மாவட்ட மாநாடுகள் —மகிழ்ச்சி தரும் தருணங்கள்!
1. இஸ்ரவேலரின் பண்டிகைகளுக்கும் நம்முடைய மாவட்ட மாநாடுகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
1 வருடாந்தர பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக யோசேப்பு, மரியாள், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பலர் எருசலேமுக்குச் செல்வது வழக்கம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்களுடைய அன்றாடக் கவலைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அதிமுக்கியமான ஆன்மீகக் காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்தினார்கள். பண்டிகைக் காலத்தில், யெகோவாவின் நற்குணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் அதைப் பற்றி மற்றவர்களுடன் பேசவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு, அவருடைய திருச்சட்டத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் நேரம் கிடைத்தது. இந்த வருட மாவட்ட மாநாடுகள் யெகோவாவைச் சந்தோஷமாக வழிபட நமக்கும் இதே போன்ற வாய்ப்புகளை அள்ளித்தரும்.
2. இந்த வருட மாவட்ட மாநாட்டிற்காக நாம் எப்படித் தயாராக வேண்டும்?
2 தயாரிப்பது அவசியம்: நாசரேத்திலிருந்து கிளம்பிய இயேசுவின் குடும்பம் போக வர கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் நடை பயணம் செய்ய வேண்டியிருந்தது. இயேசுவுக்கு எத்தனை உடன்பிறப்புகள் இருந்தார்கள் என நமக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும் இந்தப் பயணத்திற்காக யோசேப்பும் மரியாளும் எந்தளவுக்குத் திட்டமிட்டு தயார் செய்திருப்பார்கள் என்பதை நாம் ஓரளவு கற்பனை செய்ய முடியும். இந்த வருட மாவட்ட மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்துகொள்ளத் தேவையான எல்லாவற்றையும் செய்துவிட்டீர்களா? வேலையிலிருந்து விடுப்பு எடுப்பது அல்லது முதலாளியிடமோ பிள்ளையின் டீச்சரிடமோ விடுப்பு கேட்பது போன்ற காரியங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். தங்குவதற்கு ஓட்டல் அறைகளைப் புக் செய்துவிட்டீர்களா? உங்கள் சபையில் அதிக கவனிப்பு தேவைப்படுகிற ஒருவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு உதவ தயாராய் இருக்கிறீர்களா?—1 யோ. 3:17, 18.
3. யூதர்களுடைய பண்டிகைகள் உற்சாகமூட்டும் விதத்தில் பேசி மகிழ எவ்வாறு வாய்ப்பளித்தன?
3 உற்சாகமூட்டும் தோழமை: யூதர்களுடைய பண்டிகைகள் சக வணக்கத்தாரோடு உற்சாகமூட்டும் விதத்தில் பேசி மகிழ்வதற்கு வாய்ப்பளித்தன. இயேசுவின் குடும்பத்தார் அவர்களுடைய நீண்டநாள் நண்பர்களுடன் தோழமைக்கொள்ள ஏங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எருசலேமிலிருந்தபோதும் பயணித்தபோதும் யூதர்கள் மற்றும் யூத மதத்திற்கு மாறியவர்களோடு புதிதாக நட்புக்கொள்ள அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.
4. ஒன்றுபட்ட கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் என எப்படிக் காட்டலாம்?
4 உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் விரும்பியிருந்தால் மாவட்ட மாநாடுகளில் கொடுக்கப்படுகிற பேச்சுகளை அச்சடித்துக் கொடுத்திருக்க முடியும்; ஆனால், நாம் ஒன்றுகூடி வந்து பேச்சுகளைக் கேட்பதற்கு அவர்கள் ஏன் ஏற்பாடு செய்கிறார்கள்? நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்காகவே. (எபி. 10:24, 25) ஆகவே, மாநாட்டிற்கு ஒவ்வொரு நாளும் சீக்கிரமாகவே வருவதற்குத் திட்டமிடுங்கள்; ‘இசை ஆரம்பிக்கப் போகிறது, எல்லாரும் உங்கள் இருக்கையில் அமருங்கள்’ என்று சேர்மேன் சொல்வதற்கு முன்பாகவே அங்கு வந்திருப்பவர்களோடு தோழமையை அனுபவியுங்கள். மதிய உணவுக்காக மாநாட்டு மன்றத்தைவிட்டு வெளியே போவதற்கு பதிலாக, எளிய உணவைக் கொண்டுவரும்படி நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்; அப்போதுதான், அங்கு வந்திருப்பவர்களோடு நம்மால் நல்ல தோழமைக்கொள்ள முடியும். நம்முடைய ஒன்றுபட்ட கிறிஸ்தவ சகோதரத்துவம் யெகோவா கொடுத்த பரிசு; அதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.—மீ. 2:12.
