பூமி பரதீஸாக மாறுமென நம்பலாமா?
இந்தப் பூமி பூங்காவனம் போன்ற ஒரு பரதீஸாக மாறுமென சிலர் நம்புகிறார்கள். ஆனால் பலர் இந்தப் பூமி தொடர்ந்து நிலைத்திருக்காது என்றே நினைக்கிறார்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ‘பிரபஞ்சத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பினால்’ இந்தக் கோளம் தோன்றியது என பிரையன் லீ மாலினோ எழுதிய புனித பூமி (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது. மனிதன்தானே இந்த பூமியை அழிக்காவிட்டால் நாளாவட்டத்தில் இதுவும் இந்த முழுப் பிரபஞ்சமும் “சிதைவுற்று பழையபடி ஒரு நெருப்புப் பந்துபோல் ஆகிவிடலாம்” என்றும் அது சொல்கிறது.
ஆனால் 17-ம் நூற்றாண்டு ஆங்கில கவிஞர் ஜான் மில்ட்டனுக்கோ இப்படிப்பட்ட எதிர்மறையான கருத்துக்கள் இல்லை. மனித குடும்பத்திற்கு இந்தப் பூமி ஒரு பரதீஸ் வீடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் அதைப் படைத்தார் என பாரடைஸ் லாஸ்ட் என்ற தனது காவியத்தில் அவர் எழுதினார். ஆதியில் இருந்த பரதீஸ் இழக்கப்பட்டது. என்றாலும், அந்தப் பரதீஸ் மீண்டும் ஸ்தாபிக்கப்படும் என மில்ட்டன் நம்பினார். அதாவது, மீட்பர் இயேசு கிறிஸ்து “தமக்கு உண்மையாக இருந்தவர்களுக்கு [ஒருநாள்] பலனளித்து, அவர்களை பரலோகத்திலோ பூமியிலோ பேரின்பமான சூழலில் வாழ வைப்பார்” என நம்பினார். “அப்போது இந்த முழு பூமியும் பரதீஸாகும்” என மில்ட்டன் ஆணித்தரமாக கூறினார்.
பரதீஸ்—பரலோகத்திலா பூமியிலா?
மதப்பற்றுள்ள அநேகர் மில்ட்டனுடைய கருத்தை ஆதரிக்கிறார்கள், அதாவது இந்த பூமியில் பயங்கரங்களையும் கடும் வேதனைகளையும் தாங்கள் சகித்ததற்காக முடிவில் ஏதாவது ஒரு பிரதிபலன் கிடைக்குமென கருதுகிறார்கள். ஆனால் அந்தப் பலனை அவர்கள் எங்கு அனுபவித்து மகிழ்வார்கள்? “பரலோகத்திலா பூமியிலா”? சிலருக்கு இந்தப் பூமியைப் பற்றிய எண்ணமே மனதில் வருவதில்லை. பூமியை விட்டுச் சென்று பரலோகத்தில் வாழும்போதுதான் மக்கள் ‘பேரின்பத்தை’ அனுபவித்து மகிழ்வார்கள் என அவர்கள் சொல்கிறார்கள்.
“எங்கோ தொலை தூரத்திலுள்ள பரலோகத்தில் அல்ல, ஆனால் பூமியில்” மீண்டும் ஸ்தாபிக்கப்படும் பரதீஸில்தான் வாழப்போவதாக இரண்டாம் நூற்றாண்டு இறையியல் வல்லுநர் ஐரீனியஸ் நம்பினார் என பரலோகம்—ஒரு சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் அதன் நூலாசிரியர்களான சி. மக்டனலும் பர்ன்ஹார்ட் லாங்கும் கூறுகிறார்கள். ஜான் கால்வின், மார்ட்டின் லூதர் போன்ற மதத் தலைவர்கள் பரலோகத்திற்கு செல்வதாக நம்பினாலும் “கடவுள் இந்தப் பூமியைப் புதுப்பிப்பார்” என்றும் அவர்கள் நம்பியதாக அப்புத்தகம் சொல்கிறது. பிற மதத்தவரும் இதேவிதமாக நம்பினர். கடவுளுடைய உரிய காலத்தில் மனிதருடைய எல்லா கஷ்டங்களும் நீக்கப்படும்; அப்போது அவர்கள் பூமியில் மனநிறைவுடன் வாழ்வார்கள் என யூதர்கள் சிலர் நம்புவதாகவும்கூட மக்டனல் மற்றும் லாங் சொல்கிறார்கள். பண்டைக் கால பெர்சியருடைய நம்பிக்கையின்படி “ஆதியில் இருந்த நிலைமைக்கு இந்தப் பூமி மீண்டும் மாற்றப்படும், அங்கே ஜனங்கள் மறுபடியும் சமாதானத்தோடு வாழ்வார்கள்” என மத்திய கிழக்கு புராணம் மற்றும் மதம் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) கூறுகிறது.
அப்படியானால், இந்தப் பூமி பரதீஸாக மாறும் என்ற நம்பிக்கைக்கு என்ன ஆனது? நமக்கு இந்தப் பூமியில் வாழ்க்கை தற்காலிகமானது தானா? முதல் நூற்றாண்டு யூத தத்துவஞானி ஃபைலோ நம்பியபடி, ஆவி உலகிற்கு பயணிக்கும் வழியில் ஏற்படும் “ஒரு குறுகிய, பெரும்பாலும் வேதனைமிக்க அனுபவம்” தானா? அல்லது பூமியைப் படைத்து, பூங்காவனம் போன்ற பரதீஸில் மனிதரை கடவுள் குடிவைத்தபோது, அவருக்கு வேறேதாவது நோக்கம் இருந்ததா? இந்த பூமியில் தானே நிஜமான ஆன்மீக திருப்தியையும் பேரின்பத்தையும் மனிதகுலம் அடைய முடியுமா? இந்த விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? சொல்லப்போனால், மீண்டும் ஸ்தாபிக்கப்படும் பரதீஸ் பூமியில் நம்பிக்கை வைப்பது நியாயமானதே என ஏற்கெனவே லட்சோபலட்சம் பேர் நம்பி வருகிறார்கள். நீங்களும் அதே முடிவுக்கு வரலாம்.
[பக்கம் 3-ன் படம்]
பரதீஸை மீண்டும் பெற முடியுமென கவிஞர் ஜான் மில்ட்டன் நம்பினார்
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: பூமி: U.S. Fish & Wildlife Service, Washington, D.C./NASA
[[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
பூமி: U.S. Fish & Wildlife Service, Washington, D.C./NASA; John Milton: Leslie’s