பாடும் மரம்
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
எல்லையில்லாமல் பரந்து விரிந்திருக்கும் ஆப்பிரிக்க புல்வெளியில் ஒரு மரம் நின்று கொண்டு அடிக்கடி பாடுகிறது. அக்கேஷியா தாவர இனமான இதற்கு விசிலடிக்கும் முள் என்று பெயர். ஏன்? மரத்தின் இளம் தண்டுகளை காற்று தழுவும்போது, மரம் குஷியால் தன் குரலெடுத்து பாடுகிறது.
மிகவும் நீண்டு வளர்ந்திருக்கும் மரத்தின் மெல்லிய முட்கள், காற்றின் அதிர்வால் இனிமையான நாதங்கள் பல எழும்புகின்றன. மரத்தண்டில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களால் (hollow gall) உருவாகும் இசை, காலி புட்டி ஒன்றை வாய் வைத்து ஊதும்போது எழும்பும் ஓசை போல் இருக்கும். ஆக, முட்களின் இனிய நாதத்தோடு, இந்த ‘மரத்தண்டு இசையும்’ சேர்ந்துகொண்டு இனிமைக்கு இனிமை சேர்க்கிறது. மரத்தை இவ்வாறு துளையிட்டு ‘இசை கருவிகளாக’ உருவாக்கிய பெருமை திருவாளர் எறும்பு அவர்களையே சாரும். எறும்புகள் மரத்தண்டில் வெற்றிடங்களையும், வட்ட வீடுகளையும் உருவாக்கி, உள்ளே போய் வர நிறைய சிறுசிறு துளைகளை அமைக்கின்றன. இப்படி மரத்தில் பல்வேறு அளவுகளில் உருவாகியிருக்கும் வெற்றிடங்களும், துளைகளும் வெவ்வேறு ஸ்தாயியில் மதுரகீதம் இசைக்கின்றன. இந்த மதுரகீதமும், விசிலடிக்கும் முட்களின் இன்னிசையும் பாலோடு கலந்த தேனமுதாய் சங்கமிக்கிறது.
இந்த விசிலடிக்கும் முள் மரங்கள் பைபிளில் சங்கீதக்காரனின் உருவகப் பாடலை நினைவுக்கு கொண்டுவருகின்றன: “காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.” (திருப்பாடல்கள் [சங்கீதம்] 96:12, பொ.மொ.) ஆம், விசிலடிக்கும் முட்களையும், மரத்தண்டில் உருவாகிய புல்லாங்குழல் துளைகளையும் கையில் எடுத்து, காற்று என்னும் இசைக்கலைஞன் இசைக்கும் இசை ஆப்பிரிக்காவின் உணர்ச்சி ததும்பும் பாடலோடு கச்சிதமாக கலந்துவிடுகிறது.