ஆட்களுக்கேற்ற அணுகுமுறை
1. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
1 வெவ்வேறு கலாச்சாரத்தை, மதத்தை சேர்ந்த மக்களிடம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்கித்தார்கள். (கொலோ. 1:23) எல்லோரிடமும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிதான் சொன்னார்கள், ஆனால் ஆட்களுக்கேற்ற விதத்தில் சொன்னார்கள். வேதவசனங்கள்மேல் மதிப்பு வைத்திருந்த யூதர்களிடம், யோவேல் தீர்க்கதரிசனத்தைச் சொல்லி பேதுரு பேச ஆரம்பித்தார். (அப். 2:14-17) ஆனால், கிரேக்கர்களிடம் பவுல் வேறுவிதமாக பேசினார்; அதை அப்போஸ்தலர் 17:22-31-ல் பார்க்கலாம். இன்றும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பைபிளை நம்புகிற ஆட்களிடம் தாராளமாக பைபிளிலிருந்து வாசித்துக் காட்டலாம். ஆனால், பைபிள்மீதோ மதத்தின்மீதோ நம்பிக்கை இல்லாத ஆட்களை, கிறிஸ்தவ மதத்தைச் சேராத ஆட்களை சந்திக்கும்போது படு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.
2. பைபிள்மீது ஆர்வம் காட்டுபவர்களுக்கும் காட்டாதவர்களுக்கும் உதவ பிரசுரங்களை எப்படிப் பயன்படுத்தலாம்?
2 பிரசுரங்களை நன்கு பயன்படுத்துங்கள்: இந்த ஊழிய ஆண்டிலிருந்து பிரசுர அளிப்பு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாறும். பத்திரிகைகளையும் துண்டுப்பிரதிகளையும் சிற்றேடுகளையும் அளிக்க முக்கிய கவனம் கொடுக்கப்படும். பைபிளில் ஜனங்கள் ஆர்வம் காட்டாதபோதிலும், அவர்களுக்கு ஆர்வமூட்டும் விஷயத்தை பிரசுரங்களிலிருந்து காட்டலாம். முதல் சந்திப்பில் பைபிளைப் பயன்படுத்தாவிட்டாலும், வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், படைப்பாளர்மீதும் அவருடைய வார்த்தையின்மீதும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும் நோக்கத்தோடு மறுசந்திப்பு செய்யலாம். அதேசமயம், பைபிளை மதிக்கும் ஆட்களிடம் நேரடியாக பைபிளிலிருந்து பேசலாம், அதற்கேற்ற பிரசுரத்தைக் கொடுக்கலாம். ஆம், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டை அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை கொடுக்கலாம். அந்த மாதத்திற்கான பிரசுர அளிப்பில் இவை இல்லாவிட்டாலும் கொடுக்கலாம். எப்படியானாலும், யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள உதவுவதுதான் நம் நோக்கம்.
3. மக்களின் இருதயம் நிலத்தைப் போன்றது என எப்படிச் சொல்லலாம்?
3 நிலத்தைப் பண்படுத்துங்கள்: மக்களின் இருதயம் நிலத்தைப் போன்றது. (லூக். 8:15) பைபிள் சத்தியம் என்ற விதையை விதைப்பதற்கு முன், சிலருடைய இருதயத்தை நன்றாகப் பண்படுத்த வேண்டியிருக்கும். அப்போதுதான் விதை வேர்விட்டு வளரும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எல்லாவிதமான நிலத்திலும் வெற்றிகரமாக விதைத்து பலன் கண்டார்கள். அதைப் பார்த்த பூரிப்பில் திருப்தி அடைந்தார்கள். (அப். 13:48, 52) நாமும் ஞானமாக ஆட்களுக்கேற்ற அணுகுமுறையைப் பயன்படுத்தும்போது வெற்றி பெறலாம்.