வெள்ளி, அக்டோபர் 24
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்.—1 பே. 4:8.
பேதுரு பயன்படுத்தியிருக்கிற “ஆழ்ந்த” என்ற வார்த்தை, ஏதோவொரு பொருளை “நன்றாக விரிப்பதை” குறிக்கிறது. வசனத்தின் இரண்டாவது பாகத்தில், ஆழமான அன்பு இருந்தால் சகோதரர்களுடைய பாவத்தை மூட முடியும் என்று பேதுரு சொல்கிறார். இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை யோசியுங்கள்: உங்களிடம் ஒரு டேபிள் இருக்கிறது. ஆனால், அதன்மேல் ஏகப்பட்ட கீரல்களும் கறைகளும் இருக்கின்றன. அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை. அதனால், அதன்மேல் ஒரு துணியை விரிக்கிறீர்கள். அந்தத் துணியை நான்கு பக்கமும் நன்றாக இழுத்துவிடுகிறீர்கள். இப்படி, ஓரிரு கறைகளை மட்டுமல்ல, அந்த டேபிள்மேல் இருக்கிற மொத்த கறைகளையும் மூடிவிடுகிறீர்கள். இந்தத் துணி மாதிரிதான் நாம் காட்டுகிற ஆழமான அன்பு! சகோதர சகோதரிகளிடம் இருக்கும் ஓரிரு குறைகளை மட்டுமல்ல, “ஏராளமான பாவங்களை” ஆழமான அன்பினால் மூட முடியும். மற்றவர்கள்மேல் ஆழமான அன்பு இருந்தால்தான் அவர்கள் செய்கிற தவறுகளை நம்மால் மன்னிக்க முடியும்; கஷ்டமாக இருந்தாலும் மன்னிக்க முடியும்! (கொலோ. 3:13) நாம் மற்றவர்களை மன்னித்தால் யெகோவாவுக்கு நம்மை ரொம்பப் பிடிக்கும். w23.11 11-12 ¶13-15
சனி, அக்டோபர் 25
ராஜாவின் முன்னால் சாப்பான் அதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.—2 நா. 34:18.
26 வயதில், யோசியா ராஜா யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்தார். அந்த சமயத்தில், ‘மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகம்’ கிடைத்தது. அது வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது, அதில் சொல்லியிருப்பதை தீவிரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். (2 நா. 34:14, 19-21) நீங்களும் பைபிளை தினமும் வாசிக்க ஆசைப்படுகிறீர்களா? ஏற்கெனவே வாசிக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிரயோஜனமாக இருக்கும் என்று நினைக்கும் வசனங்களை தனியாக குறித்து வைக்கிறீர்களா? யோசியாவுக்கு கிட்டத்தட்ட 39 வயது இருக்கும்போது, அவர் ஒரு பெரிய தப்பை செய்தார். அதனால் அவருடைய உயிரே போய்விட்டது. யெகோவாவை நம்பி அவருடைய வழிநடத்துதலை கேட்பதற்கு பதிலாக சொந்த புத்தியை நம்பி அவராகவே ஒரு முடிவை எடுத்துவிட்டார். (2 நா. 35:20-25) பாடம்? நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, எவ்வளவு வருஷமாக பைபிளை படித்துக்கொண்டு இருந்தாலும் சரி, நாம் தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வது, அவருடைய வார்த்தையை படிப்பது, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையில் பெரிய பெரிய தவறுகளை செய்யாமல் இருப்போம், சந்தோஷமாக இருப்போம்.—யாக். 1:25. w23.09 12 ¶15-16
ஞாயிறு, அக்டோபர் 26
தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.—யாக். 4:6.
யெகோவாவை நேசித்து, அவருக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பெண்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. “பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும்” அவர்கள் இருந்தார்கள். (1 தீ. 3:11) அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். உங்கள் சபையிலும் முதிர்ச்சியுள்ள சகோதரிகள் இருப்பார்கள். இளம் சகோதரிகளே, உங்களுக்குத் தெரிந்த முதிர்ச்சியுள்ள சகோதரிகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்களிடம் இருக்கிற நல்ல நல்ல குணங்களைக் கவனியுங்கள். அந்தக் குணங்களை நீங்கள் எப்படிக் காட்டலாம் என்று யோசியுங்கள். ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக இருப்பதற்கு மனத்தாழ்மை ரொம்ப முக்கியம். ஒரு சகோதரி மனத்தாழ்மையாக இருந்தால், அவருக்கு யெகோவாவோடும் மற்றவர்களோடும் நல்ல பந்தம் இருக்கும். உதாரணத்துக்கு, யெகோவாவை நேசிக்கிற ஒரு சகோதரி, அவர் ஏற்படுத்திய தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்—சபையிலும்! குடும்பத்திலும்!—1 கொ. 11:3. w23.12 18-19 ¶3-5