5. நிகழ்ச்சி நிரலிலிருந்து முழுமையாக பயனடைய எது நமக்கு உதவும்?
5 கற்றுக்கொள்வதற்கான சமயம்: இயேசு சிறுபிள்ளையாய் இருந்தபோதே, பண்டிகைக் காலத்தைத் தம்முடைய பரலோகத் தகப்பனைப் பற்றிக் கற்றுக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகக் கருதினார். (லூக். 2:41-49) மாவட்ட மாநாட்டிலிருந்து முழுமையாக பயனடைய நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் எது உதவும்? நிகழ்ச்சி நிரலின்போது இங்கும் அங்கும் நடப்பதையோ, அனாவசியமாக பேசுவதையோ தவிருங்கள். செல்போன், பேஜர், அல்லது இது போன்ற மற்ற கருவிகள் உங்களுடைய அல்லது மற்றவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்க அனுமதிக்காதீர்கள். கொடுக்கப்படும் பேச்சுகள்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள், சுருக்கமான குறிப்புகள் எடுங்கள். உங்கள் பிள்ளைகளும் மாநாட்டைக் கவனிக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள குடும்பமாக ஒன்றுசேர்ந்து உட்காருங்கள். மாலை நேரத்தில் கொஞ்ச நேரம் ஒதுக்கி மாநாட்டில் உங்கள் மனதைத் தொட்ட குறிப்புகளைக் கலந்து பேசுங்கள்.
6. நம் உடை, தோற்றம் சம்பந்தமாக என்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்?
6 உடையும் தோற்றமும்: பண்டிகைகளுக்காகப் பயணித்த இயேசுவின் குடும்பத்தாரும் மற்ற யூதர்களும் தங்களுடைய உடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, அந்தத் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டியிருந்தார்கள்; அதனால், அந்தச் சாலைகளில் பயணித்த அயல்நாட்டு வியாபாரிகள் அவர்களை யூதர்கள் என எளிதாகத் தெரிந்துகொண்டார்கள். (எண். 15:37-41) இன்று கிறிஸ்தவர்கள் பிரத்தியேக உடைகளை அணியாவிட்டாலும், அடக்கமாகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் உடை உடுத்துவதில் பேர்பெற்றிருக்கிறார்கள். எனவே, பயணிக்கும்போதும் சரி மாநாட்டு நகரத்தில் இருக்கும்போதும் சரி, நம் தோற்றத்திற்கு முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். நிகழ்ச்சி நிரல் முடிந்த பிறகு, நாம் வேறு உடைகளை மாற்றினாலும்கூட கண்ணியமான தோற்றத்தில் இருக்க வேண்டும்; பேட்ஜ் கார்டையும் அணிந்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால், நாம் மற்றவர்களிலிருந்து தனித்துத் தெரிவோம், நம்மைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை மற்றவர்களுக்குக் கொடுப்போம்.
7. மாநாட்டில் வாலண்டியராக சேவை செய்வதைக் குறித்து நாம் ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
7 வாலண்டியர்கள் தேவை: மாநாடு சுமூகமாக நடைபெற நிறைய வாலண்டியர்கள் தேவை. உங்களால் வாலண்டியர் சேவை செய்ய முடியுமா? (சங். 110:3) மாநாட்டு மன்றங்களில் செய்யப்படுகிற வேலை நம் பரிசுத்த சேவையின் பாகமாக இருக்கிறது; அதோடு, சிறந்த சாட்சியும் அளிக்கிறது. ஒரு மாநாட்டு அரங்கத்தை வாலண்டியர்கள் சுத்தம் செய்தபோது, அதைப் பார்த்த மேனேஜர் அசந்துபோனார்; அவர் இவ்வாறு எழுதினார்: “இப்படிப்பட்ட அருமையான மக்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை; இதற்காக, நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு அரங்கத்தை வாடகைக்கு கொடுத்தால், அதை முன்பு இருந்ததைவிட அதிக சுத்தமாக விட்டுச்செல்வார்கள் என்று எங்களுடைய நிறுவனத்தில் நீண்ட காலமாகவே உங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. நீங்களும் உங்கள் அமைப்பும் இந்த அரங்கத்தைச் சமுதாயத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த அரங்கமாக ஆக்கியிருக்கிறீர்கள்; அதுவும், பழகுவதற்கு இனிமையான ஆட்களை வைத்து இதைச் செய்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஆட்களோடு பழகுவது எங்களுக்கு ஓர் இனிய அனுபவம்.”
