நமக்கு சபை தேவை
1 கோராகின் புத்திரர்கள் யெகோவாவின் சபைக்கான போற்றுதலை ஒருமுறை இவ்வாறு தெரிவித்தார்கள்: “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் ஒரே நாள் நல்லது.” (சங். 84:10) அவர்களுக்கு, இதற்கு ஈடாக அளிப்பதற்கு இந்த உலகத்தினிடம் ஒன்றுமில்லை. அந்த உணர்ச்சிகளில் நீங்கள் பங்குகொள்வீர்களென்றால், சபையை உங்களுடைய வாழ்க்கையின் மையமாக ஆக்கவேண்டும்.
2 அதன் ஆரம்பம் முதற்கொண்டு, கிறிஸ்தவ சபை யெகோவாவின் ஆசீர்வாதம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. (அப். 16:4, 5) நம்மில் ஒருவரும் சபையை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லது சரீரப்பிரகாரமாக நம்மை ஒன்றாக சேர்ப்பதற்கு வெறுமனே ஒரு ஏதுவாக கருதக்கூடாது. எல்லா சமுதாயத்திலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் உற்சாகத்தையும் பலத்தையும் பெறும் ஓர் இடமாக சபை இருக்கிறது. நாம் யெகோவாவால் போதிக்கப்பட்டு ராஜ்ய நடவடிக்கைக்காக ஒழுங்கமைக்கப்படும் பொருட்டு, அது ஐக்கியப்பட்ட கூட்டுறவை அளிக்கிறது.—ஏசா. 2:2.
3 கிறிஸ்தவ சபை, நமக்கு சத்தியத்தை போதிப்பதற்கான ஓர் அடிப்படை வழிமூலமாயிருக்கிறது. (1 தீ. 3:15) இயேசுவின் சீஷர்கள் அனைவரும், கடவுளிடத்திலும் கிறிஸ்துவினிடத்திலும் ஒருவருக்கொருவரிடத்திலும் ஐக்கியத்தில் “ஒன்றாயிருக்க” வேண்டும். (யோவா. 17:20, 21; ஒப்பிடுக: ஏசாயா 54:13.) இந்த உலகத்தில் நாம் எங்கு சென்றாலும்சரி, நம்முடைய சகோதரர்கள் பைபிள் போதனைகளையும் நியமங்களையும் நம்புகிறார்கள், அதற்கு இசைவாக அவர்கள் தங்களை நடத்திக்கொள்கிறார்கள்.
4 சீஷராக்கும்படியான நம்முடைய நியமிப்பை நிறைவேற்றுவதற்கு நாம் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும் ஆயத்தப்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும், காவற்கோபுரம், விழித்தெழு!, நம் ராஜ்ய ஊழியம் ஆகியவை வேதப்பூர்வமான கலந்தாலோசிப்புகளை ஆரம்பிப்பதில் நமக்கு உதவிசெய்ய பயனுள்ள தகவலை அளிக்கின்றன. எவ்வாறு அக்கறையுள்ளவர்களைக் கண்டுபிடித்து அக்கறையை வளர்ப்பது என்பதைக் காண்பிப்பதற்கு நம்முடைய கூட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகமுழுவதும் நாம் காண்கிற அதிகரிப்பு, இந்த வேலையில் நமக்கு பரலோக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.—மத். 28:18-20.
5 சபையின் மூலம், ‘அன்புக்கும் நற்கிரியைக்கும் ஏவப்படும்படி’ நாம் அனுதினமும் உற்சாகத்தைப் பெறுகிறோம். (எபி. 10:24, 25) நாம் சோதனைகளை உண்மைத்தன்மையுடன் சகித்திருக்க பலப்படுத்தப்படுகிறோம். அழுத்தங்களையும் கவலைகளையும் மேற்கொள்வதற்கு அன்பான கண்காணிகள் நமக்கு உதவிசெய்கிறார்கள். (பிர. 4:9-12) நாம் திசைமாறிச் செல்லும் ஆபத்தில் இருக்கும்போது, தேவையான ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட அன்பான கவனிப்பை வேறு எந்த அமைப்பு கொடுக்கிறது?—1 தெ. 5:14.
6 நம்முடைய ஐக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கு அவருடைய அமைப்புடன் நாம் நெருங்கியிருக்க வேண்டுமென்பது யெகோவாவின் சித்தமாயிருக்கிறது. (யோவா. 10:16) உண்மையுள்ள அடிமை வகுப்பாருடன் தொடர்பை காத்துக்கொள்வதற்கு சபை நமக்கு உதவுகிற ஒரு வழி, நம்முடைய உற்சாகத்திற்காக பயணக் கண்காணியை அனுப்புவதன் மூலமாகும். அன்பான வழிநடத்துதலுக்கு நாம் பிரதிபலிப்பது, ஆவிக்குரிய விதத்தில் நம்மை பலமுள்ளவர்களாக வைத்துக்கொள்வதற்கு உதவுகிற நெருக்கத்தில் நம்மை ஒன்றாக சேர்க்கிறது.
7 நம்முடைய ஆவிக்குரிய உயிர்வாழ்விற்கு சபை இன்றியமையாதது. அது இல்லாமல் யெகோவாவை ஏற்கத்தக்க முறையில் வணங்குவது இயலாத காரியமாக இருக்கும். அப்படியானால், யெகோவா என்ன அளித்திருக்கிறாரோ அதனுடன் நெருங்கியிருப்போமாக. அதன் குறிக்கோள்களுக்கு இசைவாக செயல்பட்டு, அதிலிருந்து பெறுகிற ஆலோசனையை உண்மை மனதுடன் பொருத்திப் பிரயோகிப்போமாக. சபை நமக்கு எந்தளவுக்கு அர்த்தமுள்ளதாயிருக்கிறது என்பதை நாம் இந்த முறையில் மாத்திரமே காண்பிக்க முடியும்.—சங். 27:4.