நீங்கள் அங்கு இருப்பீர்களா?
1 “மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிநிரலுக்கு வராவிட்டால், நீங்க நிறைய விஷயங்களை மிஸ் பண்றீங்க” என சொன்னார் நீண்ட காலமாக சத்தியத்திலுள்ள ஒரு சாட்சி. அவர் ஏன் அவ்வாறு உணர்ந்தார்? அந்த முதல் நாள் நிகழ்ச்சிநிரல், நமக்காக யெகோவாவின் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் கொழுமையான ஆவிக்குரிய விருந்தின் ஆரம்பம் என்பதே அதற்குக் காரணம். (ஏசா. 25:6) அந்த நிகழ்ச்சிநிரலின் துவக்கத்திலிருந்தே அங்கு இருப்பது, சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை நாமும் ஒப்புக்கொள்வதை காட்டும்: “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.”—சங். 122:1.
2 கடந்த வருடம் நடைபெற்ற “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” என்ற மாவட்ட மாநாடுகள் சிலவற்றில், வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிநிரலுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தவர்களின் எண்ணிக்கையைவிட பெருமளவு குறைவுபட்டது. அப்படியானால் பெரும்பான்மையான நம் சகோதரர்கள் தீர்க்கதரிசன வார்த்தை சம்பந்தமாக மாநாட்டில் சொல்லப்பட்ட முக்கியமான தகவல்களை தவறவிட்டுவிட்டனர் என்பதை இது காட்டுகிறது. உடன் வணக்கத்தாருடன் மகிழ்ச்சி ததும்பும் கூட்டுறவையும் அவர்கள் இழந்துவிட்டனர்.
3 வேலை உங்களை தடுக்க வேண்டாம்: தங்கள் வேலை போய்விடுமோ என்ற பயமே சிலர் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிநிரலை தவறவிட்டதற்கான காரணமாக இருக்கலாம். இருப்பினும், தங்களுக்கு எப்போது விடுமுறை வேண்டும் என்பதை முன்கூட்டியே அதிகாரிகளிடம் தெரிவிக்கையில் அவர்களும் ஒத்துழைக்க தயாராயிருப்பதை நம்முடைய சகோதரர்களில் அநேகர் கண்டிருக்கின்றனர். உதாரணமாக இந்த பயனியர் சகோதரியை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஆஜராக வேண்டும் என்ற மன உறுதி அவருடைய முதலாளியை மிகவும் கவர்ந்தது. விளைவு? அவரும் அந்த சகோதரியுடன் மாநாட்டிற்கு வந்து ஒரு நாள் முழுவதும் இருந்து நிகழ்ச்சிநிரலை அனுபவித்தார்.
4 முதலாளியிடம் விடுமுறை கேட்டால் நிச்சயம் தரமாட்டார் என நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். அல்லது, ஒருநாள் நிகழ்ச்சிநிரல்தானே போனால் போகிறது, அதைத் தவறவிடுவதால் நஷ்டம் ஏதுமில்லை என்றும் கண்ணை மூடிக்கொண்டு முடிவு செய்துவிடாதீர்கள். மாநாட்டில் ஆஜராவது உங்கள் வணக்கத்தின் முக்கியமான பாகம் என்ற உங்கள் மனமார்ந்த நம்பிக்கையை வேதாகமத்திலிருந்து உங்கள் முதலாளிக்கு சாதுரியமாக விளக்க நன்கு தயாரியுங்கள். (எபி. 10:24, 25) உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கையில் பொருள் சம்பந்தமான தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்பதை உணர்ந்தவர்களாக, யெகோவாவின் வாக்குறுதிகளில் முழு விசுவாசம் வையுங்கள்.—மத். 6:33; எபி. 13:5, 6.
5 “அதிமுக்கியமான காரியங்களுக்கு” போற்றுதல் காட்டுவது முக்கியமாதலால் அதை எப்போதும் மனதில் வையுங்கள். (பிலி. 1:10, 11, NW; சங். 27:4) யெகோவாவிடமிருந்து வரும் இந்த முக்கியமான ஏற்பாட்டிலிருந்து பெரும் பயனடைவதற்கு நன்கு திட்டமிட இது நம்மை வழிநடத்தும். இப்போதே திட்டமிட ஆரம்பியுங்கள். மாநாட்டின் மூன்று நாட்களும் நீங்கள் அங்கிருப்பதற்கு தீர்மானமாயிருங்கள்.