8. மாநாட்டு நகரத்தில் சாட்சி கொடுக்க என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
8 சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகள்: நாம் நேர்த்தியாகவும் அடக்கமாகவும் உடுத்திக்கொண்டு, பேட்ஜ் அணிந்துகொண்டு மாநாட்டுக்குச் செல்லும்போது அங்குள்ள அநேகர் அதைக் கவனிக்கலாம்; நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பலாம், மாநாட்டைப் பற்றிச் சொல்வதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கலாம். ஒரு நான்கு வயது பையன், மாநாட்டில் வெளியான ஒரு பிரசுரத்தை உணவகத்துக்கு எடுத்து சென்று அங்கிருந்த பணிப்பெண்ணிடம் காட்டினான். இதனால், அவனுடைய பெற்றோர் அந்தப் பெண்ணை மாநாட்டிற்கு அழைக்க முடிந்தது.
9. நம் சகோதரர்களுடைய நன்நடத்தையை ஓட்டல் மேனேஜர்கள் எப்படிப் பாராட்டியிருக்கிறார்கள்?
9 நற்செயல்கள்: மாவட்ட மாநாடுகளில் அநேகருக்கு நம்முடைய ‘நற்செயல்கள் வெளிப்படும்.’ (1 தீ. 5:25) வட இந்தியாவில் பல வருடங்களாக மாநாடுகள் நடத்தப்பட்ட ஒரு நகரிலுள்ள ஓட்டல் மேனேஜர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் நடந்துகொள்ளும் விதம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது; நீங்கள் மற்றவர்களைப் போல் ஆங்காங்கே துப்புவதோ, அங்குமிங்கும் உலாத்துவதோ, அறையை குப்பைகூளமாக்குவதோ இல்லை.” மற்றொரு நகரைச் சேர்ந்த ஓர் ஓட்டல் மேனேஜர், மற்ற தொகுதியினரும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவோரும் தந்த பிரச்சினைகளைப் பற்றி சொன்ன பிறகு, அங்கு தங்கிய நம் சகோதரர்கள் ஒத்துழைப்பு தந்து பொறுமையாக நடந்துகொண்டதைப் பாராட்டினார். “எங்களுடைய ஓட்டலில் தங்குபவர்கள் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று அவர் சொன்னார். நம் சகோதரர்களுடைய நடத்தையால், அநேகர் இவ்வாறு பாராட்டைத் தெரிவித்திருப்பது நம் கடவுளாகிய யெகோவாவின் இதயத்தை மகிழ்விக்கிறது, அல்லவா?
10. யெகோவா செய்திருக்கும் ஆன்மீக ஏற்பாடுகளுக்கு இயேசுவின் குடும்பத்தாரைப் போலவே நாமும் எப்படி நன்றிகாட்டலாம்?
10 ஆன்மீகச் சிந்தையுள்ள யூதர்களுக்கு பண்டிகைகள் சந்தோஷமான தருணங்களாக இருந்தன; அதற்காக, அவர்கள் ஆவலாய் எதிர்பார்த்தார்கள். (உபா. 16:15) இயேசுவின் குடும்பத்தாரும் அவற்றில் கலந்துகொண்டு முழுமையாக பயனடைய எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராய் இருந்தார்கள். நாமும் மாவட்ட மாநாடுகளை யெகோவாவிடமிருந்து வரும் பரிசாகக் கருதுவதால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராய் இருக்கிறோம். (யாக். 1:17) யெகோவாவைச் சந்தோஷமாய் வழிபட வருடாவருடம் கிடைக்கிற இந்த வாய்ப்புக்காக இப்போதே தயாராவோமாக!
[5, 6 பக்கங்களின் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்கப் போவதாக அறிவிக்கப்படும்போது நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்; இது கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:55 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:40 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு வளாகங்களில் வாகனம் நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம்; அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடமளிக்கப்படும். பொதுவாக, வாகனங்களை நிறுத்துவதற்கு குறைவான இடமே ஒதுக்கப்படும் என்பதால், ஒரு காரில் பலர் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்குக் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு, உங்கள் வீட்டாருக்கு, அல்லது தற்போது நீங்கள் பைபிள் படிப்பு நடத்தும் மாணாக்கருக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.—1 கொ. 13:5.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்குத் தயவுசெய்து எளிய உணவை எடுத்து வாருங்கள். இருக்கைக்குக் கீழே வைக்க முடிந்த சிறிய சாப்பாட்டு பையைப் பயன்படுத்தலாம். பெரிய டிபன் கேரியர்கள், கண்ணாடிப் பாத்திரங்கள் ஆகியவை மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டா. மாநாட்டு நிர்வாகம் உணவுக்கோ சிற்றுண்டிக்கோ ஏற்பாடு செய்யாது.
◼ நன்கொடைகள்: ராஜ்ய மன்றத்திலோ மாநாட்டு வளாகத்திலோ உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டலாம். மாநாட்டில் நன்கொடையாக செக்குகளைக் கொடுப்பதாக இருந்தால், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயருக்குக் கொடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ ரீதியாக அவசர உதவி தேவைப்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான், வளாகத்தில் முதலுதவி அளிக்கத் தகுதி பெற்றிருப்பவரால், சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தீர்மானித்து உதவியளிக்க முடியும்.
