பதினாறு வயது இருக்கும்போது ஏட்ரியன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். “பைபிள படிக்க படிக்க என்னை நானே மாத்திக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். மனதில் இருந்த வெறுப்பையும், தொட்டதற்கெல்லாம் அடிதடியில் இறங்கும் பழக்கத்தையும் அவர் தூக்கிப்போட வேண்டியிருந்தது. பழிவாங்குவதைப் பற்றி ரோமர் 12:17-19-ல் படித்த விஷயம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. “நமக்கு நடக்கிற அநியாயத்த யெகோவா கண்டிப்பா சரி செய்வாரு. அதுவும், அவரோட வழியில அவரோட நேரத்தில அதை செய்வாரு. இத புரிஞ்சிக்கிட்டதுனால கொஞ்சம் கொஞ்சமா என்னோட வாழ்க்கைய நான் மாத்திக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார்.
ஒரு நாள் சாயங்காலம் ஏட்ரியனை ஒரு ரவுடி கும்பல் தாக்கியது. முன்பிருந்தே ஏட்ரியனுக்கும் இவர்களுக்கும் ஆகவே ஆகாது. இவரைத் தாக்கிய அந்த ரவுடி கும்பல் தலைவன், “வா! வந்து மோதிப் பாரு” என்று சத்தமாகச் சொன்னான். “அவன ஒரே குத்தா குத்திடணும்னு எனக்கு அப்போ தோனுச்சு” என்று ஏட்ரியன் சொல்கிறார். ஆனால், அவர்களை அப்படி தாக்குவதற்குப் பதிலாக யெகோவாவிடம் சிறிய ஜெபம் செய்துவிட்டு அங்கிருந்து அவர் போய்விட்டார்.
பிறகு என்ன நடந்தது என்று ஏட்ரியன் சொல்கிறார்: “அடுத்த நாள் மறுபடியும் அந்த கும்பலோட தலைவன நான் பாத்தேன். இந்த தடவ அவன் தனியா இருந்தான். அவன பாத்தப்போ கோபம் தலைக்கேருச்சு. ஆனா, கோபத்த கட்டுபடுத்த உதவுங்கனு மனசுக்குள்ள யெகோவாகிட்ட வேண்டுனேன். அப்போ, எதிர்பாக்காத ஒரு விஷயம் நடந்துச்சு. அவன் என்கிட்ட வந்து ‘என்ன மன்னிச்சிடு. நேத்து அப்படி நடந்திருக்கக்கூடாது. எனக்கும் உன்ன மாதிரி ஆகணும். நானும் பைபிள் படிக்கணும்’னு சொன்னான். அப்பதான் கோபத்த கட்டுப்படுத்துனது எவ்வளவு நல்லதா போச்சுனு யோசிச்சு சந்தோஷப்பட்டேன். அதுக்கு அப்புறம் நானும் அவனும் சேர்ந்து பைபிள படிக்க ஆரம்பிச்சோம்.”