சனி, அக்டோபர் 25
ராஜாவின் முன்னால் சாப்பான் அதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.—2 நா. 34:18.
26 வயதில், யோசியா ராஜா யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்தார். அந்த சமயத்தில், ‘மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகம்’ கிடைத்தது. அது வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது, அதில் சொல்லியிருப்பதை தீவிரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். (2 நா. 34:14, 19-21) நீங்களும் பைபிளை தினமும் வாசிக்க ஆசைப்படுகிறீர்களா? ஏற்கெனவே வாசிக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிரயோஜனமாக இருக்கும் என்று நினைக்கும் வசனங்களை தனியாக குறித்து வைக்கிறீர்களா? யோசியாவுக்கு கிட்டத்தட்ட 39 வயது இருக்கும்போது, அவர் ஒரு பெரிய தப்பை செய்தார். அதனால் அவருடைய உயிரே போய்விட்டது. யெகோவாவை நம்பி அவருடைய வழிநடத்துதலை கேட்பதற்கு பதிலாக சொந்த புத்தியை நம்பி அவராகவே ஒரு முடிவை எடுத்துவிட்டார். (2 நா. 35:20-25) பாடம்? நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, எவ்வளவு வருஷமாக பைபிளை படித்துக்கொண்டு இருந்தாலும் சரி, நாம் தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வது, அவருடைய வார்த்தையை படிப்பது, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையில் பெரிய பெரிய தவறுகளை செய்யாமல் இருப்போம், சந்தோஷமாக இருப்போம்.—யாக். 1:25. w23.09 12 ¶15-16
ஞாயிறு, அக்டோபர் 26
தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.—யாக். 4:6.
யெகோவாவை நேசித்து, அவருக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பெண்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. “பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும்” அவர்கள் இருந்தார்கள். (1 தீ. 3:11) அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். உங்கள் சபையிலும் முதிர்ச்சியுள்ள சகோதரிகள் இருப்பார்கள். இளம் சகோதரிகளே, உங்களுக்குத் தெரிந்த முதிர்ச்சியுள்ள சகோதரிகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்களிடம் இருக்கிற நல்ல நல்ல குணங்களைக் கவனியுங்கள். அந்தக் குணங்களை நீங்கள் எப்படிக் காட்டலாம் என்று யோசியுங்கள். ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக இருப்பதற்கு மனத்தாழ்மை ரொம்ப முக்கியம். ஒரு சகோதரி மனத்தாழ்மையாக இருந்தால், அவருக்கு யெகோவாவோடும் மற்றவர்களோடும் நல்ல பந்தம் இருக்கும். உதாரணத்துக்கு, யெகோவாவை நேசிக்கிற ஒரு சகோதரி, அவர் ஏற்படுத்திய தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்—சபையிலும்! குடும்பத்திலும்!—1 கொ. 11:3. w23.12 18-19 ¶3-5
திங்கள், அக்டோபர் 27
‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.’—எபே. 5:28.
ஒரு கணவர் தன்னுடைய மனைவியை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும், உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும், கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவ வேண்டும். கணவர்கள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். யோசிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது, பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வது ஒரு நல்ல கணவராகவும் குடும்பத் தலைவராகவும் ஆவதற்கு உங்களுக்கு உதவும். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு அப்பாவாக ஆகலாம். ஒரு நல்ல அப்பாவாக இருப்பது எப்படி என்று யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (எபே. 6:4) யெகோவா தன்னுடைய மகன் இயேசுமேல் அன்பு வைத்திருந்ததையும், அவரை ஏற்றுக்கொண்டதையும் வெளிப்படையாக சொன்னார். (மத். 3:17) நீங்களும் ஒரு அப்பாவாக ஆகும்போது, உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சொல்லுங்கள். அவர்கள் ஏதாவது நல்ல விஷயங்களை செய்யும்போது வாயாரப் பாராட்டுங்கள். யெகோவாவை மாதிரியே நடந்துகொள்ளும் அப்பாக்களால் நல்ல பிள்ளைகளை வளர்க்க முடியும்; அந்த பிள்ளைகள் முதிர்ச்சியுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும் வளருவார்கள். இதையெல்லாம் செய்வதற்கு இப்போதே நீங்கள் எப்படித் தயாராகலாம்? குடும்பத்திலும் சபையிலும் இருக்கிறவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை செயலில் காட்டுங்கள். அவர்களைத் தாராளமாகப் பாராட்டுங்கள்.—யோவா. 15:9. w23.12 28-29 ¶17-18