◼ காலணிகள்: பொருத்தமற்ற காலணிகளை அணிவதால் ஒவ்வொரு வருடமும் அநேகர் காயமடைகிறார்கள். ஆகவே, கால்களுக்குப் பொருந்தும் நேர்த்தியான காலணிகளை அணிவது மிகவும் நல்லது; இது படிக்கட்டுகள், இரும்புச் சட்டங்கள் போன்றவற்றின் மீது நடக்கும்போது தடுக்கி விழுந்துவிடாதிருக்க உதவும்.
◼ காதுகேளாதோருக்கு: பின்வரும் மாநாடுகளில் மட்டும் நிகழ்ச்சிகளைச் சைகை மொழியில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: பெங்களூர் (ஆங்கிலம்), கோயம்புத்தூர் (தமிழ்), கொச்சி-2 (மலையாளம்), பூனா-சின்ச்சுவாட் (ஆங்கிலம்).
◼ ரெக்கார்டிங்: வளாகத்திலுள்ள மின் அமைப்புடன் அல்லது ஒலி அமைப்புடன் எந்த ரெக்கார்டர்களையும் இணைக்கக் கூடாது; மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாத விதத்தில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
◼ குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளும் மடக்கு நாற்காலிகளும்: குழந்தைகளை உட்கார வைத்து தள்ளிச் செல்லும் வண்டிகளையும் மடக்கு நாற்காலிகளையும் மாநாட்டு வளாகத்திற்கு எடுத்துவரக் கூடாது. ஆனாலும், பெற்றோரின் அருகிலுள்ள இருக்கையோடு சேர்த்து பொருத்தக்கூடிய குழந்தை-பாதுகாப்பு இருக்கைகளை எடுத்து வரலாம்.
◼ சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் நாலா பக்கமும் மூடியிருக்கும் அரங்கங்களில் நடைபெற இருக்கின்றன; அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. அதனால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, நறுமணப் பொருள்களையோ வாசனைத் தைலங்களையோ சென்ட்டுகளையோ நாம் அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ “தயவுசெய்து போய் பார்க்கவும்” படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வமுள்ள எவரையாவது நாம் சந்தித்திருந்தால், தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை மாநாட்டுக்கு எடுத்துவர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது சபை செயலரிடம் பின்னர் கொடுக்கலாம்.—நவம்பர் 2009 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐப் பாருங்கள்.
◼ உணவகங்கள்: உணவகங்களிலும் ஓட்டல்களிலும் உங்கள் நல்நடத்தை மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேருங்கள். உணவகங்களில் அளிக்கப்படுகிற சேவைக்கு ஏற்ப டிப்ஸ் கொடுப்பது பல இடங்களில் வழக்கமாக இருக்கிறது.
◼ ஓட்டல்கள்: (1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள். (2) ஓட்டலில் நீங்கள் பதிவு செய்திருக்கும் அறையை ரத்து செய்ய விரும்பினால் உடனடியாக அதன் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (3) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளு வண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள். (4) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (5) ஒவ்வொரு நாளும் அறையைச் சுத்தம் செய்பவர்களுக்கு டிப்ஸ் கொடுங்கள். (6) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிற காலை உணவு, காப்பி அல்லது ஐஸ் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். (7) எல்லாச் சமயத்திலும், கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை ஓட்டல் பணியாளரிடம் வெளிக்காட்டுங்கள். அவர்கள் எத்தனையோ பேரைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நாம் கனிவோடும், பொறுமையோடும், நியாயத்தன்மையோடும் நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள். (8) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியல்களில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒருநாள் வாடகையாகும். நீங்கள் கேட்காத அல்லது பயன்படுத்தாத பொருள்களுக்கென கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறை வசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள். (9) உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அறை வசதி இலாகாவிடம் மாநாட்டின்போதே மறக்காமல் தெரிவியுங்கள்.
◼ வாலண்டியர் சேவை: மாநாட்டு வேலைகளுக்கு நாம் மனமுவந்து ஒத்துழைப்பு கொடுக்கும்போது, மாநாட்டிலிருந்து இன்னும் அதிக சந்தோஷத்தைப் பெறலாம். (அப். 20:35) அவ்வாறு வேலை செய்ய விரும்புவோர் தங்களுடைய விருப்பத்தை வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரிவிக்க வேண்டும். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட பெற்றோர், பாதுகாப்பாளர் அல்லது இவர்களால் நியமிக்கப்பட்ட வேறொருவருடைய கண்காணிப்பின் கீழ் வாலண்டியர் சேவை செய்யலாம்.