புத்துணர்ச்சியூட்டும் இசை
1 பாட்டும் இசையும் மெய் வணக்கத்தின் முக்கிய அம்சங்கள். பூர்வ இஸ்ரவேலில், ‘[யெகோவாவைத்] துதியுங்கள்; . . . அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்’ என ஆசாபும் அவரது சகோதரர்களும் பாடினார்கள். (1 நா. 16:8, 9) இன்று வாராந்தர சபைக் கூட்டங்களில் நாம் யெகோவாவுக்குத் துதிப்பாடலைப் பாடுகிறோம். (எபே. 5:19) அவருடைய பெயருக்கு துதியை ஏறெடுக்க இது எத்தகைய அருமையான வாய்ப்பை அளிக்கிறது!—சங். 69:30.
2 கிங்டம் மெலடீஸ் வடிவில் ஆர்கெஸ்ட்ரா குழுவினரால் தொகுக்கப்பட்ட ராஜ்ய பாடல்களை கேட்கும்போது நம் மனம் ஆன்மீக எண்ணங்களால் நிரப்பப்படும். “மெலடீஸ் கேட்கும்போது அந்தப் பாடல்களின் வரிகள் அப்படியே என் நினைவுக்கு வருகின்றன. இசையை ரசித்துக்கொண்டே யெகோவாவை நினைத்துப் பார்க்க இது எப்பேர்ப்பட்ட சிறந்த வழி!” என ஒரு சகோதரி சொன்னார்.—பிலி. 4:8.
3 அவற்றை அனுபவித்து மகிழ்வதற்கான சந்தர்ப்பங்கள்: வீட்டில் கிங்டம் மெலடீஸ் இசைக்கப்படுகையில் அது ரம்மியமான, ஆவிக்குரிய சூழலை ஏற்படுத்துகிறது, அது குடும்ப சமாதானத்துக்கு பங்களிக்கிறது. “வீட்டில் இருக்கும்போதும் காரில் செல்லும்போதும் இதை [இந்த இசையை] அடிக்கடி போட்டுக் கேட்போம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாக இருப்பதால் எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல தயாராகும்போதோ மாநாட்டுக்கு செல்லும் வழியிலோ கிங்டம் மெலடீஸை போட்டுக் கேட்கும்போது கூட்டங்களில் கலந்துகொள்ள ஏற்ற மனநிலையை உருவாக்குகிறது” என ஒரு குடும்பத்தார் எழுதினார்கள். “வீட்டு வேலை செய்யும்போது மெலடீஸைக் கேட்பது எனக்கு உண்மையிலேயே அதிக மகிழ்ச்சி தருகிறது; துணிகளை மடித்து வைக்கையில்கூட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! எப்போதெல்லாம் மனசு சரியில்லையோ அப்போதெல்லாம் இந்த மியூசிக்கை போட்டுக் கேட்க முடிவு செய்திருக்கிறேன். . . . இந்த மியூசிக் எவ்வளவாய் புத்துணர்ச்சியூட்டுகிறது தெரியுமா! . . . ஒவ்வொரு பாட்டும் மனதை குதூகலிக்கச் செய்கிறது” என ஒரு சகோதரி சொன்னார். இத்தகைய புத்துணர்ச்சியூட்டும் இசையை கேட்க உங்களுக்கு ஏதாவது சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா?
4 இன்றைக்குள்ள இசையில் பெரும்பாலானவை இந்த உலகத்தின் மனப்பான்மையைத்தான் ரீங்காரம் செய்கின்றன. கிங்டம் மெலடீஸை அடிக்கடி போட்டுக் கேட்பதன் மூலம் கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான இசை மீது ஆர்வத்தை வளர்க்கலாம். இத்தகைய அருமையான பாடல்களைப் பற்றி—யெகோவாவை மகிமைப்படுத்துகிறதும் நம்மை மகிழ்விக்கிறதுமான இத்தகைய பாடல்களைப் பற்றி—தெரிந்துகொள்ள பைபிள் மாணாக்கர்களும் ஆர்வமுள்ளவர்களும்கூட அதிக சந்தோஷப்படுவார்கள்.—சங். 47:1, 2, 6, 7.