 30 வருஷங்களாக மல்ட்டிப்பிள் ஸ்கிலிரோஸிஸ் என்ற பக்கவாத வியாதியால் போராடிக் கொண்டிருக்கிற ஹூலியனும் இப்படிதான் உணருகிறார். “ஆஃபிஸர் மாதிரி சேர்ல உட்கார்ந்துட்டு இருந்த நான் இப்ப வீல் சேர்ல உட்கார்ற நிலைமைக்கு வந்துட்டேன். ஆனா என்னோட வாழ்க்கை வீணா போகல, மத்தவங்களுக்கு உதவி செய்றதுக்காக என் வாழ்க்கைய அர்ப்பணிச்சிருக்கேன். இப்படி செய்றது வேதனைய குறைக்குது, கஷ்ட காலத்துல பலப்படுத்துவேன்னு சொன்ன வாக்கை கடவுள் நிறைவேத்தி இருக்குறார். ‘என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டுனு’ அப்போஸ்தலன் பவுல் சொன்னார், அதே போல என்னாலயும் சொல்ல முடியும்.—பிலிப்பியர் 4:13.

      பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

      அண்டோனியோ சொல்கிறார்... “என்னோட அப்பா கார் ஆக்சிடென்ட்ல இறந்தப்போ அத என்னால நம்பவே முடியல. ரோட்டோரமா போயிட்டு இருந்த அந்த அப்பாவி மனுஷனுக்கு இப்படி ஆயிடுச்சு, கொஞ்சம்கூட நியாயம் இல்ல. என்னாலயும் ஒன்னும் செய்ய முடியல. சாகறதுக்கு 5 நாள் முன்னாடி வரைக்கும் அவருக்கு சுய நினைவே இல்ல. என் அம்மா முன்னாடி எப்படியோ அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டேன், ஆனா நான் தனியா இருந்தப்போ கதறி அழுதேன். ‘ஏன்... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?’ இப்படி என்னைய நானே அடிக்கடி கேட்டுப்பேன்.

      இப்படி ரொம்ப சோகமா இருந்த நாட்கள்ல, உணர்ச்சிகள கட்டுப்படுத்துறதுக்காக... மனநிம்மதிக்காக... எப்பவும் யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுனேன். இதனால கொஞ்சம் கொஞ்சமா என்னோட வேதனை குறைய ஆரம்பிச்சுது. ‘எதிர்பாராத சம்பவங்கள்’ நம்ம எல்லாருக்கும் நடக்கும்னு பைபிள் சொன்னது என் ஞாபகத்துக்கு வந்துச்சு. கடவுளால பொய் சொல்ல முடியாது, அதனால எங்க அப்பாவ மறுபடியும் உயிரோட பார்ப்பேங்கறத உறுதியா நம்புறேன்.”—பிரசங்கி 9:11; யோவான் 11:25; தீத்து 1:2.

      ராபர்ட்டும் அவருடைய மனைவியும் போட்டோ ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

      “ப்ளைன் ஆக்சிடென்ட் எங்க பையனோட உயிர பறிச்சிட்டாலும், அவன் எங்ககூட இருந்த சந்தோஷமான நாட்கள நாங்க இன்னும் நினைச்சு பார்க்குறோம்.”—ராபர்ட்

      ஆரம்ப கட்டுரையில் பார்த்த ராபர்ட் என்பவரும் இப்படித்தான் யோசிக்கிறார். அவர் சொல்கிறார்... “பிலிப்பியர் 4:6, 7-ல சொல்லியிருக்கிற மாதிரி, எனக்கும் என் மனைவிக்கும் மனநிம்மதி கிடைச்சுது... நாங்க ஜெபம் செஞ்சதுனாலதான் கிடைச்சுது. செய்தியாளர்கள் எங்கள பேட்டி எடுத்தப்போ உயிர்தெழுதல பத்தி பேச முடிஞ்சுது. ப்ளைன் ஆக்சிடென்ட் எங்க பையனோட உயிர பறிச்சிட்டாலும், அவன் எங்ககூட இருந்த சந்தோஷமான நாட்கள நாங்க இன்னும் நினைச்சு பார்க்குறோம். அதபத்தி மட்டும்தான் நாங்க நினைச்சு பார்க்குறோம்.

      எங்க நம்பிக்கைய பத்தி நாங்க டிவில நிதானமா பேட்டி கொடுத்தத சக யெகோவாவின் சாட்சிகள் பார்த்ததா எங்ககிட்ட சொன்னப்போ, நீங்க எங்களுக்காக செஞ்ச ஜெபம்தான் அதுக்கெல்லாம் காரணம்னு சொன்னோம். நிறைய பேருடைய ஆறுதலான வார்த்தை மூலமா யெகோவா எங்கள தாங்குறார்ங்கறத நான் உறுதியா நம்புறேன்.”

      இந்த உதாரணங்களை எல்லாம் பார்க்கும்போது, பல விதமான பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கிற மக்களுக்கு கடவுளால் ஆறுதல் கொடுக்க முடியும். உங்களுக்கும்தான்! வாழ்க்கையில் உங்களுக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் சரி, அவற்றை கடந்து வருவதற்கு தேவையான ஆறுதல் கிடைக்கும்.b அதனால் உதவிக்காக ஏன் யெகோவாவை தேடி வரக்கூடாது? ஏனென்றால், அவர்தான் “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.”—2 கொரிந்தியர் 1:3. ▪ (wp16-E No. 5)

      a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

      b கடவுளிடம் நெருங்கி வருவதற்கும் அவர் தருகிற ஆறுதலை பெறுவதற்கும், தயவுசெய்து உங்கள் அருகில் இருக்கும் யெகோவாவின் சாட்சியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகில் உள்ள கிளை அலுவலகத்திற்கு எழுதுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்