பலவீனமடையும் திருமணப் பிணைப்பு
ஓர் இளம் தாய் அவளுடைய இரண்டு மாதப் பிள்ளையைக் கட்டியணைத்தாள். பின்பு அவள், திடீர் ஆவேசத்தில் அவனைத் தரையில் போட்டாள். சில மணிநேரங்கள் கழிந்தபின் அந்தப் பையன் இறந்துபோனான். “நான் வேண்டுமென்றேதான் அவனைக் கீழே போட்டேன்,” என்று தாய் சொன்னாள், “ஏனென்றால், என் கணவர் அவருடைய குடும்பத்தைக் கவனிப்பதேயில்லை.” அவளுடைய கணவனோடு பிரச்னையை மீண்டும் பேசுவதற்குப் பதிலாக, அவள் தன்னுடைய கோபத்தை அப்பாவிக் குழந்தையின்மீது காண்பித்தாள்.
சில தாய்மார்கள் இப்படிப்பட்ட மோசமான காரியத்தைச் செய்யும்படி தீர்மானிக்கிறார்கள்; ஆனால் பலர் இவளுடைய உணர்ச்சிகளைப் பெறுவதாக ஒத்துக்கொள்கிறார்கள். திருமணமான தம்பதிகள் தங்களுடைய மண வாழ்க்கையை வெற்றிகரமாக்குவது அதிகமதிகமாகக் கடினமாகிவருகிறது. திருமணம் மற்றும் குடும்பம்பற்றிய பத்திரிகை (Journal of Marriage and the Family), “மண வாழ்க்கையில் வெற்றிக்குரிய வாய்ப்பு, ஐக்கிய மாகாணங்களில் இன்று உள்ளதைப்போல் அவ்வளவு குறைவாக இருப்பதால், ஒரு முறியாத, முழுமையான வாக்குறுதியைத் திருமணத்தில் கொடுப்பது . . . அவ்வளவு துணிந்த முயற்சியை உட்படுத்துகிறது, முழு நியாயமுள்ள நபர் எவரும் அதைச் செய்யமாட்டார்,” என்று சொல்கிறது.
ஒழுக்கக்கேடு, ஒத்துப்போகாத தன்மை, கடன்கள், திருமணப் பந்துக்களிடையே முரண்பாடுகள், தன்னலம் ஆகிய இவையனைத்தும் இந்தக் குழப்பம் நிறைந்த காலங்களில் வீட்டுச் சண்டைகளைக் கிளறி விடுகின்றன; இவை அடிக்கடி மணவிலக்கில் முடிவடைகின்றன. இந்த நிலை ஜப்பானில் அவ்வளவு மோசமாக இருப்பதால், மணவிலக்குக்கு எதிராக அதனுடைய திடமான நிலைநிற்கையை எடுத்திருப்பதில் புகழ்பெற்ற கத்தோலிக்க சர்ச்சுங்கூட, ஒரு விசேஷித்த குழுவை நியமிக்கவேண்டியதிருந்தது; இது மணவிலக்கடைந்து, மறுமணம் செய்துகொண்டவர்களைக் கத்தோலிக்கர்கள் வேறுபடுத்தி நடத்தும் உணர்வுகளை நீக்குவதற்கு அமைக்கப்பட்டது. சர்ச்சுக்குப் போவோர்களில் அதிகரிக்கும் எண்ணிக்கையினர், மணவிலக்குச் சம்பந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனாலும், மணவிலக்குகளின் எண்ணிக்கைகள் ஒரு பெரிய பிரச்னையின் மிகச்சிறிய பகுதியை மட்டும்தான் வெளிக்காட்டுகின்றன. ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, மணவிலக்கின் அதிகரிப்பிற்குக் காரணம், மணவிலக்கைச் சுலபமாக்கும் வெறும் சமுதாயப் பாணிகளைவிட, திருமண வாழ்க்கைமுறையின் படுமோசமான தரந்தானே என்று காண்பிக்கிறது. சிறிதளவான முயற்சியினாலும், குறைந்த பொறுப்புணர்வினாலும், திருமண வாழ்க்கை அதனுடைய கவர்ச்சியை இழந்துவருகிறது. பலர் ஒரு திருமணத் தம்பதிபோல் வெளித்தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பள்ளியறை கடன்களைப் பூர்த்திசெய்வதில்லை; அவர்கள் ஒருவரோடொருவர் பேசுவதுங்கூட கிடையாது. தனக்கென்று சொந்தமான ஒரு தனிக் கல்லறை இடத்தை வாங்கிய ஒரு கிழக்கத்திய பெண், ‘என் கணவரோடு நான் கல்லறையில் இருக்க விரும்பவில்லை’ என்று சொன்னதைப்போல் சிலர் உணர்கிறார்கள். இப்போது அவளுடைய கணவனை மணவிலக்குச் செய்ய முடியாதவளாக அவள், மரணத்திற்குப் பின்பு மணவிலக்கைப் பெறும் எண்ணத்தில் வாழ்கிறாள். வருந்தத்தக்கவிதத்தில், இப்படிப்பட்டவர்கள் மணவிலக்கைப் பெறாவிட்டாலும், திருமண வாழ்க்கை அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒன்றாக இல்லை.
இசாவோ-வின் நிலை அதுவாகத்தான் இருந்தது. அவர் ஒரு திடீர் ஆசையினால் அவருடைய மனைவியைத் திருமணம் செய்துகொண்டார்; எனவே, அவருடைய தற்போக்கான வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அவர் உணரவில்லை. அவர் ஒரு லாரி ஓட்டுநராக இருந்து, ஒரு நல்ல சம்பளத்தைப் பெற்றாலும், அவருடைய எல்லா சம்பாத்தியத்தையும் தின்பதிலும், குடிப்பதிலும் வீணாக்கினார்; அவருடைய குடும்பத்தை அவர் கவனிப்பதேயில்லை. இதன் விளைவாக, அவருடைய மனைவியோடு போடும் சண்டைகள் என்றுமே ஓய்ந்தபாடில்லை. “காரியங்கள் எனக்கு மோசமாகுங்போதெல்லாம், நான் வீட்டிற்குப்போய், என் கோபத்தையெல்லாம் என் குடும்பத்திடம் செயலில் காண்பிப்பேன்,” என்று இசாவோ ஞாபகப்படுத்திக்கொள்கிறார். ஓர் எரிமலை எப்படி அமைதியடையாதோ, அதைப்போல் மணவிலக்குச் செய்யவேண்டும் என்ற நினைவுகள் தினந்தோறும் வெடித்துக் கிளம்பின.
அநேக ஆண்களும் பெண்களும் மோசமான திருமண வாழ்க்கையைச் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மணவிலக்கைப் பெறுகிறார்களோ இல்லையோ, அவர்கள் சந்தோஷத்தைக் காண்பதில்லை. அவர்கள் தங்களுடைய திருமணத்தை வெற்றிபெறச்செய்வதற்கு வழி இருக்கிறதா? அவர்களுடைய திருமணப் பிணைப்பைப் பலப்படுத்த என்ன செய்யப்படலாம்?