பசுக்கள் பறக்குமிடம்
ஷெட்லேண்ட் தீவுகளின் அந்தக் கடுஞ்சீற்றமான காற்றுகள் ஜனவரி 5, 1993 அன்று உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தன. அவை ப்ரேர் என்ற 243 மீட்டர் நீளமுள்ள, 45,000-டன் எண்ணெய்க் கப்பலைத் தள்ளிக்கொண்டுபோய் ஸ்காட்லாந்தின் வடபகுதியிலுள்ள பாறைகள் நிறைந்த கடற்கரைக்கு எதிரே இடித்தன. ஒரே வாரத்திற்குள் காற்றும் அலைகளும் அவ்வளவு பெரிய கப்பலை நான்கு துண்டுகளாக்கின.
ஊளையிடும் புயற்காற்றுகள் ஷெட்லேண்டில் வாழும் மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இருபதுக்கும் குறைவான தீவுகளில் மட்டும் மக்கள் குடியிருக்கும், சுமார் 100 தீவுகளடங்கிய தொலைவிலுள்ள ஒரு தீவுக்கூட்டம், ஐஸ்லாந்திலிருந்து கடல்கடந்து எவ்வித தடையுமின்றிப் பேரிரைச்சலுடன் உட்புகும் இந்தக் கடுங்குளிரான கொடுங்காற்றுகளை முதலில் சந்திப்பதற்காக நிற்கிறது.
அங்குக் குடியிருப்போர் விசித்திரமான காட்சிகளைக் கண்டு பழக்கப்பட்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்ட ஒரு மனிதன் சொன்னான்: “‘பறக்கும் பசுக்கள் ஜாக்கிரதை,’ என்ற எச்சரிக்கை அடையாளங்கள் ஷெட்லேண்ட் சாலைகளில் இருக்கவேண்டும்.” அவருடைய நண்பர் ஒருவருடைய பசுக்களில் ஒன்று ஒரு சில வருடங்களுக்கு முன் மேய்ச்சல் நிலத்திலிருந்து அப்படியே காற்றில் அலாக்காகத் தூக்கிச் செல்லப்பட்டது. அங்குக் குடியிருக்கும் மற்றொருவர், ஒரு விஞ்ஞானி, தன்னுடைய வீட்டில் வளர்த்த பூனை 5 மீட்டர் தூரம் வரை காற்றில் “பறப்பதை” கண்டதாகக் கூறினார். சந்தேகமின்றித் தரையில் விழுந்தபோது எப்போதும் தனது கால்களை ஊன்றியே விழுந்தது. தங்களுடைய வண்டி சாலைகளில் போய்க்கொண்டிருக்கும்போது காற்றினால் தூக்கிக்கொண்டு போகப்படாமலிருப்பதைத் தவிர்க்க ஓட்டுநர்கள் வழக்கமாகவே தங்களுடைய வண்டிகளில் நிலக்கரி போன்ற நல்ல பாரமான பொருட்களை நிரப்பிக்கொண்டு போவதுண்டு. ஆட்களும் நிலத்திலிருந்து தூக்கிச்செல்லப்பட்டிருக்கின்றனர்; சிலர் கொல்லப்பட்டும் இருக்கின்றனர். ஒரு பெண்ணைக் கொன்ற புயல் ஒன்று, மணிக்கு 323 கிலோமீட்டர் என்ற அதிகாரப்பூர்வமல்லாத வேகத்தை அடைந்தது. அதிகாரப்பூர்வமல்லாதது என்று சொல்ல காரணம், வைக்கப்பட்டிருந்த அரசாங்க காற்றுமானி அதே புயலால் அடித்துச் செல்லப்பட்டது! (g93 6/22)